கருத்துக் கதைகள் – 47. வேறுபட்ட இரு கண்ணோட்டங்கள் - வின்னி
ஒரு பிரபல எழுத்தாளர் தனது அறையில் அமர்ந்து,தனது பேனாவை எடுத்து எழுதத் தொடங்குகிறார்.
கடந்த ஆண்டு எனது பித்தப்பை வெட்டி எடுக்கப்பட்டது!
அந்த சத்திர சிகிச்சையால் நான் பல தினங்கள் கட்டிலில் கழிக்கவேண்டி வந்தது!
எனக்கு அதே ஆண்டு அறுபது வயதாகியது!
முப்பது வருடங்கள் பத்திரிக்கைத் தொழிலில் நான் விரும்பிச் செய்த ஆசிரியர் தொழிலிலிருந்து இளைப்பாற நேர்ந்தது.
அதே ஆண்டு தாயில்லாமல் என்னை வளர்த்த அப்பா காலமானார்!
அது என்னை ஆழ்ந்த துக்கத்தில் தள்ளியது!
அதே ஆண்டு எனது ஒரே மகன், விபத்தொன்றில் அகப்பட்டு, மருத்துவக் கல்லூரிப் பரீட்சையில் சித்தி அடையவில்லை!
பல நாட்கள் காலில் கட்டுடன் மருத்துவ மனையில் இருந்தான்.
அவன் செலுத்திச் சென்ற வாகனம் முற்றாகச் சேதமடைந்தது!
அதுவும் நட்டத்தில் முடிந்தது.
அவர் கடைசியில்,
‘கடந்த ஆண்டு எனக்கு மிக மோசமானதாகவே இருந்தது’, என்று எழுதி முடித்தார்
கோவிலுக்குச் சென்றிருந்த அவரது மனைவி, அறையில் நுழைகிறாள். கணவன் துக்கமாக, எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை அவதானிக்கிறாள்.
அவரது கதிரைக்குப் பின்னால் நின்று அவர் ஏழுதியதைப் படித்து விட்டு சத்தமில்லாமல் அறையை விட்டு வெளியே போகிறாள்.
சில நிமிடங்களில் அவள் வேறொரு காகிதத் துண்டுடன் திரும்பி வருகிறாள்.
திரும்பி வந்து அந்த காகிதத் துண்டை அவர் எழுதியதற்குப் பக்கத்தில் வைத்து விட்டுப் போகிறாள்.
அவர் அதை எடுத்தபோது அதில் எதோ எழுதியிருப்பதைக் கவனிக்கிறார்.
அதில் எழுதியிருந்தது இதுதான்:
கடந்த ஆண்டு பலவருடங்களாக நான் வலியால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்ததற்குக் காரணமான எனது பித்தப்பை அகற்றப் பட்டு விட்டது. இப்போது வலி இல்லை ஆரோக்கியமாக இருக்கிறேன்.
நல்ல சுகத்தோடு எனது அறுபது வயதில எனது வேலையிலிருந்து பணிஓய்வு எடுத்தேன். முப்பது வருடம் வேலையில் இருந்த மனஅழுத்தம் இப்போது இல்லை.
இப்போது எனக்குக் கிடைத்த நேரத்தில் நான் அமைதியாக ஒரு இடத்தில் இருந்து நன்றாக எழுதுகிறேன்.
அப்பா தொன்னூற்று ஐந்து வயதில், எந்தக் கொடிய நோய்களாலும் பாதிக்கப்பட்டு அவதிப்படாமலும், ஒருவருக்கும் கஷ்டம் கொடுக்காமலும், அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
அந்த வாகன விபத்தின் பின்னர் கடவுள் மகனுக்கு ஒரு புது உயிர் கொடுத்து விட்டான். அவன் தனது படிப்பில் கவனம் செலுத்துகிறான்.
எனது கார் முற்றும் முழுதாக சேதமடைந்து விட்டது, ஆனால், மகன் ஒரு ஊனமும் இல்லாமல் உயிரோடு வந்து விட்டான். அவன் இப்போ வேகமாகக் கார் செலுத்துவதில்லை.
கடைசியில் அவள் எழுதியது;
‘கடந்த ஆண்டு கடவுளின் அருளால் மிக நல்ல ஆண்டாக முடிந்தது’.
கதையின் தார்மீகம்:
நடந்தது ஒன்றே ஆனால் இரண்டு வேறுபட்ட கண்ணோட்டங்கள்!
இக் கண்ணோட்டத்தை ஆழ்ந்து சிந்திப்போமானால், நாம் எல்லாம் வல்ல ஆண்டவனில் நம்பிக்கை வைப்போம்.
தினசரி வாழ்க்கையில் சந்தோசம் மாத்திரம் எம்மிடம் நன்றி உணர்வை ஏற்படுத்துவதில்லை, நன்றி உணர்வுதான் எம்மிடம் சந்தோசத்தை ஏற்படுத்துகிறது.
பி.கு: நீங்கள் எழுதும்போது உங்கள் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அவதானிக்கவும். உங்கள் கற் பனையை மாற்றி விடுவார்கள்!
Story # 45. Gen oru thathuvamalla... athu oru vazhkkai murai