19. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்
கண்ணே கனியே உனைக் கைவிடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலைக் கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே
உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள என்னுயிர் தருவேன்
அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் சாயங்காலம் வரும் ராகுகாலத்தை முன்னிட்டு மதியம் மூன்றரை மணிக்கே நிச்சயதார்த்தம் ஆரம்பித்தது.
முதலில் இரு வீட்டு பெரியவர்களும் வந்து அமர சாஸ்த்ரிகள் பிள்ளையார் பூஜையுடன் நிச்சயதார்த்த வைபவத்தை ஆரம்பித்தார். சௌபாக்யவதி. ஸ்வேதாவை, சிரஞ்சீவி. ஹரிக்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய் நிச்சயப் பத்திரிகையை சாஸ்த்ரிகள் வாசித்து, இரு வீட்டு பெரியவர்களிடமும் ஒப்புதல் கையெழுத்து வாங்கினார்.
அதன் பின்னர் மணமகளையும், மணமகனையும் அழைத்து நலங்கிட்டனர். ஹரிக்கு கௌஷிக் சந்தன குங்குமம் இட்டு மாலை சாற்றி அவனின் பரிசாக ஹரிக்கு ப்ரேஸ்லெட் போட்டான். அதேப் போல் கௌரி ஸ்வேதாவிற்கு சந்தன குங்குமம் இட்டு அவளின் சார்பாக ஒரு நெக்லஸ் போட்டாள். பின்னர் ஆலத்தியுடன் நிச்சயம் இனிதே முடிவடைந்தது.
இப்பொழுது கதையில் செம்ம ட்விஸ்ட்..... யாருமே எதிர்பார்க்காத செயல் ஒன்று நடைபெற்றது..... அம்பு பாட்டியும், பங்கு பாட்டியும் ஹரியையும், ஸ்வேதாவையும் அழைத்து தங்கள் சார்பாக வைர மோதிரத்தை கொடுத்து வெஸ்டெர்ன் ஸ்டைலில் ஹரியை ப்ரொபோஸ் செய்ய வைத்து, மாற்றிக் கொள்ள சொல்ல, மண்டபத்தில் இருந்த மொத்த பேருக்குமே தலை சுற்றி மயக்கம் வரும் போல இருந்தது.....
“செம்ம பாட்டி.... உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு ரியாக்ஷன் எதிர்பார்க்கவே இல்லை.... ஏற்கனவே வாங்கி வச்சுட்டேளா”, கௌஷிக் கேட்க, “இல்லைடா இப்போ சாப்பிட்டு போய் வாங்கிண்டு வந்தோம். பாவம் எங்களால குழந்தைகள் ரெண்டும் பார்த்துக்கக்கூட முடியலை”, பங்கஜம் கூற, பரசு தாத்தா ஸ்வேதாவைப் பார்த்து கண்ணடித்தார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
அதன்பிறகு அனைவரும் சென்று ஜானவாசத்திற்கு தயாராகினர். மதியம் நன்றாக தூங்கி எழுந்த பிறகு அனந்து தாத்தாவும் back to form மோடுக்கு வந்துவிட்டார். அனந்து தாத்தா மயங்கி விழுந்த நொடியிலிருந்து பரசு தவித்துப் போய்விட்டார். அன்று இரவு சீட்டு கச்சேரி வித் வெத்தலை சீவல் நிகழ்ச்சிக்கு ஆப்பு வந்து விடுமோ என்று.... நல்லவேளையாக அனந்து விழித்தெழுந்து பரசுவின் வயிற்றில் பாலை வார்த்தார்.
மூன்று தெரு தள்ளி இருந்த கோவிலுக்குச் சென்று கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் கோவிலில் அர்ச்சனை அங்கு ஹரிக்கு மாப்பிள்ளை மரியாதை செய்து, வாசலில் இருந்த காரில் அமர்த்தினான் கௌஷிக். ஜானவாசத்திற்கு கண்டிப்பாக தன்னுடைய ஓபன் டாப் ரோல்ஸ் ராய்ஸ் காரைத்தான் உபயோகிக்க வேண்டும் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார் பங்கஜம் மாமி. அதை பத்து கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவது என்பது நடவாத காரியமாகையால், டோ செய்து இழுத்து செல்ல அசல் ஜானவாஸக் காரை ஏற்பாடு செய்தார் பத்து. உலகத்திலேயே ஜானவாசதிற்கு டோ கார் யூஸ் செய்தது ஹரியின் கல்யாணமாகத்தான் இருக்கும். ஆனால் கல்யாணத்திற்கு வந்த மழலைப் பட்டாளங்களுக்கு இந்த ஏற்பாடு படு குஷியாக இருந்தது. இந்தக் காருக்கும் அந்தக் காருக்கும் தாவிக் கொண்டு இருந்தார்கள்.
கல்யாண மண்டபத்தை ஊர்வலம் நெருங்க மண்டபத்தின் உள்ளிலிருந்து ஸ்வேதாவை அழைத்து வந்து ஹரியின் பக்கத்தில் நிறுத்தி பின் இருவருக்கும் ஆலத்தி சுற்றி மண்டபத்தின் உள் அழைத்து சென்றார்கள். ஹரியின் தோழர்களும், ஸ்வேதாவின் நண்பர்களும் பாட்டுப் பாடி, நடனமாடி அந்த இடத்தையே கலகலப்பாக்கினார்கள். தீபாவிற்கும், ராமிற்கும் திருமணம் முடிந்து அவர்களும் தம்பதி சமேதராக கலந்து கொண்டனர்.
மறுநாள் காலை ஆறு மணி முஹூர்த்தம் என்பதால் அனைவரையும் சென்று சீக்கிரம் படுக்குமாறு பத்துவும், ராமனும் சொல்ல பரசு தாத்தா அனந்துவை எப்படி சீட்டுக் கச்சேரிக்கு அழைப்பது என்று குழம்பினார். அவரின் திரு திரு முழியைப் பார்த்த கௌஷிக் என்னவென்று கேட்க தாத்தா கையால் சீட்டு விளையாடுவதுபோல் அபிநயம் காண்பித்தார்.
தாத்தாவின் அபிநயத்தை கற்பூரமாக புரிந்து கொண்ட கௌஷிக் அனைவரையும் பார்த்து, “நீங்க எல்லாரும் போய்த் தூங்குங்கோ நாளைக்கு உங்க எல்லாருக்கும் ஏகப்பட்ட வேலை இருக்கு, தாத்தாவை இன்னைக்கு ராத்திரி நான் பார்த்துக்கறேன்”, என்று கூறி அனுப்பி வைத்தான்.
எல்லாரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் சென்றவுடன், அனந்து மற்றும் பரசு பார்டியின் சீட்டுக் கச்சேரி ஆரம்பமானது. தாத்தாக்களின் சீட்டுக் கச்சேரி ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் மேட்சை விட விறு விறுப்பாக இருந்தது. பெட்டிங், ஊழல் என்று அரசியலும் நடு நடுவில் நடந்தது. விசாரணைக் கமிஷன் மட்டும்தான் அமைக்கவில்லை. அவர்களின் குரல் வெளியில் கேட்காமல் அடக்கி வைப்பதற்குள் கௌஷிக் படாதபாடுப் பட்டுப் போனான்.
மறுநாள் காலை ஹரியின் காசி யாத்திரையுடன் ஹரி, ஸ்வேதா கல்யாணம் கோலாகலமாக ஆரம்பித்தது. பஞ்சகச்ச வேஷ்டி, குடை, விசிறியுடன் காசிக்குப் போகும் சந்யாசியை, உன் குடும்பம் என்னாகும் நீ யோசி என்று கூறி கையை பிடித்து அழைத்து வந்தார் பத்து.