2018 மகளிர் தின ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் புவனேஸ்வரியுடன் கலந்துரையாடல்
Buvaneswari
Chillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பெயர் புவனேஸ்வரி!
2014ஆம் ஆண்டு நேற்று முன்னிரவில் சிறுகதையின் மூலம் chillzeeயில் அறிமுகமாகி, கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடைய பன்முக திறமையை தன் எழுத்தின் மூலம் வெளிப் படுத்தி கொண்டு இருப்பவர்.
அவருடன் chillzee டீமை சேர்ந்த விசாலி மகளிர் தினத்திற்காக நடத்திய ஜாலி கலந்துரையாடல் இதோ உங்களுக்காக.
விசாலி – வணக்கம் புவனேஸ்வரி! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
புவனேஸ்வரி - சில்சீ மற்றும் தோழிகள் எல்லாருக்குமே இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
விசாலி – நன்றி பா. உங்களை பற்றி சொல்லுங்க :-)
புவனேஸ்வரி - என்னைப் பத்தி சொல்லுற முன்னாடி இந்த பதிவுக்கு நான் என் பாணியில் முகவுரை தரேன்.
நான் முதன்முதலில் சில்சீ வந்தப்போ அங்கிருந்த எழுத்தாளர்கள் சிலருடைய நேர்காணல் மாதிரியான உரையாடலை படிக்க முடிஞ்சது. அது படிக்கும்போதே ரொம்ப ஆர்வமாக இருந்துச்சு.. ஒரு நாள் நாம கூட இப்படி எல்லாம் பேசுவோமானு நினைச்சேன்.. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் பிறகு இதை பண்ணும்போது எனக்கு டக்குனு அது ஞாபகம் வந்துருச்சு..
கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் வழக்கம் போல உளறிட்டேன். மன்னிச்சு மக்களே.. இப்போ சமத்து பொண்ணா சொல்லிடுறேன்.
என்னை பத்தி என்ன சொல்ல? சில்சீல, புவி, கண்ணம்மானு செல்லமா அழைக்கப்படும் குட்டி எழுத்தாளினி. மலேசியாதான் பிறந்த நாடு. இதுவரை இந்தியாவிற்கு வரும் வாய்ப்பு அமையவில்லை. அமைத்துகொள்ளும் எண்ணம் இருப்பதால் வருவேன்னு நம்புறேன்.
மத்தபடி “Counselling & Psychology” கொஞ்சமா படிச்சிட்டு, இப்போ வேலை பார்க்கிறேன்.. உடனே “நான் என் மனசுல என்ன நினைக்கிறேன் ? கண்டுபிடிங்க”னு கேட்டுறாதிங்கம்மா.. நான் “Child Psychology” பக்கமிருக்கேன். இந்த பதில் போதும் நினைக்கிறேன்.. எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி முடிக்கும்போது என் கேரக்டர் நீங்களே கணிச்சிடுவிங்க.. சோ அடுத்த கேள்விக்கு போய்டுவோம் :)
விசாலி – நீங்க சைக்காலஜி படித்தவர் என்பது எனக்கு புதிய செய்தி. இந்த சப்ஜெக்ட்டை எப்படி செலக்ட் செய்தீங்க?
புவனேஸ்வரி – என் உடன் பிறவா தங்கை ஒரு "Autism victim". அவங்க ரொம்ப பத்திரமாக வளர்க்கனும்னு ஆசை பட்டேன். ஆனா சூழ்நிலை எங்களை பிரித்து விட்டது. அவங்களுக்காக படிக்கனும் நெனச்சேன். பட் பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை. சோ கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கிற படிப்பு படிக்கனும் நினைச்சேன்.
விசாலி – ஓ! நீங்கள் எழுத்தாளர் ஆனது விபத்தா அல்லது விருப்பபட்டா?
புவனேஸ்வரி - நான் எழுத்தாளர் ஆனது எனக்கு விருப்பமானது தான்மா. ஆனா, என் கதைகள் விபத்தானு படிக்கிறவங்கதான் சொல்லனும் ..ஹீ ஹீ..
விசாலி – எஸ்கேப்பாகுற பதிலா தெரியுதே!! சரி, உங்க முதல் கதை வெளியாகி அதற்கு கிடைத்த வரவேற்பு (அ) பின்னூட்டத்தை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்ன்னு சொல்லுங்க
புவனேஸ்வரி - பொதுவாக ஒரு கதையானது நமக்கு அனுபவமும் சந்தோஷமும் தரும். ஆனா “வேறென்ன வேணும் நீபோதுமே” நாவல் எனக்கு உறவுகளையே தந்துச்சு.. எனக்கு “ஆரு(று)” யிர் தோழிகளையும், சொந்த தங்கையாகவே பாவிக்க கூடிய அக்கா சிலரையும் கொடுத்துச்சு. அந்த கதை ஆரம்பிச்சப்போ எனக்கு மனமுதிர்ச்சி இப்போ இருக்குற அளவு இல்லை.. ஆக, சந்தோஷமான கமெண்ட்ஸ் பார்த்தால் தாமரையாய் முகம் மலரும். எதிர்மறை கமெண்ட்ஸ் பார்த்தால் தொட்டாசிணுங்கி ஆகிடுவேன். அந்த நாட்களை நினைச்சு இப்போ சிரிக்கிறேன்.
ஆனால் முதல் கதையை பொறுத்தமட்டியும் எதிர்மறை கருத்துகள் மிக குறைவு.அதை புத்தக வடிவாக மாற்றும்போது நாந்தான் என்னை திட்டிட்டு இருந்தேன். “ஏன் இப்படி ஒரே காதல் மயமா திகட்ட வெச்சுட்டேனே”னு சில காட்சிகள் எனக்கு திருப்தி தராமல் இருந்தது.
விசாலி – இதுக்கு பேரு ரைட்டரோ-நோ-திருப்தி-போபியா!!!! :-) ஒரு எழுத்தாளராக மாறியப் பிறகு உலகத்தை நீங்கள் பார்க்கும் விதம் மாறி போயிருப்பதாக நினைக்குறீர்களா?
புவனேஸ்வரி - நான் மூளையை அதிகமா பயன்படுத்தி கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்குற ஆளே இல்லைங்க. லூசு மாதிரி ஏதாச்சும் பேசிட்டு ஒரு வாரம் கழிச்சு, “ச்ச இந்த இடத்துல இப்படி பேசிருக்கலாமோ”நு யோசிக்கிற சராசரி பெண். அஜாக்கிரதை உணர்வும் அதிகம். அதுனாலேயோ என்னவோ என்னுடைய பார்வையும் கருத்தும் சில நேரம் வேறுமாறாக இருக்கும். நான் முடிந்த அளவு எனக்கு என்ன தோணுதோ அதை ஒருத்தருக்காவது கதை மூலமாக புரிய வைக்கனும்னு நினைப்பேன். மத்தபடி உலகம் எனக்கு ஒவ்வொரு நாளும் புதுசா எதையோ தந்துட்டே இருக்கு . தினமும் என் பார்வை மாறுது. சில நாட்கள் புல்லை கூட “பட்டிக்கட்டான் மிட்டாய் கடையை பார்த்த கணக்காக பார்த்து கொண்டிருப்பேன்”… ஹீஹீ…