கதாநாயகி – சுமதி
நான் தான் என் கதையின் கதாநாயகி. எல்லா கதையிலும் ஒரு கதாநாயகன்,
கதாநாயகி இருக்க வேண்டும் என்பது ஒரு கதையின் இலக்கணம் அல்லவா.
அப்படித்தான் எங்கள் தமிழாசிரியை சொல்லியிருக்கிறார்கள். என் கதையின்
நாயகனாகியிருக்க வேண்டிய என் காதலன் கிரண் வேறு கதை தேடி சென்றுவிட்டான். அவனை வில்லனாக்கிய என் மனம் உடைந்து சிதறி அழுது புலம்பித் தவித்து எல்லாம் முடிந்து அதுவும் ஒரு வருடமாயிற்று தெளிந்து வருவதற்கு. அவனுக்காக காத்திருக்கிறேன் என்று என் பெற்றோர் பார்த்த வரன்களையெல்லாம் வேண்டாமென்று சொல்லியிருந்தேன். இப்பொழுதும் கல்யாணம் என்ற பேச்சுக்கு என் கதையில் இடமில்லை....
இனி என் கதையை எப்படி எடுத்துச்செல்வதென்று தெரியாமல் உங்களிடம் வந்திருக்கிறேன். நான் கதை புத்தகங்கள் அவ்வளவாக படித்ததில்லை. பொதுவாக பாட புத்தகங்கள் படித்ததோடு சரி . நான் படித்த கதை புத்தகங்களை விரல் விட்டு எண்ணுவதென்ன .. கண் வைத்தே எண்ணிவிடலாம். அதனால் தான் என் கதைக்கு புது கற்பனைகள் எதுவும்
எனக்கு தோன்ற்வில்லை . இந்த கதையைப் படிக்கும் நீங்கள் தான் கதை விரும்பிகளாயிற்றே . நீங்களே சொல்லுங்கள். நாயகி பாதி வில்லி பாதியென்று இருக்கும் என் மனதிலிருந்து வில்லியை அழிக்க ஒரு வழி சொல்லுங்கள்.
கதையை முடித்து விடலாமென்றால் என் பெற்றோரின் பாசவலை அதற்கு இடமளிக்கவில்லை .அதோடு எங்கேயோ சென்றுவிட்ட ஒருவனை வில்லனாக நானே எனக்குள் சொல்லிக்கொண்டு என் வாழ்க்கையை நானே அழித்துக் கொள்வதில் யாருக்கும் எந்த பயனுமில்லை .
அவன் திரும்ப வரேவண்டும் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தது என் மனம் சிறிது காலம்.
தற்சமயம் என் மனம் அவனை முழுதும் வெறுத்தது. அவன் திரும்ப வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நானில்லை.
மூடிய கதவு மூடியதாகவே இருக்கட்டும். எனக்கு திறந்திருக்கும் கதவைக் காட்டுங்கள் என்று தான் உங்களிடம் வந்திருக்கிறேன்.
எனக்கு இப்பொழுது தேவை மனதுக்கு ஆறுதல் மற்றும் என் பெற்றோரின் சந்தோஷம்.
என் பெற்றோர் என்னிடம் தினமும் சொல்லுவது –
“நீயும் நாங்கள் பார்த்த பையனைத் திருமணம் செய்திருந்தால் இப்பொழுது எங்களுக்கு பேரனோ பேத்தியோ கிடைத்திருக்கும். அவனுக்காக காத்திருந்து உன் வாழ்க்கையையும் வீணடித்து எங்களுக்கு கிடைக்கவேண்டிய சந்தோசத்தையும் இல்லாமல் செய்துவிட்டாய்”. அவர்களின் வாதமும் சரிதானே.
எனக்கும் குழந்தைகள் என்றால் அலாதிப் பிரியம் தான் . இப்பொழுது கூட பூங்கா வந்து சிறு குழந்தைகள் விளையாடும் அழகை ரசித்து பார்த்துக் கொண்டுதான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.
மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் எவ்வளவு ஆனந்தமானது. கள்ளம் கபடமில்லாதது.
அட .... உங்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் மனமும் இலேசாகிவிட்டது...... ஒரு நல்ல யோசனையும் தோன்றியிருக்கிறது.
ஹ்ம்ம்.... நீங்கள் சொல்லுவது சரி தான். நான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாமே.
ஆதரவு இல்லாத ஒரு குழந்தைக்கு என்னால் ஒரு ஆதரைவத் தர முடியும்.
என் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் என் பெற்றோர்க்கு வசந்தத்தையும் அது கொடுக்கும்.
துணையில்லாத ஒரு உயிர் எனக்கு ஒரு துணையாகவும் இருக்கும்.
நல்ல யோசனை.
என் கதையை இவ்வளவு நேரம் பொறுமையாக கேட்டதோடு மட்டுமின்றி அடுத்த திருப்பத்தையும் கொடுத்து உதவியிருக்கிறீர்கள்.
மிக்க நன்றிகள்.
புதுக்கதை ஆரம்பமாகிறது. நல்லெதாரு ஆரம்பம்.