12. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன்
தன்னைப் பார்த்ததும் திடீரென ஹேமாவதி மயங்கிக் கீழே சாய என்ன காரணம் என அறியாத குணசேகரன் ஹேமாவதீ..என்ன ஆயிற்று உனக்கு என்று கேட்டபடியே ஹேமாவதியை நோக்கிக் கீழே குனிந்தான்.
அப்படிக்குனிந்தவன் அவள் மீது கையை வைத்தான்.ஹேமாவதி மீது கையை வைத்தவனின் பார்வை அவனின் கைமீது விழுந்தது.ஐயொ இதென்ன விபரீதம்? என ஓங்கிக் கத்தியபடியே மூர்ச்சையானான்..அதே சமயம் வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஹேமாவ்திக்கு இந்தப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சுந்தரேசன் கீழே விழுந்த ஹேமாவதியை நோக்கி அன்புத் தங்கையே ஹேமாவதீ உனக்கு என்ன நேர்ந்தது என கேட்டுக்கொண்டே கீழே குனிந்தான்.அப்படிக் குனிந்தவன்.. குணசேகரன் இதென்ன விபரீதம் எனக் கத்திக்கொண்டே மூர்ச்சையாகி விழுவதைக் கண்டு ஒன்றும் புரியாமல் கீழே கிடந்த அவனைப் பார்த்தான்.
அடுத்த நொடி ஐயோ!ஐயோ!! இதென்ன கொடுமை..?இதென்ன விபரீதம்.?.இப்படியும் நடக்குமா..? என்று கத்திய படியே மயங்கி விழுந்தான்.மூவரும் யாருமில்லா அத்துவானத்தில் வானம் பார்த்தபடி விழுந்து கிடந்தார்கள்.
இந்தக் கொடுமையைக் காணச் சகிக்காததாலோ என்னவோ நிலவு மேகத்திற்குள் ஓடி ஒளிய கருமேகங்கள் திடீரெச் சூழ்ந்தன.மின்னல் வெட்டியது.அண்ட சராசரமும் கிடுகிடுக்க இடி முழங்கியது.மழை சடசடவெனப் பொழிய மழை நீர் மயங்கிக் கிடந்த மூவரையும் நனைக்க மூவரும் மயக்கம் தெளிந்து எழுந்தனர்.
காளியம்மனுக்கு திருவிழா நடந்ததோ என்னவோ அதற்காகப் போடப்பட்ட கீற்றுக் கொட்டகை போலும் அருகே இருந்தது கண்டு மூவரும் அதற்குள் சென்று நின்றனர்.கனத்த மௌனம் மூவருக்கிடையேயும்.
மழை நின்றது நிலவு மேகம் விட்டு வெளியே வந்து பளீர் என வெளிச்சம் பரப்ப மூவரும் ஒருவர்க்கொருவர் பார்த்துக் கொண்டனர்.நடந்து விட்ட விபரீதம் புரிந்து போக முகத்தில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் ஹேமாவதி...கதறி அழுதனர் குணசேகரனும், சுந்தரேசனும்.
நான் என்ன செய்வேன்?நான் என்ன செய்வேன்?இப்படி ஆகிவிட்டதே..? இனி என்ன செய்வேன்..?என் பதற்றத்தாலும்,பயத்தாலும்,குழப்பத்தாலும்,தடுமாற்றத்தாலும் இப்படியொரு கொடுந்தவற்றைச் செய்கிறோம் என அறியாது செய்து விட்டேனே..?சூழ்ந்திருந்த இருட்டு கூட என்னைப் பழிவாங்கி விட்டதே..?
இப்படி கணவரின் முகத்தை அண்ணனின் உடலிலும் அண்ணனின் முகத்தைக் கணவரின் உடலிலும் வைத்துப் பொருத்திவிட்டேனே..?பாழும் தெய்வம் கூட எனக்கு உதவாமல் கண்களை மூடி இருந்து விட்டதே?இனி என் செய்வேன்? இவ்விருவரில் யார் எனது கணவர்?யார் எனது அண்ணன்?அண்ணனின் முகத்தோடும் கணவரின் உடலோடும் இருப்பவர் எனது கணவரா?கணவரின் முகத்தோடும் அண்ணனின் உடலோடு இருப்பவர் எனது கணவரா?ஐயோ இனி யாரோடு நான் மனைவியாக வாழ்வேன்?நெஞ்சு வெடிக்க அழும் ஹேமாவதியை தேற்ற முடியாமல் குணசேகரனும் சுந்தரேசனு அவளோடும் தாமும் சேர்ந்து அழுதனர்.பாவம் அம்மூவரையும் தேற்ற அங்கே யாருமில்லை.அப்படியே யாராகிலும் இருந்தாலும் என்ன சொல்லி அவர்களைத் தேற்ற முடியும்?சமாதானம் ஆகக் கூடிய விஷயமா அது?..
அழுதழுது என்ன பயன்?அந்த கொடுமையான இரவு கடந்து போனது.பலபலவென விடிய ஆரம்பித்தது.
இலக்கின்றி மூவரும் நடக்க ஆரம்பித்தனர்.அப்படி அவர்கள் சோகத்தோடு நடந்து வந்துகொண்டிருந்த நாள்தான் குதிரைவீரன் முடிசூட்டிக் கொள்ளவிருந்த திருனாள்.ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் அரண்மனை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.அப்படிச் செல்லும் போது குதிரைவீரனின் அறிவு,ஆற்றல், வீரம்,சாகஸம் சமயோசிதம் அனைத்தையும் பற்றி பாட்டாகவும் கதையாகவும் உணர்ச்சி மேம்பட சொல்லிக் கொண்டே சென்றார்கள்.வியந்து பாராட்டினார்கள்.வானளாவப் புகழ்ந்தார்கள்.
அனைத்தையும் கேட்டபடி இலக்கின்றி நடந்து கொண்டிருந்த இம்மூவரில் ஹேமாவதிக்கு சட்டென முடிசூட்டிக்கொண்டு நாட்டுக்கு மன்னனாகவிருக்கும் குதிரைவீரனிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கொடுந்துன்பத்தைக் கூறி அதற்கான தீர்வினைக் கேட்டு பெற வேண்டும் இவ்விருவரில் யாரைத் தனது கணவராக ஏற்றுக் கொள்வது?என்பதை அறிய வேண்டும்..மிகச் சிறந்த சரியான விடையைத் தரக்கூடியவர் குதிரைவீரன் ஒருவராகவே இருக்கமுடியும் எனக் கருதினாள்.ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு அரண்மணை நோக்கி நடந்தாள் ஹேமாவதி.
அரண்மனை வாயிலில் வந்து நின்றார்கள் மூவரும்.குதிரைவீரன் முடிசூட்டிக் கொண்டதற்கான அடையாளமாய் உள்ளிருந்து வந்த வாழ்த்தொலி விண்ணை முட்டியது.பேரிகைகள் முழங்கின.மூவரையும் பார்த்த வாயில் காப்போன் அவர்கள் முகத்தில் அப்பியிருந்த சோகம் கண்டு யாதென வினவினான்.