TV Serials - தி கிரவுன் - நெட்ஃப்ளிக்ஸ் [ The Crown - Netflix ] - சீசன் 1 எபிசோட் 02
2016ல் தொடங்கிய இந்த நெட்ஃபிலிக்ஸ் வெப் சீரீஸின் சீசன் 1 2 ஆம் அத்தியாயத்தின் கதை சுருக்கம் இது. முதல் எபிசோட் கதைக்கு தி கிரவுன் - எபிசோட் 1 பக்கத்திற்கு செல்லுங்கள்.
1952
இங்கிலாந்து பிரதமராக இருக்கும் சர்ச்சிலிற்கு வயது அதிகம் ஆகி விட்டதால் அவரால் பிரதமராக தொடர முடியுமா என்று அவருடைய கட்சியில் இருப்பவர்களே கவலைப் பட ஆரம்பிக்கிறார்கள்.
அதை அவர்களால் சர்ச்சிலிடம் நேராக சொல்ல முடியாது என்பதையும் புரிந்துக் கொள்கிறார்கள். அதைப் பற்றி மன்னர் ஜார்ஜால் சர்ச்சிலிடம் பேச முடியுமா என்று கேட்க முடிவு செய்கிறார்கள். அதற்காக சர்ச்சிலின் பாதுகாவலரும் துணைவருமான அந்தோனி ஈடன் ஜார்ஜை சந்திக்கிறார். சர்ச்சில் வயது பற்றி சொல்லி, அவரை ஜார்ஜ் பதவி விலக சொல்ல வேண்டும் என்று அந்தோணி கேட்கிறார். ஆனால் ஜார்ஜ் மன்னர் அதை மறுத்து விடுகிறார்.
அந்தோணி அப்படி மன்னரிடம் பேசிய விபரத்தை சர்ச்சிலின் மனைவி கணவருக்கு தெரியப்படுத்துகிறார். அந்தோணி அப்படி நடந்துக் கொண்டதை நம்ப முடியாமல் வருத்தப் படுகிறார் சர்ச்சில்.
பீட்டர் மார்க்கரெட் நடுவே இருக்கும் உறவு அவர்களை தாண்டி மற்றவர்களின் கண்ணிலும் படுகிறது. பீட்டர் திருமணமானவன் என்பதை ஞாபகப் படுத்தி அவனை மீண்டும் ராணுவ படைக்கு செல்ல அவனுடைய தலைமை அதிகாரி சொல்கிறார். ஆனால் அதை ஏற்க மறுக்கும் பீட்டர் ஜார்ஜ் மன்னரின் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான்.
தந்தை விருப்பதிற்கேற்ப காமன்வெல்த் சுற்றுப்பயணத்தை கணவருடன் தொடங்குகிறாள் எலிசபெத். கென்யாவில் அவர்களின் சுற்றுப்பயணம் நல்ல விதத்தில் செல்கிறது.
எலிசபெத் நைரோபிக்கு வந்ததைப் பற்றிய செய்தி அறிக்கையைப் டிவியில் பார்க்கிறார் ஜார்ஜ். அவரது முகத்தில் அமைதி ஏற்படுகிறது. அன்றிரவு தூக்கத்திலேயே மன்னர் இறந்து விடுகிறார்.
அரண்மனை முக்கிய பிரமுகர்களும், சர்ச்சிலும் மன்னர் மறைவு குறித்து வருத்தப்படும் போதே நைரோபியில் இருக்கும் இளவரசி எலிசபெத்தை தொடர்புக் கொள்ளவும் முயற்சிகளை தொடங்குகிறார்கள். ஆனால் இளவரசியை தொடர்புக் கொள்வது பெரிய சவாலாக இருக்கிறது. வேறு வழி இல்லாமல் மன்னர் இறந்த செய்தி டிவி மற்றும் ரேடியோவில் ஒளிபரப்ப படுகிறது. இறுதியில் அந்த செய்தி எலிசபெத்தையும் வந்து சேர்கிறது.
அப்பா இறந்ததற்கு முழுவதுமாக வருத்தப் படவும் எலிசபெத்திற்கு வாய்ப்புக் கொடுக்காமல் அவள் இப்போது ராணி என்பதை மற்றவர்கள் தங்களின் மரியாதையின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். பிலிப், எலிசபெத் இருவருக்குமே அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட போகும் மாற்றம் அப்போது தான் புரிய தொடங்குகிறது.
27 வயதில் அன்றைய நாளின் பிரமாண்டமான நாட்டின் அரசியாகிறாள் எலிசபெத்.
ஒரு அரச பரம்பரையின் insider view போன்ற இந்த வெப் சீரீஸ் உலகெங்கும் மிகவும் பிரபலம். நீங்களும் இதன் பார்வையாளர் என்றால் உங்கள் கருத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.