வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 06 - வத்ஸலா
நேற்று கிட்டதட்ட இதே நேரத்தில் தன்னுடன் விஷ்வா அமர்ந்திருந்த காட்சி தனது கண் முன்னே வந்து போவதை தவிர்க்கவே முடியவில்லை பரத்தால். உள்ளுக்குள் ஏனென்று சொல்ல முடியாத ஒரு தவிப்பு எழுந்தது நிஜம்.
அடுத்த இரண்டு நொடிகளில் தன்னை தானே திட்டிக்கொண்டான் பரத். 'எப்போதிலிருந்து இப்படி பைத்தியமாக ஆகிப்போனேன் நான்??? சின்ன புன்னகையை இதழ்களில் பொருத்திக்கொண்டு அவர்கள் அருகில் வந்தான்.
'என்னாச்சு விஷ்வா??? அருணை ஒரு சாதாரண பார்வை பார்த்துவிட்டு விஷ்வாவை பார்த்து கேட்டான் பரத்.
பரத்தை பார்த்துதும் மலர்ந்து போக தவறவில்லை விஷ்வாவின் முகம். அவன் சட்டென எழுந்து விட பரத்தை மேலிருந்து கீழாக அளந்தபடியே எழுந்தான் அருண்.
'அது.... சின்ன ஆக்சிடென்ட்டா. இன்னைக்கு காலையிலே...'
'ஆக்சிடென்டா??? யாருக்கு விஷ்வா??? அவன் குரலில் கொஞ்சம் படபடப்பு தொற்றிக்கொள்ள...
'நம்ம அஸ்வினிக்கு...' என்றான் விஷ்வா.
தெரியவில்லை பரத்துக்கு. அஸ்வினி யாரென தெரியவில்லை. அந்த ஸ்கூட்டி புயலை அவன் பார்த்ததில்லை.
'யாருடா அஸ்வினி???' என்றான் குழப்பமான பார்வையுடன்
'ஓ... உனக்கு தெரியாது இல்ல அவளை. இரு நேரிலே பாரு. பார்த்தவுடனே புரியும் என்றான் சின்ன கண் சிமிட்டலுடன்.
'சரி இப்போ எப்படி இருக்காங்க ???'
'இப்போ பரவாயில்லைடா. சார் இல்லைனா ரொம்ப கஷ்டமா ஆகி இருந்திருக்கும்' என்றான் அருணை பார்த்தபடியே.
'இன்னைக்கு மார்னிங் 8 மணிக்கு ஆக்சிடென்ட் சொன்னா கேக்காது அது. பறக்கும் ஸ்கூட்டிலே. நல்ல வேளை தலையிலே அடி இல்லை. நிறைய ப்ளட் லாஸ். நானே கொஞ்சம் பதறிட்டேன். இப்போதான் கண் முழிச்சது..' விஷ்வா சொல்ல அவன் வார்த்தைகளில் தேங்கி இருந்த பாசம் புரியாமல் இல்லை பரத்துக்கு.
'யாருடா அஸ்வினி..' மறுபடியும் கொஞ்சம் ஆர்வம் சேர்ந்த குரலில் பரத் கேட்க...
'இரு.. இரு...' சொல்றேன் என்றான் அவன்.
'நம்ம அருண் தான் காலையிலிருந்து அவ கூடவே இருந்திருக்கார். நான் வர வரைக்கும்..... அவ மொபைல்லே நம்பர் பார்த்து எனக்கு இன்ஃபார்ம் பண்ணதும் இவர்தான். இவருக்கு எத்தனை தாங்க்ஸ் சொன்னாலும் போதாது. ஸச் அ நைஸ் ஜென்டில்மேன். இவரை மீட் பண்ணி கொஞ்ச நேரம்தான் ஆச்சு. அதுக்குள்ளே ரொம்ப நாள் பழகின ஒரு ஃபீல்' அருண் தோளை நட்பாக அணைத்துக்கொண்டது விஷ்வாவின் கரம்.
பதிலுக்கு புன்னகைத்தபடியே பரத்தை பார்த்தான் அருண். அருண் எதிர்பார்த்ததை போல் அவன் முகத்தில் எந்த பெரிய மாற்றமும் இல்லை.
'இவனுக்கும் விஷ்வாவுக்கும் என்ன உறவாம்??? இன்னும் அந்த கேள்விக்கான விடை கிடைக்கவில்லை அருணுக்கு.
'சார் யாருன்னு நீங்க சொல்லலையே விஷ்வா...' என்றான் அவன். அந்த கேள்விக்கு பதில் தேடி விடும் அவசரம் அவனிடம். விஷ்வா அபர்ணாவுக்கு உறவென தெரிந்துவிட்ட அந்த நிலையில் இந்த கேள்விக்கு விடை கிடைப்பது மிக அவசியமாக பட்டது.
'யா அருண். இது பரத்...என்னோட...' அவன் முடிப்பதற்குள்
'குட் ஃப்ரெண்ட்...' இடைபுகுந்து முடித்திருந்தான் பரத். அது ஏனோ வேறெந்த கதையையும் அங்கே சொல்ல விருப்பம் இல்லை. என்ன புரிந்ததோ விஷ்வாவும் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை
அவன் கை அருணை நோக்கி நீள அதை பற்றிக்கொண்டான் அவன். நேற்று நடந்தது எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை இருவரும். பரத்தின் முகத்தில் நட்பின் பாவம். அருணிடத்தில் கொஞ்சம் ஆச்சரியம்.
'என் மீது கோபம் இல்லையா இவனுக்கு???'
விஷ்வாவின் குரல் கலைத்தது அவனை. 'எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் அருண். நாங்க போய் அஸ்வினியை பார்த்துட்டு வந்திடறோம்..' பரத்தை அழைத்துக்கொண்டு நகர்ந்தான் அவன்.
ஐ.சி.யூ வில் இருந்து அந்த அறைக்கு மாற்ற பட்டிருந்தாள் அவள். கையில் திரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க உள்ளே நுழைந்தார்கள் இருவரும்.
'அனி...' மெல்ல அழைத்தான் விஷ்வா. மெது மெதுவாக விழி திறந்தாள் அவள். குரலிலும் முகத்திலும் நிறையவே வியப்பும் சந்தோஷமும் நிரம்பியிருக்க..
.'ஹேய்...விஷ்வா... இது... இது யாருடா???' கேட்ட பரத்தை பார்த்து இதமாய் புன்னகைத்தான் விஷ்வா
'நீ யாருன்னு நினைக்கிறே???' குறுகுறு பார்வையுடன் அவனை பார்த்தபடியே கேட்டான்.