01. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்
இள மஞ்சள் நிற ஒளிக்கதிர் பூமியெங்கும் பரவி, மண்ணுக்கு அழகு சேர்த்துக்கொண்டிருந்த வேளை, பறவைகள் தங்களது இன்னிசை மொழியில் தனது துணையுடன் கொஞ்சி பேசிக்கொண்டிருந்த பொழுது, வீசும் காற்றில் மெதுவாக தலையை அசைத்து தனது நாளை இனிதே துவங்கியது இளந்தளிர்கள்…
மணியோசையுடன், அந்த குமரனின் பெயரை உச்சரித்தபடி, கையில் கற்பூரத்தட்டோடு கைப்பிடித்தவரின் முன் வந்து நின்றார் கஸ்தூரி…
அன்றைய நாள் இனிதே மனைவியின் திருமுகத்தில் ஆரம்பித்ததை எண்ணி புன்சிரிப்புடன் கற்பூரத்தீபத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு மனைவியை பார்த்தார்…
அவரின் துணைவியோ பதிலுக்கு புன்னகை தந்துவிட்டு சென்றுவிட்டார்…
தூரத்தில் செல்லும் மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தவருக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை… இந்த இருபத்தைந்து வருட திருமண வாழ்க்கையில் வருத்தத்தின் சாயல் கூட தன் அருகே வர அவரின் துணைவி விட்டதில்லை என்பது… அது எப்படி, என்ன மாயம் என்று அவரும் அறிந்துகொள்ள முயற்சித்து தான் பார்த்தார்… ஆனால், ஏனோ அது அவரின் ஏழாம் அறிவுக்கு எட்டாமலே போய்விட்டது…
என்னங்க… யோசிச்சது போதும், காபியை குடிங்க… ஆறிடப்போகுது… என்றபடி வந்து நின்ற மனைவியிடம், இன்று கேட்டே விட வேண்டும் என முடிவெடுத்து,
அது எப்படி கஸ்தூரி என்று ஆரம்பித்தவரை இடைமறித்து, நீங்க என்ன கேட்கப்போறீங்கன்னு எனக்கு தெரியும்… இப்போ உங்களுக்கு பதில் தானே வேணும்… நானே சொல்லுறேன் என்றவர்,
மெதுவாக, அவர் அருகில் வந்து அவர் காதில், ஏன்னா, அழகான உங்க முகத்துல இந்த சிரிப்பு தான் பொருத்தமா இருக்குன்னு வருத்தம் நினைச்சது… அதனால அது எங்கிட்ட வந்து, உன் புருஷன் முகத்துல இந்த சிரிப்பே இருக்கட்டும்… அது எப்பவும் இருக்குற மாதிரி நீ பார்த்துக்கோன்னு எங்கிட்ட சொல்லிட்டு ஓடியேப் போச்சு… என்று சிரித்த மனைவியை, ஆசையாகப் பார்த்தார் இந்திரன்…
கணவரின் பார்வையில் முகம் சிவந்தவர், காபியைக் குடிங்க… சார்… கனவு கண்டது போதும்… என்றபடி சொல்ல,
தன்னிலைக்கு வந்த அவர், காபியை அருந்திவிட்டு, காலி தம்ளரை மனைவியின் கையில் கொடுக்க, அவரோ இந்திரனின் கையில் பேப்பரை கொடுத்துவிட்டு, மறக்காமல் புன்னகை ஒன்றையும் அவரை நோக்கி சிந்திவிட்டு சென்றுவிட்டார் சமையலைறைக்குள்…
பேப்பரை வாங்கியவர், அதில் நேரம் தெரியாமல் மூழ்கிப் போக, அப்போது
அம்மா… என்னோட லன்ச் ரெடியா?... சீக்கிரம்மா… லேட் ஆகுது… என்ற மகளின் குரலில் நாட்டு நடப்பிலிருந்த கவனத்தை வீட்டுப் பக்கம் திருப்பினார்…
இதோ… வந்துட்டேன்… கொஞ்சம் இரு… என்றபடி சமையலறைக்குள் இருந்து குரல் கொடுத்தார் கஸ்தூரி…
ஆமா… இவ்வளவு நேரம் செய்யாததையா இப்போ இந்த இரண்டு நிமிஷத்துல செய்திட போறீங்க… ஏம்மா நீங்க வேற…. காலையிலேயே டென்ஷன் பண்ணுறீங்க… என்று நொந்து கொண்டிருந்த மகளிடம்,
என்னம்மா… ஏன் இப்படி காலையிலேயே இவ்வளவு டென்ஷன்… ரிலாக்ஸ்டா… என்றார் இந்திரன்…
பின்னே என்னப்பா… எனக்கு லேட் ஆகுது… ஆனா, அம்மா என்னடான்னா, அதை கொஞ்சம் கூட கண்டுக்காம அவங்களும் லேட் பண்ணுறாங்கப்பா… என்று சிணுங்கினாள் அவள்…
இந்தா… உன் லன்ச்… பிடி… என்றவர், அவரின் கையில் இரண்டு டிபன் பாக்ஸ்களை திணிக்க, அவள் வழக்கம் போல முறைத்தாள்…
இதற்கெல்லாம் நான் பயந்தவளா என்றபடி கஸ்தூரி பதிலுக்கு பார்க்க…
நீங்க திருந்தவே மாட்டீங்க… உங்களை சொல்லுறதுக்கு பேசாம நான் திருந்திக்கிறது நல்லது…… என்றபடி அவள் நகர,
நில்லுடி… இதையும் பிடி… என்றபடி காலை உணவைக் கையில் கொடுத்தார் கஸ்தூரி…
அதையும் வாங்கியவள், ஹ்ம்… சரி… வரேன்… என்றபடி கஸ்தூரியிடம் சொல்லிவிட்டு,
போயிட்டு வரேன்ப்பா… சீக்கிரம் ஆஃபீஸ் கிளம்புங்க… அங்கே போனதும் எனக்கு போன் பண்ணுங்கப்பா… டாட்டா… அப்பா… என்றபடி தந்தையிடம் செல்லம் கொஞ்சியவளிடம்,
சரிம்மா… இந்து… நீ பார்த்து போயிட்டு வா… என்றபடி இந்திரன் உள்ளே செல்ல எத்தனிக்க,
மனைவியின் சிரிப்பு சத்தம் அவரை செல்ல விடாமல் தடுத்தது…
என்னவென்று திரும்பியவர், மகளின் கோபப் பார்வைக்கு ஆளானார்…
அடடா… இன்னைக்கும் வாய் தவறி சொல்லிட்டேனா?... போச்சுடா இந்திரனே… இன்னைக்கு உன் மகளிடம் உனக்கு அர்ச்சனை காத்திருக்கு… வாங்கிக்க தயாராகு… என்று அவர் மனதிற்குள் தன்னைத் தானே திட்டிக்கொண்டு, பேசிக்கொண்டிருந்த போது,
நீங்களும் திருந்த மாட்டீங்கல்ல அப்பா… அம்மா கூட சேர்ந்து சேர்ந்து நீங்களும் இப்போ எல்லாம் ரொம்ப பண்ண ஆரம்பிச்சிட்டீங்கப்பா… முக்கியமா சொன்ன பேச்சைக் கேட்குறதே இல்லை கொஞ்சம் கூட… என்னவோ பண்ணுங்க… நான் கிளம்புறேன்… என்றபடி தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் இந்திரபாலா…
அவளுக்கு தான் இந்திரா, இந்துன்னு சொன்னால் பிடிக்காதுன்னு தெரியும் தானே… அப்புறம் ஏங்க இப்படி?... என்ற மனைவியின் கேள்விக்கு,
என்ன கஸ்தூரி பண்ணுறது… நானும் எவ்வளவோ முயற்சி பண்ணுறேன்…. ஆனா, எனக்கு சட்டென்று அப்படி கூப்பிட தான் வருது… ஹ்ம்ம்… இந்து அப்படிங்கிற பெயர் எவ்வளவு அழகானது… அதை போய் கூப்பிடாதீங்கன்னு சொல்லுறாளே… அதுதான் எனக்கு புரியலை என்றார் அவர்…
உங்களுக்குப் புரிந்தாலும், அதை என் வாயால் கேட்கணும்னு தானே இப்போ இந்த பீடிகை எல்லாம்… என்று கஸ்தூரி கேட்க,
அவர் முகத்தில் புன்னகை விரிந்தது…
இந்திரன்னு பெயர் வைச்சாலும் வைச்சாங்க… இப்படி சிரிச்சே ஆளை காலி பண்ணுறீங்க… என்றார் கஸ்தூரி…
ஓஹோ… அப்படியா… என்று கேட்டவரிடம், அப்படியேதான்… என்ற கஸ்தூரி, போங்க… சீக்கிரம் ரெடி ஆகிட்டு வாங்க… டிபன் எடுத்து வைக்கிறேன்… என்றார்…
சரிம்மா… என்று செல்லும் கணவனையே இமைக்காமல் பார்த்திருந்தவருக்கு, மகளைப் பற்றிய கவலை மனதில் உண்டானது…
சிறு பிள்ளையிலிருந்தே அவள் இப்படித்தான்… தாய் மீது பாசம் இருந்தாலும், அதை அவள் வெளிக்காட்ட எண்ணும்போதெல்லாம், ஏதாவது ஒரு தடை வந்து விடும் அவளுக்கு… அதனாலே தந்தையிடம் அதிகம் ஒட்டிக்கொண்டாள் அவள்…
அவள் பாசத்தை தாய் மேல் பொழியவில்லை என்று ஒருநாளும் கஸ்தூரி நினைத்து வருத்தப்பட்டதில்லை… ஏனெனில் மகள் மேல் அவர் உயிராக தான் இருந்தார், இருக்கிறார்… அவள் பதிலுக்கு தாயிடம் கொஞ்சவோ, அன்பாகவோ இருக்க முயற்சிக்கும் நேரம் அவள் தடை என்று இன்றளவும் எண்ணிக்கொண்டிருக்கும் விஷயம் வந்துவிடும்…
பின்னர் என்ன, அப்படியே கோபத்தில் இரண்டொரு வார்த்தைகள் கத்திவிட்டு, பேசாமல் போய்விடுவாள்… ஆனால் அது அனைத்தும் தாய் மேல் தான் தவிர, தந்தையிடம் மருந்துக்கும் கோபம் கொண்டதில்லை அவள்…
நிதமும், ஒரு முறையேனும் இந்திரனும் மகளை இந்து என்றழைத்துவிடுவார்… அவளுக்கோ அது கொஞ்சமும் பிடிக்காது… தகப்பனிடத்தில் அதை அவள் சுட்டிக்காட்டிய போதெல்லாம், அவரது மனம் அதை உடனே நினைவு வைத்துக்கொண்டாலும், மறுமுறை மகளைக் காணும்போதோ, இல்லை பேசும்போதோ தானாக அவர் நாவில் இந்து என்ற பெயர் ஒட்டிக்கொள்ளும்…
தாயிடம் கத்துபவள், தந்தையிடம் அவ்வாறு கத்தியதில்லை.. அப்பா… அப்படி கூப்பிடாதீங்கப்பா… ப்ளீஸ்ப்பா… என்று கெஞ்சதான் செய்வாள் என்றும்… இப்போது சில தினங்களாக தான், அவள் அவரிடம் இப்படி சற்று கூடுதலாக வார்த்தைகள் பேசுவது அதுவும் திட்டி…
மகளின் இந்த போக்கு அந்த தாய்க்கு வேதனையை தந்தது…. என்று தான் இவள் புரிந்து கொள்வாளோ என்றிருந்தது அவருக்கு… ஹ்ம்ம்… சிறு பிள்ளை தானே… போக போக புரிந்து கொள்வாள் என்று அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் இப்போது சில நாட்களாக ஆட்டம் கண்டு தான் போனது..
தன் மேல் உள்ள கோபத்தை சாப்பாடு மேல் காட்டிட கூடாதே என்று அவர் யோசித்த போது, மகள் அப்படி செய்ய மாட்டாள் என்ற எண்ணமும் வந்தது… கூடவே, மகள் இன்று பிரச்சினை எதுவும் செய்திடக்கூடாதே போகிற இடத்தில்… என்ற கவலையும் சற்றே எட்டிப்பார்க்க, மௌனமாக அவரது உதடுகள் குமரனை துணைக்கழைத்தது… கடவுளே… துணையிருப்பா என…
அவரை அழைத்த தருணமோ என்னமோ, அவர் மனது பெரும் நிம்மதி அடைந்தது… அவரது கவலையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து தான் போனது சட்டென அவர் கண்கள் கண்ட காட்சியில்…
வரம் தொடரும்…
{kunena_discuss:866}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.