04.இது பேய்க் காதல் - புவனேஸ்வரி
முட்டாளடீ நான் ! நின்னை
விண்ணில் தேடினேன்,
மண்ணில் தேடினேன்,
ஆனால் என்னில் தேடிடவில்லையே !
என்னுயிர் சகியே,
என் காதலில் முழு ரூபமே,
மரணம் எனும் வரம் கொடு!
உள்ளத்தில் அடக்கமுடியாத துக்கம்,
என் தேடல் எல்லாம் உன் மடியில் நிரந்தர தூக்கம்!
புகையென எழுந்தவள், அவனின்
சிகை கோதிட,
வெள்ளமாய் உடைந்தது காதலுடன் கண்ணீரும்!
அழைக்கும்போதே பொழிகிறதா மழை?
சொன்னவுடனே பூக்கிறதா மலர்?
சுவைத்தவுடனே இனித்து விடுகிறதா கனி?
எனில் என்னவனின் மனம் காதலை உரைக்காதது தவறாகிடுமோ?
விதி தந்த மரண தண்டனை
இதில் உனக்கென்னடா வேதனை?
உடல் இருந்தபோதே உன் நிழலானேன் நான்!
இன்று உடலைவிட்டு உன் வாசல் வரவில்லையா?
உன் நேசம் நான் அறிவேன்,
என் உருவம் நீ மட்டுமே அறிவாய் !
தொடாமல் காதலை உணர்த்தியவன் நீ! நாம்
தொட்டுக்கொள்ளாமல் காதல் வளர்ந்திடாதோ?
சண்டையிட வரவில்லை! உன்
சங்கடம் காணவும் வரவில்லை! என்னவனே
நின்னை சரணடையவே
ஓடி வந்தேன் உன் சகி!
மொழிந்தாள் தூயவிழி தன் தீர்மானத்தை
பொழிந்தாள் மானசீக முத்தங்களை!
ஸ்பரிசம் இல்லாமலே அவர்களுக்கு
பரிசம் போட்டுவிட்டாள் தூயவிழி!
எள்ளி நகைத்த விதியும் மாறிட
துள்ளி எழுந்தான் தெய்வீகன்!
என்னவளே,
சொன்னது நீதானா?
எனைத் தேடி வந்தவளும் நீதானா?
பிரிவென்பதினி இல்லையா?
நம் நேசத்திற்கு எல்லையே இல்லையா?
இனி இருளில் நடந்தாலும் துணையென வருவாயா?
நான் கண்ணீர் சிந்தினால் அணையென எழுவாயா?
அணைத்திடு என நான் கேட்டுவிட்டால்,
சொர்ப்பனத்தில் வந்து சொக்க வைப்பாயா?
“ ஆமாடா லூசு..இனி எப்பவும் உன்கூடத்தான்”
வெள்ளை சிரிப்பில் பேசி
கொள்ளை அடித்தாள் அவனை!இனி
தொல்லைத்தான் அவள்!
அவனை சுற்றி வரும் செல்லத் தொல்லையவள்!