யாதுமாகி…
தின காலண்டரில் தேதியை கிழித்த ஜோவிதா, அது காட்டிய தேதியை பார்த்தபடி ஒரு சில வினாடிகள் நின்றாள். இன்றைய தேதி இருபத்தி ஐந்து! அப்படி என்றால் அவள் அவளுடைய கணவனுடன் பேசி முழுதாக ஐந்து நாட்கள் ஆகி விட்டன...
அவளையும் அறியாது ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது... வழக்கம் போல் காலை வேலைகளை தொடங்கியவளின் மனம் மட்டும் கணவனை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது...
வெளிநாட்டிலிருக்கும் அவளின் கணவன் அன்புசெல்வனுடன் ஐந்து நாட்களுக்கு முன் போனில் பொரிந்து தள்ளியது நினைவில் இருந்தது...
“..உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு தெரியுது, தாராளமா நீங்க உங்களுக்கு பிடிச்ச ஒருத்தியை கல்யாணம் செய்துக்கோங்க... லீகலா நாம பிரிஞ்சிடுவோம்...”
அது தான் அவள் சொன்ன இறுதி வாக்கியம். அவள் பேசி முடிக்கும் முன் தொலைபேசி இணைப்பபை அவன் துண்டித்து விட்டான்... அதற்கு பின் மீண்டும் தொடர்புக் கொண்டு பேச அவளுக்கு மனம் வரவில்லை... அவள் சொன்னதும், சொன்ன விதமும் வேண்டுமென்றால் தவறாக இருக்கலாம் ஆனால் அவள் சொல்ல விரும்பியது ஒன்றே ஒன்று தான்... இது போல் பிரிந்து வாழ்வது இனி இயலாத காரியம்!
ஆனால், இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே பேசாமல் இருப்பது? இன்று அவனுடன் பேச வேண்டும் என்று அவள் நினைக்கும் போதே, ஏழு மணி அலாரம் ஒலி எழுப்பியது... இரண்டு பிள்ளைகளையும் பள்ளிக்கு கிளப்ப வேண்டும் என்ற நினைவு வரவும், மற்ற எண்ணங்களை தற்காலமாக ஒதுக்கி, அவசரமாக காலை உணவையையும், மதிய உணவையும் தயார் செய்து, லஞ்ச பாக்ஸ்க்குள் அடைத்து தயாராக வைத்து விட்டு, தூங்கி கொண்டிருந்த இருவரையும் எழுப்பினாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தைகளையும் தயார் செய்து தானும் தயாரகி அவசர அவசரமாக கிளம்பினாள்...