கவிதை - மாலைசூடும் நாள் என்றோ? - ப்ரியசகி
விதைக்குள் ஒளிந்த தளிராய்,
என்னுள் வாழும் உன்னை,
இவ்வுலகம் அறியும் விண்ணை
முட்டும் விருட்சமாய் என்று
காணப்போகிறேனோ?
நுனிப்புல் நோகாமல் நடந்து,
கிணற்றடியில் ஓரிரு நிமிடங்கள்
மட்டுமே ரகசியமாய் உனைக்
காணும் நாட்களுக்கு முடிவுமென்றோ?
தெருமுனையில் கண்டவுடன், பிறரறியா
நம் விழிகளின் ஓராயிரம் பார்வை
பரிமாற்றங்களுக்கு விடையுமென்றோ?
காடுகரைகளும், சிற்றோடையும்
மட்டுமே அறிந்த நம் காதலை
ஊரார் அறிந்து, மத்தளங்கள் கொட்ட
நாம் மாலைசூடும் நாள் என்றோ?