கானல் நீராய் ... சில நேரம் கண்ணீராய் ..! - புவனேஸ்வரி
காதல் ..!
நேராய் நடக்கும் எந்த மனிதனையும்
தலைக்கீழாய் திருப்பி போட்டு விடும் மாயை ..!
காணும் இடமெங்கும் நிறைந்திருக்கும் காற்றுப்போல்
எல்லோருக்கும் ஒரு காதல் ..!
அவரவர் உலகில் அவரவர் மாயை !
எனினும் காதல் என்பதுஎன்ன ?
ஒரே ரசனைகளில் பின்னி பிணைவதா ?
எதிரெதிர் ரசனைகளை ரசித்து நெகிழ்வதா ?
அப்சரஸ் அழகில் மயங்கி விழுவதா ?
ஆணழகின் சிறப்பில் தன்னை தொலைப்பதா ?
பேசிக்கொண்டே இருப்பதா ?
பேசாமல் கவி வடிப்பதா ?
கை கோர்த்து சேர்ந்து நடப்பதா ?
கை விடாமல் இருப்பதா ?
பொறாமையில் அழகு சேர்பதா ?
பொறுமையில் காத்திருப்பதா ?
வாதங்களில் வளர்வதா ?
பிடிவாதங்களில் விட்டு கொடுப்பதா ?
உனக்கென நான் எனக்கென நீ என்பதா ?
நீயும் நானும் வேறல்ல என்பதா ?
இனிமையான உணர்வுக்குள் எத்தனை கேள்விகள் ?
பதில் தேடாமல் மனம் தேடும் தேடலா காதல் ?
மனதின் தேடலின் காதல் என்றால்
அங்கு தேகத்தின் சிலிர்ப்புக்கு என்ன வேலை ?
தேகத்தின் தீண்டல் தான் காதல் என்றால்
எம் முன்னோர் கண்களில் நான் காண்பதும் என்ன ?
தினம் தினம் உலகை மூழ்கடிக்கும் காதல்
என் கண்களுக்கு மட்டும்
கானல் நீராய் ... சில நேரம் கண்ணீராய் ..!
{kunena_discuss:779}