17. ஷைரந்தரி - சகி
மனம் முழுதும் குழப்பம் வியாபித்திருந்தது.
உண்மையில் மனம் ஒரு விசித்ரம் தான்.
ஒரு நொடி,ஒன்றை சிந்திக்கும் மனம்.அடுத்த நொடியே மாற்றம் கொண்டு எடுத்த முடிவை துறக்கிறது.
மனம் ஞானியா??போராளியா??குருவா?சீடனா?
இன்றும் எனக்கு அது குழப்பமாக தான் இருக்கிறது.
யுதீஷ்ட்ரனின் அந்த நடவடிக்கைகளுக்குப் பின்,
அவனோடு பேசுவதை அல்ல,அவனை பார்ப்பதைக் கூட தவிர்த்தாள் ஷைரந்தரி.
அவனோ அவளிடம் பேச ஒரு சந்தர்ப்பம் கூட கிடைக்காதா?என்று ஏங்கினான்.
தவறு..
காதல் கொண்ட மனம் ஏங்கியது.
விடிந்தால்...
பஞ்சாக்ஷர திதி.
ஷைரந்தரியின் விதியை மாற்றும் தினம்.
இரண்டு தினங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வு...
ஷைரந்தரியின் வாழ்க்கையை மாற்ற பார்த்தது.
ஈஸ்வரி வந்தார்.
ஷைரந்தரியை வினய்க்கு திருமணம் செய்யும்படி கேட்டார்.ஆணை பிறப்பித்தார்.
அவர் பேச்சில் இருந்த விஷயம் புரிந்தவன் சிவா ஒருவனே!!!
யுதீஷ்ட்ரனின் இதயம் சுக்கலானது.
ஷைரந்தரி மௌனம் காத்தாள்.
அது,இன்னும் அவனை பலவீனமாக்கியது.
பழம் பகை தீர போகிறது என்பதால்,அனைவருக்கும் அதில் சம்மதமே!!!
நடப்பவை குழப்பத்திற்கே குழப்பம் விளைவிக்கும் என்று தோன்றியது.
நாளை தினம் நடப்பது விபரீதம் ஆகுமா?வினையை தீர்க்குமா??எனக்கும் தெரியவில்லை...
மனம் நொந்துப் போனாள் ஷைரந்தரி.
வினய் மீது அவளுக்கு எந்த விருப்பமும் இல்லை.
ஆனால்,அவனோடு திருமணம்.
நடப்பது அனைத்தும் கை மீறி போவதுப் போல இருந்தது.
"சிவா!"
"ம்..."
"நான் கோவிலுக்கு போகணும் சிவா."
"அதை ஏன் என்கிட்ட கேட்கிற?"
"உன்னை மீறி எங்கேயும் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணேன்ல?"-சிவா பதில் பேசவில்லை.
"போயிட்டு வா!"
"தனியா போகணும்!"-ஒரு நொடி தயங்கினான்.பின்,
"போயிட்டு வாம்மா!"-அனுப்பி வைத்தான்.
ஷைரந்தரியின் விதி எங்கு மாற்றம் கண்டதோ அங்கு சென்றாள்.
கங்கை நதி பாய்வதை குளக்கரையில் அமர்ந்துப் பார்த்தாள்.
தான் இந்த நீர்த்துளியாய் பிறந்திருக்க கூடாதா?என்றது மனம்.
அமைதியாக இருந்தவள் கண்ணீரோடு,
"தாம் அன்று என்னிடத்தில் ஒன்று உரைத்தீர்கள்.
உனது விருப்பம் பேரழிவை உண்டாக்கும் என்றீர்கள்.
மனம் சிற்றின்ப கேளிக்கைகளில் நாட்டம் கொண்டது.
மறுஜென்மம் எடுத்தது.
இன்று..."-அமைதியானாள்.
கூறியவள் அவள் என்றால்...
கேட்பவர் யார்??
தாண்டவப்ரியன்.
அவர் எப்படி அங்கே வந்தார்??
வறியோரின் இடம் தேடி வருவதே வலியோருக்கு சிறப்பல்லவா??
"நடக்கவிருக்கும் நிகழ்வுகள் தெரிந்திருந்தும்,என்னை பிறப்பெடுக்க ஏன் அனுமதித்தீர்?"
தாண்டவப்ரியனிடம் இருந்து பெருமூச்சு வெளியானது.
"நீ வேள்வியில் பிறந்தவள் ஷைரந்தரி.இந்த ஜென்மத்திலும் ஒரு தாயின் கருவில் நீ அவதரித்திருந்தாலும்,நீ இழுக்கான குருதியை பிறப்பின் இலக்காக கொண்டு பிறக்கவில்லை என்பதை உணர்.
நீ கொண்ட சஞ்சலங்கள் அனைத்தும் உன்னால் தீர்க்க இயலாதா?"
"எதற்காக நான் இப்பிறப்பினை நாடினேன்??
முற்றிய இன்பம் தரும் ஆதிசிவனை நீங்கி,இந்த பாவப்பட்ட பூமியில் பிறப்பெடுக்க காரணம் என்ன?பதில் கூறுங்கள்..."
"மகளே...! நீ பவித்ரத்தில் நெருப்பினை போன்றவள்.
கூறுவதை கேள்...நீ மட்டுமல்ல உலகில் பிறப்பெடுக்கும் எந்த ஆன்மாவும் தங்களின் ஆசாபாசங்களை நிறைவேற்ற பிறக்கின்றன.
அந்த ஆசைகள் தேவர்களின் ஆணையாய் பிறப்பில் இருக்கும்.பின்,அவரவர் வினைப்படி அது துக்கமாய் வியாபிக்கும்.
பிறக்கும் போது,எல்லாம் சிவமே...!
வளரும் போது மனம் சிற்றின்பத்தில் இலயிக்கிறது.
சிறிது கால சந்தோஷம் பெரியதாய் தோன்றுகிறது.
நீ முன்பிறவியில் தவறிழைக்காத பல்லவ தேசத்தின் பிரஜைகளுக்கும் சாபம் அளித்தாய் அல்லவா?"-ஷைரந்தரி எண்ணிப் பார்த்தாள்.
"ஒரு ஸ்திரியின் மானத்திற்கு பங்கம் விளைவிப்பதை வேடிக்கை பார்த்த பல்லவ தேசத்தின் பிரஜைகளே...
கங்கையின் புதல்வியாகிய நான்.... இம்மண்ணில் இனி கங்கை நதி பாயாது என சாபமளிக்கிறேன்.
இந்த பாஞ்சாலபுர மண் இனி வறட்சி நிறைந்த மண்ணாக தான் இருக்கும்.
இது எனது சாபமாகும்.
வேள்வியில் உதித்தவள் தரும் சாபம்!"-கண்கள் கலங்கியது அவளுக்கு.
"உன் துன்பத்திற்கான காரணம் விளங்கியதா?"
"எனில்...நான் செய்த பாவத்திற்கு பிராயசித்தம் இல்லையா?"
"செய்த பாவத்திற்கு நிச்சயம் பரிகாரம் உண்டு.ஆனால், அது தண்டனையை குறைக்குமே அன்றி,நிச்சயம் நீக்காது."
"மனிதன் பாவம் இழைக்காமல் வாழ இயலாதா?"
"மனிதன் பிறக்கையில் தன் தாயின் வலியை அதிகமாக்கி பாவம் செய்கிறான்.
ஆனால்,அவன் ஒரு தாயை இந்த பூமிக்கு வழங்கி தன் பாவத்தை நிவர்த்தி செய்கிறான்.
வாழ்வில் ஏதேனும் சந்தர்பங்களில் தவறு இழைப்பது தவறில்லை. ஆனால்,அதை ஸ்விகரிக்க மறுத்து,தண்டனையில் இருந்து தப்பிக்க முயல்வதே பாவத்தை சேர்க்கிறது!"
"இப்படி ஒரு வாழ்வை தாம் படைக்க காரணம்?"
"ஏனென்றால் வாழ்க்கையின் நியதியை ஒருவருக்கு உணர்த்தவே..மனித மனமானது, குருவால் முறையாக வழங்கப்படும் பாடத்தைக் காட்டிலும், அனுபவப் பாடத்தையே அதிக விரும்புகிறது அல்லவா?"
"இந்த ஸ்ருஷ்டியை படைக்க காரணம் என்ன?"
"சற்று சிந்தித்துப் பார் மகளே...
இதோ இங்கு பாயும் ஜீவ நதி இங்கே இல்லை என்றால்???
உடலில் ஓடும் குருதி நின்றது என்றால்???