அன்று இரவு விக்ரம், மனைவி நந்தினியிடமும் அதைப் பகிர்ந்து கொண்டான். “பரவாயில்லை நந்தினி, நாம் நினைச்ச மாதிரியே அம்மா மனசு தேறி அவங்க வழியில வேலை செஞ்சுட்டு இப்போ சந்தோஷமா இருக்கறாங்க... எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு.” மகள் சொன்னதையே மகனும் சொன்னான்.
ஏதேச்சையாக அந்தப் பக்கம் வந்த மீனாட்சி மகன் சொன்னதைக் கேட்க நேர, புன்னகைத்துக் கொண்டே தன் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டார். அது அவர் படுக்கையறை மட்டும் அல்ல... ரகசியங்கள் பொதிந்த பொக்கிஷ அறை.
இரவு படுக்கையில் சரிந்ததும் தனிமையில் தவிக்கும் மீனாட்சி சிந்தும் கண்ணீரைப் பற்றி யார் அறிவர்? எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், எத்தனை உறவுகள் பிணைந்தாலும் கணவன் என்ற உறவு அவருக்குக் கானல் நீர் தானே?
உடல் மரித்தாலும், நெஞ்சம் நிறைந்த கணவரின் மீதான முதல் காதல் மரித்துப் போகுமா என்ன? அந்தக் காதல் தந்த இனிமையான நினைவுகள் அழிந்து போகுமா என்ன?
தன் மக்களின் சந்தோஷத்திற்காக ஓர் தாயாக அவர் மனதைத் தேற்றிக் கொண்டு அதில் வெற்றி பெற்றுவிட்டார். மற்ற தாய்-தந்தைகளின் ஆதரவிற்காக ஓர் மகளாக மாறி அன்புடன் வாழ்ந்துவிட்டார்.
ஆனால் அன்பு கொண்ட காதல் மனைவியாக உள்ளுக்குள் ஊமையாய் அழுது கொண்டிருக்கும் அவர் வேதனை நெஞ்சை, யார் அறிவர்? சாளரம் வழியே வந்து தொட்டுத் தழுவிச் செல்லும் தென்றல் அறியும்! காற்றோடு போன முருங்கைப் பூ வாசம் அறியும்!
கணவனின் நிரந்தரப் பிரிவை எதிர்கொள்ள காலம் அதற்கு மருந்து என்றார்கள். எவ்வளவு காலம் என்று யாராவது சொன்னதுண்டா? அல்லது, யாருடைய காலம் என்று சொன்னதுண்டா?
வாழும் காலம் முழுவதும் கானல் நீரான வாழ்க்கையை நினைத்து நித்தமும் மீனாட்சியின் ஊமை நெஞ்சம் கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கும்! அதை அறிந்தவர் உண்டா? இது காதல் பிரிவின் வலி.
ஆனால் இங்கே காதல் தோற்கவில்லை... முதல் முதலில் பூத்த காதல் மீனாட்சியின் நெஞ்சில் என்றுமே வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். காதல் உள்ள வரையில்!!!
This is entry #68 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}