(Reading time: 12 - 24 minutes)

டுத்த சில நொடிகளில் அவள் முகம் மலர்ந்து போய் அது பிரதிபலித்த உணர்வுகள்.... அப்படி ஒரு கவிதையை அதுவரை படித்ததில்லை வசந்த்.

சட்டென்று ஏற்பட்ட  மகிழ்ச்சியில் மனம் பொங்கி  கண்கள் விரிய, பார்த்துவிடக்கூடாது  யாரும் என்ற தவிப்பில் கண்கள் ஒரு முறை அலைபாய்ந்து திரும்ப, கன்னங்களில் ஓடிய வெட்க  ரேகைகளுடனும், இதழ்களில் பொங்கிய சிரிப்புடனும் அவனை அவள் நிமிர்ந்து பார்த்த போது.....

சில நொடிகள் மயங்கித்தான் போனான் வசந்த்,

ஏன்? அப்படி பார்க்கறீங்க?

ம்...........? என்றான் 'உன்னை அப்படியே.........

ம்? என்றாள் சற்று திகைத்துப்போனவளாய்.

மெல்ல சுதாரித்து சிரித்தபடியே சொன்னான் 'வசந்த்கிட்டே எதுவும்  சொல்லிடாதே மனோ' அப்படின்னு சொன்னது யாருப்பா இங்கே ?. கூப்பிடுங்க. அவங்களை நான் கொஞ்சம் பார்க்கணும்.

தலைகுனிந்து சிரித்தாள் அர்ச்சனா. 'அதையும் சொல்லிட்டானா அவன்.?

பின்னே? எங்க ப்ரெண்ட்ஷிப்பை என்ன நினைச்சே நீ? சிரித்தான் வசந்த்

சரி வா. வீட்டுக்கு போலாம் அவள் பெட்டியை நகர்த்திக்கொண்டு நகர்ந்தான் வசந்த்.

ஹேய். ஹேய் ப்ளீஸ் எங்கப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னுடுவாரு.

தெரிஞ்சாதானே. தெரிய வேண்டாம் விடு.

ஹையோ ப்ளீஸ். நான் அப்புறம் வரேன். இப்போ ஆபீஸ் கலீக்ஸ்லாம் இருக்காங்க.

அப்புறம்னா எப்போ?

கல்யாணத்துக்கு அப்புறம். அப்பா அப்படிதான் சொன்னார். அவர் பேச்சை கேட்கலைன்னா அப்புறம் ரொம்ப கோபப்படுவார்.

சில நொடிகள் அவள் முகத்தை பார்த்தவன் ஏனோ சட்டென சொல்லிவிட்டான் 'பார்க்கலாம் நான் உன் மேல வெச்சிருக்கற  பாசம் உண்மைன்னா அதுவே உன்னை என்கிட்டே கொண்டு வரும். நம்ம வீட்டுக்கு வராம நீ ஊருக்கு போக முடியாது. பார்க்கலாம்'. 

அந்த நிமிடத்தில் மனதில் தோன்றியதை அப்படியே சொல்லிவிட்டிருந்தான் வசந்த்.

அவன் சொன்னதுபோலே அவன் பாசம் அவளை அவனிடம் கொண்டு வந்து சேர்த்துதான் விட்டிருந்தது. ஆனால் அது கொண்டு வந்து சேர்த்த விதம் அவனை நிறையவே வருத்தப்படுத்தியது

அந்த டைரியின் முதல் பக்கத்தை மறுபடி படித்தான் வசந்த்.

'தாங்க முடியாத வலியில் துடித்து, கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டிருக்கும் போது, மனதிற்குள் இப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமா?

மருத்துவமனையில் இருப்பதுக்கூட இத்தனை இனிமையாக இருக்குமா?

வசந்த் அருகில் இருப்பதாக இருந்தால் நான் பலமுறை அப்படி ஒரு வலியை அனுபவிக்க தயார். மறுபடி, மறுபடி மருத்துவமனையில் சென்று படுத்துக்கொள்ள தயார்.

அதை படிக்க, படிக்க தவிர்க்கவே முடியாமல் அவன் கண்களில் நீர் சேர்ந்து விட்டிருந்தது.

அந்த நிமிடத்தில் கீழிருந்து கேட்டது அனுவின் குரல். டைரியை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு பெருமூச்சுடன் எழுந்தான் வசந்த்.

னுவுக்கும், அவள் குழந்தைக்கும் வாங்கி வந்திருந்த பொருட்களுடன் கீழே இறங்கினான் வசந்த்

கையில் தன் குழந்தையுடன் எதிர்ப்பட்டாள் அனு. ஒன்றரை வயது பெண் குழந்தை அது.

'ஹாய் பூனைக்குட்டி' சிரித்தபடியே குழந்தையை நோக்கி அவன் கைநீட்டிய நிமிடத்தில் அவன் கைகளுக்கு தாவி விட்டிருந்தது அந்த தேவதை.

ஹேய் மாமாவை தெரியுமாடா உனக்கு? குழந்தையின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு, தன்னுடன் இறுக்கிக்கொண்டு, அனுவை பார்த்துக்கேட்டான்  எப்படி டா இருக்கே.?

புன்னகையுடன் தலை அசைத்தாள் அனு. 'சூப்பரா இருக்கேன்'

அவன் வாங்கி வந்திருந்த விளையாட்டு பொருட்களை குழந்தையின் கையில் கொடுத்து, அதன் முகத்தில் பரவிய சந்தோஷத்தையும்,குதூகலத்தையும்  ரசித்துக்கொண்டிருந்தான் வசந்த்.

குழந்தை அப்படியே அனுவை உரித்து வைத்திருந்தது.

அவன் முதன் முதலாக அனுவை பார்த்தபோது அவளுக்கு ஏழு வயது. அப்போது அவளும் இப்படித்தான்  இருந்தாளோ?

மனதை பழைய நினைவுகளில் அலைபாய விடாமல் கேட்டான் 'எங்கே உன் ஆளை காணோம்'

அவர் காலைலேயே ஆபீஸ் போயாச்சு. நீ தூங்கிட்டிருந்தே அதுதான் தொந்தரவு பண்ணலை.

சரியாய் அந்த நேரத்தில் அங்கே வந்தாள் சாந்தினி.

'வாங்கம்மா ஸ்ரீதேவி. குட் மார்னிங்.' சிரித்தபடியே சோபாவில் அமர்ந்தான் வசந்த்

அவள் முகம் மலர்ந்து போனது. குழந்தைக்கு வாங்கி வந்திருந்த பொருட்களை பார்த்தபடியே  அப்பாவியாய் கேட்டாள் சாந்தினி 'எனக்கொண்ணும் gift இல்லையா?

சட்டென நிமிர்ந்தான் வசந்த். எனக்கு நீ இங்கே இருப்பேன்னு தெரியாதே. தெரிஞ்சா ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு? வாங்கிடுவோம்

சாந்தினியின் கண்களில் அப்பாவித்தனமும், முகத்தில் குழந்தைத்தனமும் குடி கொண்டிருப்பதைப்போலவே தோன்றியது. அவனுக்கு.

அவளுக்கு ஏதாவது கதை புக் வாங்கிகொடு போதும். நாள் பூரா பிடிச்சிட்டே இருப்பா.என்றாள் அனு.

அப்படியா? நிறைய படிப்பியா?  கேட்டான் வசந்த்.

'படிக்கறது பூரா லவ் ஸ்டோரீஸ். இல்லைனா ஏதாவது படம் பாத்துட்டே இருப்பா அதுவும் லவ் ஸ்டோரி. ஆனா ஒரே ஒரு கண்டிஷன். ஹீரோவும், ஹீரோயினும் கடைசியிலே ஒண்ணா சேர்ந்துடணும். இல்லைனா அவளாலே தாங்க முடியாது. ஒரு வாரம் அழுதிட்டே இருப்பா' சிரித்தாள் அனு.

ஆச்சரியமாய் பார்த்தான் வசந்த். 'இந்த காலத்தில் இப்படியெல்லாம் இருக்க முடியுமா என்ன?'

'உனக்கு தெரியுமா? எங்க அண்ணனோடது கூட பெரிய லவ் ஸ்டோரி. ஆனா முடிவு .தான் என்னாகும்னு தெரியலை' என்றாள் அனு வசந்தின் முகத்தை பார்த்தபடியே.

அப்படியா? நீங்க லவ் பண்றீங்களா? கண்களில் ஆர்வம் மின்னக்கேட்டாள் சாந்தினி.

சட்டென சுதாரித்தான் வசந்த்.'

நீ வேற. அதெல்லாம் எதுவுமே இல்லை உங்கண்ணி ஏதாவது உளறிட்டிருப்பா. நீ எனக்கு சூடா ஒரு காபி போட்டு எடுத்திட்டு வாயேன்.' சாந்தினியை உள்ளே அனுப்பினான் வசந்த்.

அவள் உள்ளே போனதும் சொன்னான் ' என்ன அனு நீ? அது ஒரு சின்ன குழந்தை மாதிரி இருக்கு. அதுக்கிட்டே போய் லவ் அது, இதுன்னு பேசிட்டிருக்கே. படிக்கிற வயசுலே மனசு கெட்டு போச்சுன்னா கஷ்டமில்லையா?

காபி போட்டுக்கொண்டிருந்த சாந்தினியின் மனம் சுழன்றுக்கொண்டிருந்தது. 'என்ன கதையாம் அவன் கதை? சுவாரஸ்யமாக இருக்குமா? யாராம் அந்த பெண்.?.

யோசிக்கத்துவங்கினாள் சாந்தினி. மேலே இருக்கிறதே அவன் அறை. அதற்குள்ளே போனால் ஏதாவது தெரிய வருமா?

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.