(Reading time: 22 - 43 minutes)

யண களைப்பில் இரவில் அசந்து உறங்கிக்கொண்டிருந்தான் ஜெய்… மனதில் சதியின் முகம் வந்து போக, இதழ்கள் தானாய் சதி என்று முணுமுணுத்துக்கொண்டே விரிய, தூக்கத்திலேயே சிரித்தான் ஜெய் தன்னவளை எண்ணி….

புன்னகையுடனே புரண்டு படுத்தவனின் விழிகள் மெல்ல விழித்துக்கொள்ள, எதிரே தனல் நெருப்பும், அதனுடன் சதியும் தெரிய ஆடிப்போனான் ஜெய்…

பட்டென எழுந்தவன் கண்களை கசக்கிக்கொண்டு மீண்டும் பார்க்க, சதி அவனைப்பார்த்து அழுகிறாள்… அழுதவளின் விழி வழி கண்ணீர் வழியும் அதே நேரம், அவள் இதழ்கள் மலர்ந்து விகசிக்கிறது அவனை நோக்கி….. உதட்டில் கண்ணீர் இறங்கும் வேளை, அவளும் நெருப்பில் இறங்குகிறாள்…

“சதி………………………..” என தன்னையும் அறியாது கரம் நீட்டி அவன் அவளை அழைக்க, காட்சிகளும் காற்றில் கலந்த புகையென மாயமாகி போனது இருந்த இடம் தெரியாமல்…

நெற்றியில் முத்து முத்தென பூத்திருந்த வியர்வை அவனுக்கு நிகழ்காலத்தை நினைவூட்ட, மனதில் அவள் இதழ்கள் மலர்ந்தது மட்டுமே நினைவுக்கு வர, கட்டிலை விட்டு சட்டென எழுந்தான் ஜெய் வேகமாய்….

அவன் எழுந்த நேரம் இஷான் வர,

“என்னடா… இன்னும் தூங்கலையா?...” என்ற இஷானின் கவனம் போனிலேயே இருக்க, ஜெய் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்….

போனிலிருந்து கண்களை எடுத்த இஷான், ஜெய்யை உற்றுநோக்க, அவன் முகத்தில் தெரிந்த உணர்ச்சியில் உறைந்து போனான் ஒரு கணம்…

“மச்சான்…. என்னாச்சுடா?.....” என விரைந்து வந்தவன், ஜெய்யின் இரு தோள்களையும் பிடித்து உலுக்க, ஜெய்யின் உடல் லேசாக அதிர்ந்தது…

நெற்றியில் கைவைத்துப் பார்க்கையில் வியர்வையையும் தாண்டி வெப்பம் தீண்ட, இஷானுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…

“என்னடா இப்படி நெருப்பா கொதிக்குது?...” என்றவன் உடனேயே ஜெய்யை கட்டிலில் அமரவைக்க, ஜெய்யோ பொம்மையென இருந்தான்…

“திடீர்னு என்னாச்சு மச்சான் உனக்கு?...” என கேள்விக்கேட்ட இஷான், ஜெய்யிடமிருந்து பதில் வராது போகவே, உடனேயே சென்று பெரியவர்களிடம் தகவல் சொன்னான்….

“ஜெய்…. என்னப்பா?... என்னாச்சு?....” என பரிவுடன் கேட்டுக்கொண்டே சோமநாதன் அவனருகில் அமர, அவன் வாய்திறக்கவில்லை…

“குளிர் ஒத்துக்கலை போல அண்ணா… வாடைக்காத்து வேற வழியெல்லாம்… அவனே கார் வேற ஓட்டிட்டு வந்தான்ல… அந்த களைப்பு வேற… அதான் இப்படி காய்ச்சல் வந்திருக்கு…. ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடுவான்…”

பிரசுதி தமையனுக்கு ஆதரவாய் பேச, தட்சேஷ்வரும் அதை ஆமோதித்தார்…

“ஆமாடா உன் தங்கச்சி சொல்லுறதும் சரிதான்… ரெஸ்ட் எடுக்கட்டும்… சரி ஆகிடும்….” என்று…

“ஆமாண்ணா… இப்போதைக்கு ஜெய் தம்பி நல்லா தூங்கட்டும்… தூங்கி எழுந்தா காலையில சரி ஆகிடுவார்…”

பேசியபடி காதம்பரி ஜெய்க்கு ஒரு மாத்திரையை எடுத்து கொடுத்து போட சொல்ல, இஷான் அதை வாங்கி வைத்துக்கொண்டான்….

“நான் பார்த்துக்கறேன்… நீங்க போங்க….” என இஷான் அனைவரையும் அனுப்ப முற்பட, சோமநாதன் சற்று யோசித்தார்…

“நீங்க வாங்க… அதான் மாப்பிள்ளை இருக்குறார்ல… அவர் பார்த்துப்பார்… வாங்க….” என சோமநாதனை எழுப்பி அங்கிருந்து அழைத்துச் சென்றார் சிதம்பரம்…

மகனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சோமநாதன் சென்ற பிறகு,

“சிவா…..” என குரலில் கலவரத்தோடு உள்ளே நுழைந்தார் பிரம்மரிஷி….

அவரைத் தொடர்ந்து சதியும், தைஜூவும் வர, ஜெய் எதனையும் உணரும் நிலையில் இல்லை சிறிதும்….

“என்னாச்சு இஷான்?... திடீர்னு எப்படி காய்ச்சல்?....”

தைஜூ கவலையோடு இஷானிடம் கேட்டாள்…

“தெரியலை தைஜூ, உங்கிட்ட பேசிட்டு உள்ள வந்தா இவன் நின்னுட்டிருந்தான்… என்னடா ஆச்சுன்னு கேட்டுட்டு தொட்டுப்பார்த்தா காய்ச்சல் அடிக்குது…”

“அண்ணன் நல்லாதான இஷான் இருந்தார்…..”

“ஆமா தைஜூ… திடீர்னு எப்படின்னு தான் எனக்கும் புரியலை… அவனுக்கு குளிர் எல்லாம் தண்ணீர்பட்ட பாடு…. ட்ரெயினிங்க் அப்போ நாங்க பார்க்காத குளிரா?... ஆனா இன்னைக்கு என்னாச்சுன்னு தான் ஒன்னுமே தெரியலை…”

“என்ன இஷான் இது?... இப்படி சொல்லுறீங்க?...”

“வேற என்ன சொல்ல சொல்லுற?... எங்கிட்டயும் பேசலை… பெரியவங்க வந்து பார்த்தப்பவும் கூட ஒருவார்த்தை பேசலை இவன்…”

ஆதங்கத்துடன் ஒலித்தது அவன் குரல்…

“எப்போ இருந்து சிவா இப்படி இருக்குறான் இஷான்?...”

சட்டென கேட்டார் பிரம்மரிஷி…

“ஒரு இருபது நிமிஷம் இருக்கும் தாத்தா….”

அவன் சொன்னதும், ஜெய்யின் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தார் பிரம்மரிஷி…

“ஏதோ பேயறைஞ்ச மாதிரியே இருக்குறான் தாத்தா… எதாவது மோகினி பிசாசாவது இவனை அடிச்சிடுச்சா?...”

கேள்வி கேட்ட இஷானை முறைத்துப்பார்த்தார் பிரம்மரிஷி…

“சிவாக்கு எதுவும் இல்லை… எந்த மோகினியும் அவன் நிழலை கூட தொட முடியாது… மீறி அவனை நெருங்கணும்னு நினைச்சா, நெருப்பில் எரிந்த சாம்பலாகிடுவாங்க…..”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.