18. அனு என் அனுராதா - VJ G
அப்போது , சுந்தரம் குறும்புடன் சிரிக்க,
ராதா 'எவ அவ? என்று சொல்லி நிறுத்தி, ‘என் புருஷனை பெருசுன்னது?' என்று சொல்ல, சீனு, ‘சபாஷ் ....,சரியான போட்டி’ என்று சொல்ல, எல்லோரும் வாய்விட்டு சிரித்தனர்
ஆனால் ஆனந்த் முகத்தில் மட்டும் சிரிப்பே இல்லை அவன் கண் ரம்யாவையே தேடின,
‘அட..., என்ன உன் புருஷன் என்ன காமெடி பீஸ் ஆக்கிட்டாரு, அதக் கண்டுக்காம சும்மா என் கிட்ட வந்து சும்மா லவுசு பண்ற? ‘என்று சென்னை தமிழில் பேசினாள்,எல்லோரும் சிரித்தனர், சீனு அவளை பார்த்து கண்ணடித்தான், அவளும் அவனுக்கு தன் முத்தத்தை காற்றில் பறக்கவிட்டாள், அதை சுந்தரம் பார்த்துவிட்டார், அவருக்கு மனசு உல்லாசமாக பறந்தது,
இந்தப் பெண் இருக்குமிடம் சந்தோஷமும் குதூகலமும் இருக்கும் என்று நினைத்தார், ராதாவை பார்த்து ‘ஹவ், டூ யு பீல் நவ் ? ‘என்று கேட்டார், அவளும் அவரைப் பார்த்து உல்லாசமாக சிரித்தாள், அந்தச் சிரிப்பில் அவர் தன்னை இழந்துக் கொண்டிருந்தார்,
ஆனந்தனும் ரம்யாவும் மட்டுமே சந்தோசம் இழந்து காணப் பட்டனர்.
வெங்கடேசனும் அவர் மனைவியும் கூட நாங்க கிளம்பறோம் என்று கிளம்பிவிட்டனர்,
எல்லோரும் கிளம்பிவிட்டனர், ராதா அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டாள், அம்மா, என்று அழைத்தாள், ‘என்னம்மா, நீ என்னிடமிருந்து ரொம்ப விலகுகிறாயோ என்றிருக்கிறது’ என்றாள் ராதா
‘இல்லைம்மா எங்களுக்குத்தான் அப்படியிருக்குது, உனக்கு இந்த உறவெல்லாம் பழைய உறவு, எங்களுக்கு புது உறவு, நீ அழுவது, சிரிப்பது எல்லாமே எங்களுக்கு புதுசு, எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை’ என்றாள் அம்மா,
‘உன், பேரன் எப்படிம்மா இருக்கிறான்?’ என்று கேட்டாள்?
‘அம்மா எதுவானாலும் நான் உன் மகள் இந்த ஜென்மத்தில், உனக்கு எல்லா உரிமையும் உண்டு என்னிடத்தில்,’ என்றாள் ராதா
‘ம்ம் ,’ என்றாள் அவள் அம்மா
‘என்னம்மா உன் மனதில் என்ன இருக்கு சொல், இந்தக் கல்யாணத்தில் உனக்கு இஷ்டமில்லையா? என்று கேட்டாள்
சீ சீ அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் எங்கேம்மா, உனக்கு இப்படி ஒரு இடம் பார்க்க முடியும் அதுவும் உங்களுடைய அன்யோன்யத்தைப் பார்க்கும் போது எங்களால் பேச முடியவில்லை, உன் கதையைக் கேட்டவுடன், எனக்கும், அப்பாவுக்கும், ஏதோ எங்கள் கனவில் இதெல்லாம் நடக்கிற மாதிரி இருக்கு,’ என்றாள் அவள் அம்மா
‘என் கவலையெல்லாம் அடுத்து இரண்டு இருக்கே எப்படி கரை ஏத்தப் போகிறோம்?என்றுதான்,’ என்றாள்
‘ஏம்மா? நான் பண்ண மாட்டேனாம்மா?’ என்றாள்
‘அதில்லேம்மா, நீ இன்னொரு இடத்துக்கு போய்ட்ட, உனக்கே ஒன்றும் செய்யவில்லையே என்றிருக்கிறது எனக்கு, இதில் நீ செய்வேன் என்கிறாய், அதெல்லாம் கூடாதம்மா. இந்த வரையில் மாப்பிள்ளை அப்பா ஆபரேஷனுக்கு எல்லாம் செய்யறார், அது வரை போதும்,’ என்றாள் அவள் அம்மா
‘ ஏன்மா, இப்படி பேசறே, உனக்கு யாரம்மா இருக்கா? என்னை இப்படி ஒதுக்கராயேம்மா?’ என்றாள் ராதா வருத்தத்துடன்
‘அம்மா நான் கேட்க வந்ததே வேறம்மா,’ என்றாள்
‘என்னம்மா? ‘என்றாள் அம்மா
அம்மா, நம்ம ரம்யாவும், ரஞ்சனாவும் கூட கல்யாண வயது வந்துவிட்டார்கள் அம்மா, நம்ம ரம்யாவுக்கும் முதலில் கல்யாணம் செய்து விடுவோம், எனக்குத் ஏற்கனவே தெரியும் நம் ரஞ்சனாவை நம்ம சீனு விருப்பப் படறான் அவனுக்கு ஒரு வேலை கிடைத்தவுடன் அவள் கல்யாணத்தைப் பற்றி பேசலாம், இப்போது நம் ரம்யாவுக்கு பண்ணிவிடுவோம், என்றாள் ராதா
‘அவளுக்கு என்ன அவசரம், அவளுக்கு வரன் பார்க்க வேண்டும், அதன் பிறகு நமக்கு செய்வதற்கு என்ன இருக்கிறது?’ என்றாள் அம்மா
‘இல்லைம்மா, இன்று முழுவதும் நீ அவளைக் கவனிக்கவில்லை, அவள் முகமே சரியில்லை அழுதிருக்கிறாள், அவளுக்கு ஒரு பையனைப் பிடித்திருக்குது, நீ அப்பாவிடம் பேசினால் நான் இவரிடம் பேசி முடித்து விடறேன்மா,’ என்றாள் ராதா
அப்படியா? நானும் பார்த்தேன், ஆனால், அவளுக்கு உன் மேல் பாசம் அதிகம் அதனால்,நீ கல்யாணமாகிப் போகிறாய் என்று சோகமாக இருக்கிறாள் என்று நினைத்தேன்,’ என்றாள்
‘இல்லைம்மா நேற்று வரை அவள் அப்படி இல்லை, இன்று தான் அவள் அப்படி இருக்கிறாள்,’ என்று கூறியதும்
‘அப்போ, அந்தப் பையன் யாரம்மா?’என்று கேட்டாள் அவள் அம்மா
‘அது.... அது …’என்று இழுத்தாள் ராதா
‘அது ஆனந்தன் தாம்மா’ என்றாள் மகள்
‘என்ன பேசுறே? தெரிஞ்சுதான் பேசுறியா? பயித்தியம் , அவளுக்கு பிடிக்குதாம் இவளும் வராள் சிபாரிசுக்கு. சரி நாங்கள் கிளம்பறோம், இனி , இங்கு நாங்க இருக்கக் கூடாது,’ என்று கூறினாள் அம்மா