மதுவை ஒழிப்போம் - தங்கமணி சுவாமினாதன்
அங்கிங்கெனாதபடி எங்கும் டாஸ்மாக்..
வேட்டி அவிழ்ந்ததும் தெரியாமல்
விழுந்து கிடக்கும் குடிமகன்
அசிங்கங்கள் நடுவில் அசிங்கமாய்
வீட்டில் அழகாய் மனைவி
அடுக்கடுக்காய் பிள்ளைகள்
அரசு தரும் அரிசி,பருப்பில்
அறை வயிற்றுச் சோறு
மூத்தவன் குப்பை பொறுக்க
இளையவன் பஞ்சர் ஒட்ட
சின்னவள் அடுத்ததைப்
பார்த்துக்கொண்டு அடுப்படியில்
அஞ்சும் பத்துமாய்ச் சேர்த்த காசு-
அஞ்சறைப் பெட்டியில்
மாலையில் வைத்தால்
காலையில் காணாமல்
டாஸ்மாக் கடையில்
இரவு வந்தால் தினமும் கிடைக்கும்
அடியும்,உதையும்-மனைவி
எதிர்த்துக் கேட்டால் மண்டை-
உடைத்து
கொலையும் நடக்கும்..
மது எனும் அரக்கன் வயிற்றுக்குள்-
சென்று..
மூளையெய் அடைந்தால்
மதி அங்கே மறைந்து-மனிதம் அழிந்து
மிருகத்தின் ஆட்சி....
மனிதம் மறைந்து மிருகம் ஆள..
அங்கே தாயாவது,தாரமாவது,மகளாவது?
ஐயோ! வேண்டாமே இந்த மது...
பள்ளிச் சிறுவரையும்,கல்லூரிக்காளையரையும்
தன் நீண்ட கரங்களால்
வாரிச்சுருட்டி வாயில் போடும்-இந்த
மது அரக்கனை-வாருங்கள் பெண்களே
விரட்டியடிப்போம்..
வருங்காலச் சந்ததியர் வளமாய் வாழ
வழி காட்டிக் காத்திடுவோம்....