(Reading time: 5 - 9 minutes)

01. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval  

சூரிய வெம்மைக் குறைந்து காற்று தன் மென் தழுவலை பரப்பிக் கொண்டிருந்த மாலை நேரம். ரூபன் வீட்டின் வாயிலைத் திறந்து உள்ளே வந்துக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்தார் இந்திரா.வழக்கமாக தன்னிடம் அதிகமாக மனம் விட்டுப் பேசாத தன்னுடைய மகன் இந்த சில நாட்களாக தன்னைத் தேடுவதை அவர் உணர்ந்தே இருந்தார். எனவே "என்ன தம்பி இன்றைக்கு ரொம்ப அலைச்சலா?" என்றுக் கேட்டவருக்கு தயக்கமான புன்முறுவலைக் கொடுத்தவன். "ஆமாம் அம்மா" என்று சுருக்கமாக பதிலிறுத்தான். "வா, முதல்ல காபி சாப்பிட்டுக்கோ" என்றதும் கை கால் சுத்தம் செய்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

"நிச்சயத்தை வீட்டிலேயே செய்துக்கலாமேடா , எதுக்காக ஹால்? என்றவரிடம்,"இருக்கட்டும்மா, நிறைய பேர் வருவாங்க, ஹால் தான் வசதியா இருக்கும்" என்று இதற்கு மேல் இதைக் குறித்த கேள்விகள் வேண்டாம் என்பது போல தன் பதிலைச் சொல்லி முடித்துக் கொண்டான்.

"நிச்சயத்தை 4 நாள்ல வச்சிக்கிட்டு மாப்பிள்ளை நீ எதுக்குடா இப்படி அலையுற, தம்பிய சொல்லு எல்லாம் அவன் பார்த்துக்குவான்" என்றவரிடம் சரியென்னும் விதமாக தலையசைத்தான். தான் என்ன  சொன்னாலும் இவன் கேட்கப் போவதில்லை என்றுப் புரிந்தாலும்," அது தான் பையனுங்களுக்கெல்லாம் பார்லர் இருக்காமே, நீயும் கொஞ்சம் போயிட்டு வாயேண்டா, நல்லா ரெடி ஆக வேண்டாமா? "என்றவருக்கு பதில் கூறாமல் அமர்ந்திருந்தவன்.

"அம்மா அவ என்னச் செய்யிறா?" என்றுத் தன் மனைவியாகப் போகிறவளைப் பற்றி விசாரித்தான்.

"இவ்வளவு நேரம் முழிச்சுத் தான் இருந்தா சாயங்காலம் மாத்திரை சாப்பிட்டவுடனே தூக்கம் வந்திட்டுப் போல, இப்பதான் தூங்குறா, முந்தைக்கு இப்போ ரொம்ப நல்லா இருக்கா, நீ கவலைப் படாத, நிச்சயத்துக்கு முன்னால முன்ன மாதிரி ஆயிடுவா" என்றவரின் குரல் அவனை எட்டியதோ இல்லையோ என்று தோன்றும் விதமாக சிந்தை எங்கோ லயித்திருக்க அவன் கண்களில் அடிப்பட்ட பாவனை வந்திருந்தது.

அவனைப் பார்த்த அவருக்கு மனம் உருகியது " தான் கொஞ்சம் முன்னதாக செயல் பட்டிருக்க வேண்டுமோ?, எப்போதும் தன் உள்ளம் குற்றம் சாட்டுவது போல தன் நான்கு பிள்ளைகளில் இவன் விஷயத்தில் மட்டும் எப்போதும் நாம் அலட்சியமாய் இருக்கின்றோமோ? என்று மனம் அழுந்த அவனை தனிமையில் விட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

டைனிங் டேபிளில் இருந்து எழும்பியவன் மூன்று அறைகள் கொண்ட அந்த வீட்டின் மூன்றாவது அறைப் பக்கமாக சென்றான். அந்த அறை அவனுடையது, இப்போது சில நாட்களாக அவனுடைய பட்டாம் பூச்சியின் இருப்பிடமாகி விட்டிருந்தது. அறைக்குள் செல்லாமல் அதை அடுத்து அமைந்திருக்கும் சோபாவில் அமர்ந்தான்.

ஹாலில் நடப்பவை எல்லாம் மிக நன்றாகத் தெரியும் விதமாக அந்த அறை அமைந்து இருந்தது. எத்தனையோ நாட்கள் அவள் தன் வீட்டிற்கு வந்து செய்கிற சேட்டைகள் எல்லாம் அவளறியாத வண்ணம் தன் அறைக்குள்ளேயே அமர்ந்து பார்த்து ரசித்து இருக்கிறான். முந்தைய நினைவுகள் மேலெழ பெருமூச்சை வெளியேற்றியவன்.அறைக்குள் தூங்கிக் கொண்டிருப்பவளை அங்கிருந்து பார்க்க முயன்றான். முழுக்க போர்வையால் மூடிக்கொண்டு மருந்தின் தாக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அவனுடைய தேவதையின் பாதங்கள் மட்டுமே அவனுக்கு தெரிந்தது.

"அத்த பாப்பா , பாப்பா" என்றவனாய் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்துக் கொண்டு தன் மடியில் குழந்தையை வைக்கச் சொன்ன அந்த ஆறு வயது குட்டிப் பையனின் மடியில், துணிகளில் பொதிந்த தன் மகளை வைத்தாள் சாரா.அந்த நேரம் கைகளை அசைத்து, கால்களை உதைத்துக் கொண்டிருந்த அந்தப் பாப்பாவின் குட்டி ரோஸ் நிறக் கைகளும், கால்களும்  அவனுக்கு உலக அதிசயமாக தோன்றியது."பாப்பா கால் எவ்ளோ சாஃப்ட்" என்றபடி கால்களை வருடிச் சிரித்தான்.

அந்த பாதங்களை முதல் முறையாகப் பார்த்த சிந்தனையினின்று வெளி வந்தவன் தன்னையறியாமல் புன்னகைத்தான். எழுந்து அவளைப் பார்க்க அறையினுள்ளே சென்றான்.மருத்துவமனையிலிருந்து அவளை அழைத்து வந்து ஒரிரு நாட்களாகினாலும் அவள் முழித்திருக்கும் போது அவளிடம் செல்லவோ, அவளைப் பார்த்து பேசவோ அவனால் முடியவில்லை. மிக வெறுப்போடு தன் வலதுக் கையை ஒரு முறைப் பார்த்துக் கொண்டான்.அவளைப் பார்க்காமலெல்லாம் என்னால் இருக்க முடியாது. இப்போது தூங்கும் போதே பார்த்து விட்டுச் செல்ல வேண்டும் என்று முடிவுச் செய்துக் கொண்டான்.

 அவள் அருகே சென்று அவனுக்கு மிகவும் பிடித்தமான அந்த முகத்தை ஆசைத் தீரப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது கழுத்தை ஒட்டிய விதமாக அவன் கட்டியிருந்த தாலி அவனைப் பார்த்து கண் சிமிட்டியது.

"எப்படித்தான் நீங்கல்லாம் தினமும் இவ்வளவு பெரிய தாலிச் செயின் போடுறீங்களோ..எனக்கெல்லாம் செயின் மெல்லிசாதான் இருக்கணும். ஏதாவது பங்க்ஷனுக்குனா மட்டும் தான் நான்லாம்உங்களை மாதிரி பெரிய செயின் போடுவேன்."

என்றுப் பெரிய மனுஷியாக தன் அண்ணியிடம் பேசிக் கொண்டிருந்தவளின் ஆசையை கேட்க நேர்ந்ததால் அவளுக்காக செய்த தாலி அது. அதை அவளுக்கு எப்படி அணிவிக்க வேண்டுமென்று தான் பற்பல கற்பனைகள் செய்திருக்க, அவள் சுய நினைவே இல்லாதவளாக இருந்த நேரத்தில் அணிவிக்க நேர்ந்தது குறித்து மறுபடி ஒருமுறை தன்னை நொந்துக் கொண்டான்.

இப்போது அவள் தூக்கத்தில் புரண்டுப் படுக்க அவளது இடதுக் கன்னம் அவனது பார்வைக்கு வந்தது. அந்தக் கொடிய நாளின் நினைவாக அவனது ஆக்ரோஷமான அறையை தாங்கியிருந்த அந்தக் கன்னத்தில் அவனின் வலது கையின் அச்சு இப்போது பெருமளவு மங்கியிருந்தாலும் இன்னும் மறையாமல் இருந்தது.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.