மனைவியே மகளாகிடு - புவனேஸ்வரி
என்னை கரம் பிடித்து
அன்பால் சிறைப்பிடித்த என் கணவனே,
ஒரே வீட்டில் இருந்தப்படியே
உன் மனைவி எழுதும் காதல் கடிதம் !
உயிரே , நீயும் நானும் சேர்ந்துதான் முடிவெடுத்தோம்
நமது மகள் ஓரிரு வருடங்களுக்கு பிறகு பிறக்கட்டும் என்று !
திருமண வாழ்க்கையை இருவரும் மட்டும்
தனித்து ரசித்து வாழ்ந்து இன்புற்றிருப்போம் என்று !
ஆனால் இன்று நான் மனம் மாறினேன் அன்பே
காரணம் என் உடன்பிறப்பின் மரணம்!
உன்னை மணந்தப்பின் உலகையே மறந்திருந்தேன் நான்
பாவங்களை பார்க்காத சித்தார்த்தன் போல !
உன்னை மணந்தப்பின் நான் கண்ணீரையே மறந்துவிட்டேன்
உலகத்தில் துன்பமும் இருக்கிறது என்பதை மறந்தே போயிருந்தேன் !
இனிய கனவில் மிதந்தவளை உலுக்கி எழுப்பியது
என் உடன்பிறப்பின் மரணம் !
என்னைவிட இளையவன் இன்று
பூமாலை சூடிய புகைப்படமாய் மாறிவிட்டான் !
வாழ்வின் நிதர்சனமும் பிரிவின் துயரும்
என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது !
மரணம் என்பது மாற்ற முடியாத ஒன்றல்லவா ?
இன்று அவன் , நாளை நாம் !
என்றால் , நானும் ஒரு நாள் உன்னை பிரிந்துவிடுவேனா ?
உயிரை உலுக்குகிறது மரண பயம் !
உலகை நீங்கிவிடுவேன் என்று அஞ்சவில்லை
நானின்றி நீ என் செய்வாய் என்ற பதற்றம் தான் !
இன்பமோ துன்பமோ
அதை வார்த்தையால் சொல்ல தெரியாதவன் நீ !
பசித்தாலும் கூட , நானாய்
அழைக்கும்வரை அமைதியாய் இருப்பவன் நீ !
காய்ச்சல் என்றாலும் கூட கடமை தவற மாட்டாய் – ஆனால்
அலுவகத்திற்கு தேவையான பொருட்களை அடிக்கடி மறந்துவிடுவாய் !
கையில் கடிகாரம் இருந்தும்
நேரம் பார்க்க செல்போனை தேடுவாய் !
கோபமாய் ஓரிரு வார்த்தைகள் உதிர்த்து விட்டு
மருண்ட விழிகளுடன் மன்னிப்பும் கேட்பாய் !
திடீர் மௌனமும் திடீர் குதூகலமும்
உனது அடையாளங்கள் !
அனுதினமும் நீ கண்விழிப்பதில் தொடங்கி
இரவு நிலவோடு என்னையும் ரசித்து அணைக்கும்வரை,
நான் உன்னை சார்ந்திருப்பது போலதானே
நீயும் என்னை சார்ந்திருக்கிறாய்!
நானின்றி நீ என்செய்வாய் ?
என்னை தவிர உன்னை அதிகம் புரிந்தவர் யார் ?
உன் கதகதப்பில் விழி மூடிட
உன் உளறல்களை சேகரிக்க ,
உன் மௌனத்தில் மொழி பெயர்க்க
உன் கண்ணீரை துடைத்திட ,
உன் தேடல்களை மீட்டு கொடுக்க
உன் தோளில் தட்டி கொடுக்க ,
உன் மடியில் உறக்கம் தொலைக்க
உன் மார்பில் முகம் புதைக்க ,
உன் கரம் பற்றி நடந்திட
உன் கால்விரல் நகங்களை சீர்திருத்த ,
உன் குறும்புத்தனத்தை தூண்டிவிட
உன் கோபத்தையும் ரசித்திட ,
உன் ஆறுதல்களை வாங்கிக்கொள்ள
உன் ஆதங்கத்தை தாங்கிக்கொள்ள ,
என்னைத்தவிர யார் இருக்கிறார்கள் ?
என்னைவிட யாரால் உன்னை உணர்ந்து கொள்ள முடியும் ?
அதனால்தான் கேட்கிறேன்
என்னைபோலவே உன்னை உயிராய் நேசிக்கும் ஒரு மகள் வேண்டும் !
தாயுமானவன் உன்னை
தாயை போல தாங்கிடுவாள் நம்மகள் !
என் கருவறையில் அவள் அவதரிக்கும்
தருணங்களிலே அவளது கடமைகளை எடுத்துரைப்பேன் !
உன் மௌனபாஷைகளை அவளுக்கும் கற்றுத் தருவேன்
உன் கோபங்களை புன்னகையை மாறிடும் என் குரும்புத்தனத்தை அவளுக்கு சீதனமாக்குவேன் !
இதற்காகவே கேட்கிறேன்
இமைபோல் உன்னை காக்க போகும் நமது இனியவளை !
வரம் கிட்டுமா ?
(கடிதம் படித்த கணவனின் பதில் )
அவசியமில்லை இத்தனை வேதனை !
உன்னை உயிராய் தரித்து விட்ட எனது உடலுக்கு தெரியும் !
நீயில்லா உலகில் எனக்கும் இடமில்லை என்று !
கவலையை விட்டுவிட்டு நீயே எனது மகளாகவும் மாறிடு கண்ணே !
{kunena_discuss:779}