01. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான(?) கதை இது... - தங்கமணி சுவாமினாதன்
அபரஞ்சிதா சிங்கபுரி நாட்டு இளவரசி.பேரழகி.அவளின் அழகு பற்றி அண்டை நாடுகள் ஐம்பத்தாறு தேசங்களுக்கும் பரவியிருந்தது.சிங்கபுரி மன்னனுக்கு தன் மகளிடம் அளவு கடந்த பாசம்.மன்னன் தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி போட்டியில் கலந்து கொள்ள ஐம்பத்தாறு தேசங்களுக்கும் அழைப்பு அனுப்பினான்.அந்தந்த தேசங்களிலிருந்து இளவரசர்கள் வந்து கலந்து கொண்டனர்.
அவர்களில் முல்லை தேசத்து இளவரசன் முகில்தீரன் போட்டியில் வெற்றிபெற்றான்.
அவனுக்கும் அபரஞ்சிதாவுக்கும் உலகமே வியக்கும் வண்ணம் திருமணம் நடந்தது.
ராஜா வீட்டுத் திருமணம் ஆயிற்றே?கேட்கவா வேண்டும்..?
அன்று இரவு...புதுமணத் தம்பதிகள் சந்திக்கும் அறை.மஞ்சத்தில் அமர்ந்திருந்தான் புது மாப்பிள்ளை இளவரசன் முகில்தீரன். மனதினில் கட்டுக்கடங்காத ஆசை.. ஆவல்.
அழகுப் பதுமையென பையப் பைய நடந்து வந்தாள் புதுப் பெண் இளவரசி அபரஞ்சிதா.
அவளின் கைகளைப் பிடித்து தன் அருகில் அமரச் செய்தான் இளவரசன் முகில்தீரன்.
மிக நெருக்கமாக அமர்ந்திருந்த அவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். சட்டென இளவரசன் அபரஞ்சிதாவுக்கு ஜான்சி அறிமுகப்படுத்திய இக்ளூ முத்தம் பதிக்க முயல திடீரென அறையெங்கும் பயங்கர நறுமணம் பரவ ஆரம்பித்தது. அன் நறுமணத்தை நுகர்ந்த அபரஞ்சிதா அப்படியே மயங்கி மஞ்சத்தில் சாய்ந்தாள்.
சிறிது நேரம் கழிந்தது.மெள்ள மெள்ள மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய அபரஞ்சிதா பழையகால சினிமாக்களில் பார்க்கக் கூடாத நிகழ்வினைப் பார்த்துவிட்டால் அப்பட கதானாயகிகள் கண்களை பெரிதாக்கி வலது கை புறங்கையை வாயில் வைத்து வீல் என்று கத்துவதைப்போல் வீரிட்டுக் கத்தினாள்.காரணம் மஞ்சத்தில் அவளின் பக்கத்தில் புது மாப்பிள்ளை இளவரசன் அவளின் கணவன் முகில்தீரன் உடலெங்கும் நீலம் பாய்ந்து விழிகள் குத்திட இறந்து கிடந்தான்.அரண்மனை மட்டுமல்லாது நாடே அல்லோல கல்லோலப் பட்டது.
மன்னனுக்கு திருமணம் ஆன அன்றே மகள் விதவையானது தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது.இளவரசியான தனது மகள் கைம்பெண்ணாக இருந்துவிடக் கூடாது என்று நினைத்த மன்னன் அன்றே மற்ற ஐம்பத்தைந்து தேசங்களுக்கும் தூதுவரை அனுப்பி தன் மகளைத் திருமணம் செய்ய முன் வருமாறு அந்தந்த தேசத்து இளவரசர்களுக்கு ஓலை அனுப்பினான்.
அப்படியே ஐம்பத்தாறு தேசத்து இளவரசர்களும் ஒவ்வொரு நாளாய் ஒவ்வொருவர் இளவரசி அபரஞ்சிதாவை மணந்து முதலிரவு அறையில் உடல் நீலம் பாரிக்க இறந்து போனார்கள்..
இப்படி மகளின் கணவன்மார்கள் தன் பெண்ணொடு மகிழ்ந்திருக்காமலே தினம் ஒருவராய் மாண்டு போவது கண்டு மனம் நொந்துபோன மன்னன் தன் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு அறிவிப்பை பறை அடித்து அறிவித்தான்...அது......அந்த அறிவிப்பு....
அந்த அறிவிப்பு என்னவென்று அடுத்த வாரம் பார்ப்போமா?
தொடரும்...