அங்கே அஸ்வினி இருக்கும் அறைக்குள் நுழைந்தனர் மூவரும். அரை குறை உறக்கத்தில்தான் இருந்தாள் அஸ்வினி. அஸ்வினியின் அருகில் சென்று அமர்ந்தார் அப்பா. படுத்திருக்கும் மகளின் தலையை இதமாக கோதினார். அவர் கட்டிலுக்கு அருகில் வந்து நின்று எதுவுமே பேசாமல் தங்கையையே பார்த்தபடி நின்றிருந்தாள் அபர்ணா.
கண்ணுக்கு கண்ணாக இரண்டு பெண்களின். ஆனால் அபர்ணாவின் நேர் எதிர்பதம் அஸ்வினி என்று தான் சொல்லவேண்டும். காலிலும் கையிலும் கட்டுகளுடன் படுத்திருந்த மகளை பார்க்கும் போது அவர் கண்களில் தன்னாலேயே நீர் சேர்ந்திருந்தது.
'நடு ரோட்டிலே அடிப்பட்டு கிடந்தாளா அருண். ரொம்ப ரத்தம் போயிடுச்சா???' குரல் தடுமாற கேட்டார்.
அதெல்லாம் இப்போ எதுக்கு அங்கிள். விடுங்க. அதுதான் அஸ்வினி நல்லா ஆயிட்டாங்க இல்லையா..' என்றான் அருண் இதமான குரலில்.
'இல்லப்பா...' என்றார் அவர். அவர் தொனி தன்னாலே ஒருமைக்கு மாறி இருந்தது. அவர் மனம் அருணிடம் கொஞ்சம் நெருங்கி இருந்தது.
'என்னாலே கற்பனை கூட பண்ணி பார்க்க முடியலை. நீ அவ கூடவே இருந்தேன்னு விஷ்வா சொன்னான். இந்த காலத்திலே யார் இப்படி எல்லாம் ஹெல்ப் பண்றாங்க??? என் பொண்ணை காப்பாத்தி கொடுத்திருக்கே உனக்கு பதிலுக்கு நான் என்ன செய்ய போறேன்னு தெரியலை.'
'பதிலுக்கு தானே???' ஒரு முறை அபர்ணாவை பார்த்து புன்னகைத்து விட்டு சொன்னான் அருண். 'நான் சீக்கிரமே ஒரு வரம் கேக்கறேன் உங்க கிட்டே...'
'வரம்தானே கொடுத்திட்டா போச்சு...' சிரித்தார் தந்தை.
அதே நேரத்தில் வெளியே....
விஷ்வாவின் அருகில் வந்தான் பரத். 'உனக்கு இப்போ ஏதாவது ஹெல்ப் வேணுமாடா???
'ஹெல்ப் இப்போ எதுவும் வேண்டாம் பரத். நான் உன்னை அஸ்வினிக்கு அறிமுக படுத்தி வைக்கலாம்னுதான் வர சொன்னேன்.. ஆனா.. இப்போ எல்லாம் வேறே மாதிரி... எனக்கு என்ன செய்யன்னே தெரியலைடா...'
'சரி விடுடா... இப்போ என்ன ஆச்சு???" புன்னகைக்க முயன்றான் பரத். 'நான் கிளம்பட்டுமா விஷ்வா வீட்டுக்கு??? மெதுவாக கேட்டான் அவன்.
'சரிடா..' என்றான் விஷ்வா. ஒரு முறை விஷ்வாவின் அப்பாவை திரும்பி பார்த்தான் பரத்.
'என்னிடம் ஒரு வார்த்தை கூட பேச தோன்றவில்லையா அவருக்கு? தோன்றி இருக்கும் நிச்சியமாக தோன்றி இருக்கும். ஆனால் எது தடுக்கிறதாம் அவரை??? புரியவில்லை. ஆனால் அப்படியே கிளம்பிவிட இவன் மனம் ஒப்பவில்லை'
அப்பாகிட்டே ஒரு வார்த்தை பேசிட்டு கிளம்பறேன் என்று அவரை நோக்கி நடந்தான் பரத். அவனுடனே நடந்தான் விஷ்வா. இவன் அவர் முன்னால் சென்று நிற்க... பல நூறு நினைவுகளில் கண் மூடி மூழ்கிக்கிடந்தவர் சட்டென எழுந்து நின்றார். பரத்தின் முகத்தையே பார்த்திருந்தான் விஷ்வா
'எப்படி இருக்கீங்க... அப்.... ஸ.....ஸார்..' என்றான் சற்றே தழைந்த குரலில்.
அவனை விட்டு அகலவில்லை அவர் பார்வை. அவன் தோற்றமும், அவனது உடையும் அதிலிருந்த கம்பீரமும்.....
'பேன்ட் கிழிஞ்சிருச்சு சார்... புது பேன்ட் வாங்க கொஞ்சம் காசு வேணும்....' என அவரிடம் வந்து நிற்கும் அதே பரத் தானா இவன்???
'ஸார்...' என்றான் மறுபடியும். 'என்ன சார் அப்படி பாக்கறீங்க..'
'அது... வந்து..... என்ன கேட்டே???'
'எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்..' புன்னகைதான் பரத்.
'நல்லா இருக்கேன்பா'
'சரி சார் நான் வீட்டுக்கு கிளம்பறேன்... மார்னிங் முடிஞ்சா வந்து பார்க்கிறேன்.. வரேன்... ' புன்னகைத்து நகர எத்தனித்தவனை ஏதோ ஒன்று தடுத்தது. அபர்ணாவை ஒரு முறை பார்த்து விட துடித்ததோ மனம்???
'அஸ்வினி கிட்டேயும் சொல்லிட்டு கிளம்பறேன்டா' என்று அந்த அறை நோக்கி நகர்ந்தான் பரத். அவனை பின் தொடர்ந்தான் விஷ்வா.
அங்கே அறையினுள்ளே உறக்கத்திலிருந்து கொஞ்சம் விழித்திருந்தாள் அஸ்வினி. மூவருடனும் விடாமல் பேசிக்கொண்டிருந்தான் அருண்.
அஸ்வினியின் அருகே அபர்ணா அமர்ந்திருக்க இருவரையும் ஒப்பிட்டு பார்த்துகொண்டிருந்தது அவன் மனம். ஆரம்பத்திலிருந்து அபர்ணா அணியும் உடைகள் அவனுக்கு பெரிதாக பிடித்ததில்லைதான். மனம் அதிலேயே உழன்றுக்கொண்டிருக்க பேச்சினிடையே சொல்லியே விட்டான் அவன்...
'அஸ்வினி... யூ லுக் வெரி மாடர்ன்... நேத்து ஜீன்ஸ் டி-ஷர்ட் எல்லாம் போட்டிருந்தீங்க இல்லையா??? ரொம்ப நல்லா இருந்தது. உங்க அக்காவுக்கும் கொஞ்சம் இதெல்லாம் சொல்லிக்கொடுங்களேன்... எப்போ பாரு புடவை... பட்டிக்காடு மாதிரி...'
பிடிக்கவே இல்லை அஸ்வினிக்கு. ஒருவரோடு மற்றவரை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் எப்போதுமே அவளுக்கு பிடித்ததே இல்லை. பதில் சொல்லவில்லை அவள். சின்ன முகச்சுளிப்புடன் பார்வையை அவள் திருப்பிக்கொண்டாள் அவள்.
இங்கே அபர்ணாவின் முகம் துவண்டு போயிருந்தது. மனதின் ஓரத்தில் சுருக்கென வலித்ததும் நிஜம்.
'நானும் மாத்திக்கறேன்... இவளை மாதிரி ஜீன்ஸ் எல்லாம் போட்டுக்கறேன்...' அவள் மெல்ல சொல்ல விருட்டென அவளை நோக்கி திரும்பியது அஸ்வினியாகத்தான் இருந்தது.
எதற்காக??? எதற்காக இவள் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமாம்???' கேள்வியாக அவளை பார்த்திருந்தாள் தங்கை.
சரியாக அந்த நொடியில் உள்ளே நுழைந்தான் பரத். அவன் பின்னால் விஷ்வா!!! அஸ்வினியின் அருகில் வந்து சொன்னான் பரத்...
'நான் கிளம்பறேன் அஸ்வினி. டேக் கேர். முடிஞ்சா நாளைக்கு மார்னிங் வரேன்...'
அவள் புன்னகையுடன் தலை அசைக்க மெல்ல விழி நிமிர்த்தினான் பரத். அபர்ணாவை தொட்டது அவன் பார்வை.