அவனால் நான் அழகு - மது
அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்
மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉங் கான லானே.
(ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன் குறுந்தொகை 184 )
நுண்ணிய வலையையுடைய நெய்தல் நில பரதவர் மகளது கண்வலையில் என் நெஞ்சம் பட்டு ஆண்டாண்டாய் தங்கிவிட்டது; இந்நிலை எனக்கு மட்டும் அமைந்ததன்று; யாராயினும் அவ்வலையிலே அகப்பட்டு தான் போவர் ; இது யான் அறிந்த உண்மை; ஆதலின் அங்கே ஒருவரும் செல்லற்க; செல்லின் துன்புறுவீர் என்று தலைவியின் கண்வலையில் அகப்பட்டு காதலால் வயப்பட்ட தலைவன் கூறுவதாக அமைந்த அழகான குறுந்தொகை பாடல்.
இந்த கவிக்கதையின் நாயகனும் நாயகியின் அழகிய கண்வலையில் சிக்கி அவள் நெஞ்சத்தில் உறைவதாக அமைத்திருக்கிறேன்.. கதைப் போக்கில் தெரிந்து கொள்வீர்.
அழகு
கயல்விழி பாவையா
கருணை பொங்கும் பார்வையா (1)
அழகு
செம்பருத்தி இதழா
செந்தேன் சிந்தும் மொழியா (2)
அழகு
பால்நிலா முகமா
பிறர் நலம் பேணும் அகமா (3)
அழகு
மயக்கும் இளமையா
மெழுகென உருகும் தன்மையா (4)
அழகின் இலக்கணம்
எதுவென உணர்த்தும்
இக்கதை களம் (5)
ஆதித்யா
அறிமுகம் தேவையில்லை
அறியாதவர் எவருமில்லை (6)
ஆறடி அழகன்
அகிலம் ஆளும் இளைஞன்
மென்பொருள் உலகின் முடிசூடா மன்னன்
மெல்லிடை மாதரின் மனம் கவர் கள்வன் (7)
கல்வியா செல்வமா வீரமா
சண்டை போட்டுக் கொள்ளும்
சரண் புகவே இவனிடம் (8)
அபூர்வா
அரிதினும் அரிதானவள்
அன்பே உருவானவள்(9)
அறிவின் சுடரொளி
அரவணைக்கும் இனிய மொழி
மருத்துவ துறையில் ஒளிரும் வைரம்
மனதை ஈர்க்கும் அழகும் குணமும்(10)
இதழில் இரு விழியில்
இவள் சிந்தும் புன்னகை
இதயம் இழுக்கும் தூண்டில் (11)
அவனிருந்தது ஓர் அரங்கம்
அங்கு அரங்கேறியது ஓர் நாடகம்
புற்று நோய் விழிப்புணர்வு இயக்கம் - கதா
பாத்திரமாய் அவள் சொன்னாள் விளக்கம் (12)
இயற்கையோடு இசைந்த வாழ்வும்
உணவே மருந்து முன்னோரின் தத்துவம்
இதை பின்பற்றாத வாழ்வியலின் தாக்கம்
உடலை துன்புறத்தும் நோய்களுக்கு கொண்டாட்டம் (13)
அயல்நாட்டு மோகம் அனைத்திலும்
இறக்குமதி பொருளுக்கே முதலிடம்
நலமும் நாணயமும் அடகு போகும்
நலிவும் பண வீக்கமும் வந்து சேரும் (14)
உணவா உண்கிறோம் இல்லை ரசாயனம்
அருந்தும் திரவம் கெமிக்கல் கலப்படம்
சுவாசிக்கும் காற்றும் என்ன சுத்தம்
மார்டன் என்ற பெயரில் மரண சாசனம் (15)
இளநீர் அருந்தினால் தணியாதோ தாகம்
இளம்பிஞ்சும் நாடும் வண்ண பானம்
மண்பாண்டம் என்றால் இன்றைக்கு கேவலம்
பாலிதீன் பிளாஸ்டிக் இதுவே பெருமிதம் (16)
அறிவோமா அனைத்தும் - உடலை
அரித்து உருக்குலைக்கும்
புற்றாய் எடுக்கும் விஸ்வரூபம்
பிணியின் கொடுமைக்கு ஆளாக்கும்(17)
நோய் தீர்க்கும் மருந்தே
நரம்பில் நஞ்சாய் ஏறும்
பக்கவிளைவுகளின் தாக்கம்
கேட்டக் சொல்லும் மரண யாசகம்(18)