கருத்துக் கதைகள் – 33. வாக்கு சாதுரியம்... - தங்கமணி சுவாமினாதன்
ஒரு ஊரில் பண்டிதர் ஒருவர் இருந்தார்.அவர் மிகவும் நல்லவர்தான்.அவர் வீட்டின் அருகில் குடிகாரன் ஒருவன் இருந்தான்.அவன் சிறு வயதுக்காரன்.சதா குடித்துவிட்டு சத்தம்போட்டுக்கொண்டே இருப்பான்.அவனைக் கண்டால் பண்டிதருக்கு ஆகவே ஆகாது.ஆனாலும் பலமுறை குடிப்பது தவறு என்று அவனுக்குச் சொல்லிப்பார்த்தார்.அவன் கேட்கவே இல்லை.குடியை நிறுத்தவே இல்லை.
ஒரு முறை அவன் நிறையக் குடித்துவிட்டு நடு ரோட்டில் கண்டபடி கத்திக் கொண்டு இருந்தான்.பண்டிதருக்கு அவனை சீண்டிப் பார்க்க ஆசையாய் இருந்ததோ என்னவோ? நேரே அவனிடம் சென்று அடே குடிகாரா உன்னால் கடலைக் குடிக்கமுடியுமா?என்றார்.அப்படிக் குடித்தால் உனக்கு பணம் தருகிறேன் என்றார்.
குடிகாரனுக்குப் பணம் என்றதும் ஆசையாகிவிட்டது.அடுத்த வேளை குடிக்க நல்ல வழி என நினைத்தான்.சற்றும் தாமதிக்காமல் கடலைக் குடிக்கமுடியுமா என்ற யோசனை இல்லாமல் கடலைக்குடிப்பதாக ஒப்புக்கொண்டான்.
இருவரும் பந்தயம் கட்டினர்.குடிகாரனுக்கு சற்று நேரத்தில் போதை தணிந்தது.
அபோதுதான் அவனுக்கு கடலைக் குடிப்பது எளிய செயலா?கடலைக் குடிப்பது சாத்தியமா?என்ற உண்மை தோன்றியது.
பலவாறு சிந்தித்தான்.ஒரு பாதிரியாரிடம் சென்று இது பற்றிக் கேட்டான்.அவர் மிகவும் அன்பானவர்.அவர் இவனுக்கு ஒரு யோசனை சொன்னார்.
மறு நாள் இவன் கடலைக் குடிக்க வேண்டிய நாள்.வேடிக்கை பார்க்கக் கூட்டம் கூடிவிட்டது.பண்டிதரும் வந்து விட்டார்.
ம்..பந்தயம் கட்டியபடி கடலைக் குடி என்றார்.இவன் என்ன செய்யப் போகிறான் என எல்லோரும் ஆவலாய்ப் பார்த்தனர்.
குடிகாரன்..பண்டிதரே நான் கடலைக் குடிக்க தயாராகவே உள்ளேன்.ஆனால் கடலைத்தானே குடிக்கிறேன் என ஒப்புக்கொண்டேன் கடலில் கலக்கும் ஆற்று நீரையும் சேர்த்துக் குடிக்கிறேன் என பந்தயம் கட்டவில்லையே..?எனவே கடலில் கலக்கும் ஆற்று நீரை கடலிலிருந்து பிரித்து எடுங்கள் பின்னர் கடலைக் குடிக்கிறேன் என்றான்.
கடலில் கலக்கும் ஆற்று நீரைப் பிரிப்பது எங்கணம் சாத்தியம்? தோற்றுப்போனார் பண்டிதர். கூடியிருந்தவர்களெல்லாம் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர் குடிகாரனின் வாக்கு சாதுரியத்தைப் பார்த்து.அவர்களுக்குத் தெரியுமா? அது அவனின் சாதுரியம் இல்லை பாதிரியாரின் யோசனை என்று பந்தயப் பணம் அவனுக்குக் கிடைத்தது.அப்பணத்தை நல்ல வழியில் பயன்படுத்தவும் இனி குடியைக் கைவிடவும் பாதிரியாரும் அவனுக்குப் புத்தி சொன்னார்.அவன் அதனைச் செவி மடுத்தானோ? இல்லையோ?கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த வார்த்தையும் எவ்வளவு நாள் வரும்?வாக்கு சாதுரியம் ஒருவனுக்குத் தானாகவே அமைய வேண்டும்.அது குடிகாரனுக்கு வரவே வராது.அவன் பேசுவதெல்லாம் உளரலாகவும் பிதற்றலாகவுமே இருக்கும்.
கதை சொல்லும் கருத்து:
சொல்லுக சொல்லிற் பயனுடைய..பேசும்போது பயனுடைய சொற்களையே பேச வேண்டும்..அவ்வாறின்றி குடிகாரன்போல் கண்டபடி உளறுதல் கூடாது...நன்றி..