ஏமாற்றங்களாகும் எதிர்பார்ப்புகள் - சிவரஞ்சனி
நான் உன் அடிமையாகிறேன்,
நீ எனக்கு ஆணையிடாதிருந்தால்!
நான் என்னை உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்,
நீ என்னைப் பணிய வைக்காதிருந்தால்!
நான் என்னை உனக்கு உரிமையாக்குகிறேன்,
நீ என்னை உனது உடைமையாக்காமலிருந்தால்!
என் மொத்த அன்பையும் உனக்கே தருகிறேன்,
நானும் அன்புக்கு அருகதையான உயிர் என்பதை நீ புரிவாயேயானால்!
என் உடல்,உயிர்,உடைமைகளை உனக்கே உரித்தாக்குகிறேன்,
அதன் உன்னதத்தை நீ உணர்வாயேயானால்!
என் விருப்பங்களைத் துறக்கிறேன்,
நீ திணித்தல்களைத் துறப்பாயேயானால்!
உன்னை தெய்வமாகத் துதிக்கிறேன்,
நீ என்னை மனிதப் பிறவியாய் மதிப்பாயேயானால்!
என் சுயத்தையும் இழக்கத் தயார்,
எனக்கும் சுயம் என்று ஒன்று உள்ளதை நீ ஏற்பாயேயானால்!
எல்லாவற்றிற்கும் நான் தயாராகத்தான் இருக்கிறேன்,
ஏனோ எதற்குமே நீ தயாராக மறுக்கிறாய்!!!
{kunena_discuss:779}