இரவு மணி எட்டை தாண்டிக்கொண்டிருந்தது. தன் அறையில் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. இன்றும் பேசவில்லை அப்பா. பேசட்டும் அவர் மனம் ஆறிய பிறகு பேசட்டும்.
அவள் மனதை இரண்டு, மூன்று நாட்களாய் அந்தக்கேள்வியும் அழுத்திக்கொண்டிருக்கிறது .வசந்தின் அப்பாவுக்கு என்ன ஆனது.?
மனோவை பார்த்து நேரடியாய் கேட்டு விட்டால் என்ன? என் மேல் இன்னமும் கோபமாகத்தான் இருப்பானா?
'இருந்தால் இருக்கட்டும். வேண்டுமானால் மனம் ஆறும் வரை என்னை திட்டிக்கொள்ளட்டும்'. வாங்கிக்கொள்கிறேன் என்னை திட்டுவதற்கு அவனுக்கில்லாத உரிமையா?
அவனிடம் பேசிவிடும் நோக்கத்தில் கீழே இறங்கி மனோ வீட்டினுள் நுழைந்தாள் அர்ச்சனா.
அங்கே ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டு அமர்ந்திருந்த விவேக் சட்டென நிமிர்ந்தான்.அவனை கண்டுக்கொள்ளாமல் உள்ளே சென்று பார்த்தாள் அர்ச்சனா.
மனோவும்,ஸ்வேதாவும் வீட்டில் இருப்பதாக தெரியவில்லை. பேசாமல் அவள் திரும்பி நடந்த போது அழைத்தான் விவேக்.
அர்ச்சனா நில்லு. இங்கே ஒருத்தன் உட்கார்ந்திருக்கேன் நீ கண்டுக்காம போயிட்டிருக்க?
பதில் சொல்லாமல் மாடிப்படி ஏறியவளை பின்தொடர்ந்தான் விவேக்.
நேராக மொட்டை மாடிக்கு சென்று காய்ந்திருக்கும் துணிகளை எடுக்க துவங்கினாள் அர்ச்சனா.
'அர்ச்சனா ப்ளீஸ் என்னை இப்படி டார்ச்சர் பண்ணாதே' அவன் குரல் சற்று உயர்ந்தது.'
அவனுக்கே அவனை பார்க்க வியப்பாய் இருந்தது. அவன் படிப்பிற்கும், அந்தஸ்திற்கும் அவன் யார் பின்னாலும் இப்படி அலைந்ததில்லை. சில நாட்களாய் பித்து பிடித்தவன் போல் சுற்றிக்கொண்டிருக்கிறான் அவன். காதல் ஒரு மனிதனை இப்படியெல்லாம் மாற்றுமா என்ன?
துணிகளை எடுத்துக்கொண்டு நகர எத்தனித்த அர்ச்சனாவை தடுத்துக்கேட்டான் 'உன் கோபம் தீரணும்னா நான் என்ன செய்யணும் சொல்லு?'
பதில் சொல்லாமல் நின்றாள்.
'நான் செஞ்சது தப்புதான். என்னை மன்னிச்சிடு. இனிமே கனவுலே கூட இப்படி செய்ய மாட்டேன்.' போதுமா..?
பேசு அர்ச்சனா. நீ பேசாம, சிரிக்காம எனக்கு பைத்தியம் பிடிச்சா மாதிரி இருக்கு.
சிலையாய் நின்றாள் அர்ச்சனா.
'என்ன செஞ்சா பேசுவே?' அவள் மீதிருந்த நேசம் அவனை இயக்கிகொண்டிருந்தது.
சட்டென கேட்டு விட்டிருந்தான் ' நான் வசந்த்கிட்டே மன்னிப்பு கேட்டுட்டா பேசிடுவியா?
சரேலென நிமிர்ந்தாள் அர்ச்சனா. 'மன்னிப்பு கேட்க வேண்டும் அவன்' என்றே தோன்றியது அவளுக்கு.
'நீ என்கிட்டே பேசுவேன்னு சொல்லு நான் மன்னிப்பு கேட்கிறேன்'
பதில் சொல்லவில்லை அவள். அவன் கண்களை பார்த்தபடியே நின்றிருந்தாள் அர்ச்சனா.
கைப்பேசியை எடுத்து அழுத்தப்போனவனை உள்ளிருந்து ஏதோ ஒன்று தடுத்தது. கேட்டதில்லை. இத்தனை வருட வாழ்க்கையில் அவன் யாரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை. அவனது சுயகெளரவம் அவனை உலுக்கியது.
கண்களை மூடி நிதானமாக சுவாசித்தான் விவேக். கண்களை திறந்து அவள் முகத்தை பார்த்த நிமிடத்தில், அவனுக்குள்ளே ஏதோ ஒன்று சொன்னது 'என் கௌரவத்தை விட அவள் மீதிருக்கும் நேசம் பெரியது'.
அடுத்த நொடி அவன் விரல்கள் வசந்தின் எண்ணை அழுத்திவிட்டிருந்தன.
'மிஸ்டர் வசந்த்? என்றான்
யா. வசந்த் ஹியர்.
'நான் விவேக் பேசறேன்
தொடரும்
Manathile oru paattu episode # 13
Manathile oru paattu episode # 15
{kunena_discuss:683}