20. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்
“ஈசனே…”
எம்பெருமானின் பெயரை உச்சரித்து முடித்த பிரம்மரிஷியின் முகத்தில் ஒருவித நிறைவும், கூடவே ஒரு அதிர்வும் தோன்றி மறைய, கண்களின் ஓரத்தில் எட்டிப்பார்த்த கண்ணீர்த்துளிகளை தட்டிவிட்டுவிட்டு லிங்க வடிவத்தில் இருந்த அந்த ஆதிநாதனுக்கு பாலபிஷேகம் செய்ய ஆரம்பித்தார்…
“எல்லாம் வல்ல சிவபெருமானே… உன்னுடைய அம்சத்திலுள்ளவனின் வாழ்விலுள்ள முடிச்சுக்களை அவிழ்க்க ஆரம்பித்து விட்டாய்… அதை தாங்கும் சக்தியை அவனுக்கு கொடு…”
மனதில் இருப்பதை வேண்டுதலாக அந்த சிவனின் முன்பு முன்னிறுத்திவிட்டு அவரின் இமைகள் மீண்டும் மூடிக்கொண்டன…
சதியின் கைகள் அழுத்தியிருந்த ஜெய்யின் இதயம் தாறுமாறாக துடித்துக்கொண்டிருக்க, அவளின் விழிகளின் வழி வந்து கொண்டிருந்த நீரைக்கண்டவனின் மனம் நிலைகொள்ளாமல் தவிக்க, கண்களின் முன், இமைக்கும் நொடியில் கொழுந்துவிட்டெரியும் அக்னி நெஞ்சில் உதயமாக, சட்டென அவளது கரத்தினைப் பிடித்திருந்த அவனது கரம் நழுவியது…
விழிகள் மூடியும் திறந்தும் அல்லாட, பட்டென அந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டான் ஜெய்…
விருவிருவென்று நடந்து வேகத்தைக் கூட்டியவன் எப்போது வீடு வந்து சேர்ந்தான் என்றே தெரியாது தனது அறையில் இருந்தான்…
தலையைப் பிடித்துக்கொண்டவனின் உள்ளம் தானாக பதறிக்கொண்டிருக்க, தண்ணீரை எடுத்து மடக் மடக் என்று விழுங்க, உள்ளே எரியும் நெருப்பை அது கொஞ்சமும் தணித்தபாடில்லை…
பட்டென இமை மூடிக்கொள்கையில், காட்டுத்தீயாக கண்களுக்குள் அக்னி பரவ, தாங்க முடியாது நெஞ்சைப் பிடித்துக்கொண்டான் அவன்…
உதடுகள் தானாக, “சதி......................ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…………….” என முணுமுணுக்க தொடங்க, மெல்ல விழிகளும் அப்படியே கட்டுண்டு நித்திரைக்கு செல்ல ஆரம்பித்தது…
ஜெய் எழுந்ததுமே, அதுவரை இருந்த மோன நிலை அறுபட்டு, ஜெய்யை உன்னிப்பாக கவனிக்கத்தொடங்கினாள் சதி…
அவனது முகத்தில், கண்ணில், ஒருவித வலியும் வேதனையும் தெரிய, அவன் அதை அடக்கப் பாடுபடுவது புரிந்தது…
அவள் அவனின் பின்னே ஓடி வருவதை கூட கவனிக்காமல் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறியிருந்தான் ஜெய்…
சதி வாடிப்போனவளாய் ஹோட்டலின் வாசலில் நின்று கொண்டு அவன் சென்ற திசையையேப் பார்த்துக்கொண்டிருக்க,
“சதி… என்னாச்சும்மா?... எதுக்கு இத்தனை அவசரமா வெளியே வந்த?... ஜெய் எங்க?...”
இஷானின் கேள்விக்கு ஜெய் போன திசையை கைகாட்டியவள்,
தமையனிடம், “நான் வீட்டுக்குப் போறேண்ணா… நீ அப்புறமா தைஜூவ கூட்டிட்டுவா…” என சொல்லி நகன்றவளின் கைப்பிடித்து தடுத்தவன்,
“மூணு பேருமே போகலாம்…” என சொல்ல, இஷான் தனக்காக சொல்கிறான் என புரிந்து கொண்டவள்,
“சரி வாங்க….” என்றபடி ஹோட்டலுக்குள் சென்றாள்…
“என்னடா எங்க போற?...”
“ஹோட்டலுக்குள்ள எதுக்குண்ணா போவாங்க?... சாப்பிடத்தான்…”
“அதுசரிதாண்டா… ஆனா நீ இப்போ வீட்டுக்குப் போகணும்னு தான சொன்ன?...”
“ஆமா சொன்னேன்… இப்போ பசிக்குது… அதனால சாப்பிட்டுட்டு போகலாம்னு நினைக்குறேன்… ஏன் உன் கையில காசு இல்லையா?... இல்லன்னா விடு… நான் அப்பாக்கு போன் போட்டு வர சொல்லிக்கிறேன்… நீ வேணா கிளம்பு… நானும் தைஜூவும் சாப்பிட்டுட்டு அப்பாகூட வீட்டுக்கு வந்துடுறோம்…”
அவள் அழுத்தம் திருத்தமாக சொன்னதும், மேற்கொண்டு கேள்விகள் எதையும் கேட்காமல், தங்கையுடன் உள்ளே சென்றான் இஷான்…
வாயளந்து கொண்டே, இஷானையும், தைஜூவையும் கலாய்த்துக்கொண்டே போன சதியின் முகத்தில் கொஞ்சமும் வருத்தமோ கவலையோ இல்லாதிருந்தது…
இஷானின் ஒட்டுமொத்த கண்பார்வையும் அவள் மீதே இருந்த போதிலும், ஒரு கணம் கூட அவள் முகத்தில் சந்தோஷத்தை தவிர வேறெதையும் காண முடியவில்லை அவனாலும்…
தங்கையின் இந்த சந்தோஷம் அவனுக்கு மகிழ்வை தந்தாலும், கூடவே கலக்கத்தையும் தந்தது…
எதுவும் வெளிக்காட்டாமல் இருக்கும் தங்கையின் மனம் அவனுக்கு வியப்பை அளித்த்து என்றால், தைஜூவிற்கோ சதியின் மனம் புரிந்த்து…
முகத்தில் புன்னகையை தவழவிட்டுக்கொண்டிருப்பவளின் உள்ளம் வேதனையை சுமப்பதை தைஜூவால் உணர முடிந்திடாதா என்ன?...
அதுதான் தினம் தினம் காலையில் சதியின் முகபாவத்தை பார்க்கிறாளே… ஜெய்யினை காணும்போது….
அதைவிட அன்று சதி உளறிய உளறல், ஜெய்யைப் பார்த்தே ஆகவேண்டுமென்ற தவிப்பு… அனைத்தும் கண் முன்னே கண்டவளுக்கு சதியின் இப்போதைய நிலை மட்டும் தெரியாமல் போகுமா என்ன?..
தெரிந்துதான் இருந்தது… இருந்தும் மௌனம் சாதித்தாள் தைஜூவும் சதியிடம் எதையும் வினவாமல்…