எங்கே பாசம் - கிருத்திகா
விடியற்காலை மணி நான்கு. யாரோ நெஞ்சின் மீது ஏறி அமர்ந்தது போல் மூச்சு முட்டி நெஞ்சு வலித்தது. உடலெல்லாம் இந்த டிசம்பர் குளிரிலும் வியர்வை. எப்படியாவது சியாமளாவை எழுப்ப வேண்டும். “ஏய்…சியாமி.”.குரல் எழும்பவில்லை. இருக்கிற பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி எழும்ப முயன்றார். எழுந்தே ஆக வேண்டும். வாந்தி வருவது போல இருந்தது. நிமிர்ந்து எழுந்திருக்க முடியவில்லை. கட்டிலின் ஓரத்தில் எப்போதும் இருக்கும் கைத்தடி சாய்ந்து ஸ்டூலுடன் ஒட்டி இருந்தது. சற்றே புரண்டு படுத்தால் கைக்கு எட்டி விடும் அது. அழுத்துகிற வலி அதிகரித்துக் கொண்டே வருகிறது. ‘கடவுளே. எடுத்துக் கொள்ளுகிற உயிரை இம்சைப் படுத்தாமல் எடுத்துக் கொள்ள மாட்டாயா? எப்படியாவது புரண்டு படுத்தே ஆக வேண்டும். “சியாமி, உன்னோடு ஒரு வார்த்தை பேசி விட்டு போகட்டுமடி இந்த உயிர்”
இடது தோள் செயலற்று ஒத்துழைக்க மறுத்தது. குழந்தை குப்புறிக்கிற மாதிரி ஒரு வழியாய் மொத்த உடலும் திரும்பி கட்டில் முனைக்கு வந்தாகி விட்டது. கைத்தடியை எட்டிப் பிடிக்க முனைந்தார். வலியின் தீவிரத்தில் வலது கையை அசைப்பது பெரிய சவாலாயிருந்தது. ‘சியாமி..வலி தாங்க முடியலே..’ . மயக்கமுற்றார்.
முகத்தில் குளிர்ந்த நீர் பட்டது. ஆனால் விழிகளைத் திறக்க முடியவில்லை. மூச்சு விடுவது மிகவும் சிரமமாக இருந்தது. வலி தோள்பட்டைகளுக்கும் பரவி தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. கண்களைத் திறக்க முடியவில்லை. “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.” தொடர்ந்து மனதை குவித்து பிரார்த்தனை செய்ய முடியவில்லை. அடுத்த ஜென்மத்திலும் உத்தமர் உறவிற்கு வாய்ப்பில்லையோ? கண்களைத் திறக்க முடியவில்லை. சிவனடி சேரும் முன் அவனது ஊழித் தாண்டவமோ இது? “இந்தாங்க.. வாயைத் திறங்க.. ” சியாமளாவின் குரல் தான். பரிச்சயமான அவளது விரல் ஸ்பரிசம் இதழ்களின் மீது பட்டது. ‘என்னாங்க.. தெறங்க வாயை.’. நாக்குக் கீழே கசப்பான மாத்திரையை வைத்து “அப்படியே இருங்க” என்றாள். அவள் குரலைக் கேட்டாகி விட்டது. இனி தடை ஏதும் இல்லை. “சிவாய நமஹ.. ஓம் சிவாய நமஹ” .
வலி குறைந்து கண்களைத் திறந்த போது சியாமளாவின் சுருக்கங்கள் விழுந்த தளர்ந்த முகம் தென்பட்டது. வென்னீர் நிரப்பிய ‘ஹாட் பேக்’ கை அவர் நெஞ்சின் மீது இதமாக வைத்து ஒத்தடம் கொடுத்தார் சியாமளா. “இந்த தடவை எனக்கு நம்பிக்கை இல்லே. சங்கரை எழுப்பேன். கடைசியாப் பாக்கலியேன்னு வருத்தப் படுவான்.”
“அபசகுனமாப் பேசாதீங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆவாது. சிவ சிவான்னும் சொல்லுங்க”
“உன்னை நினைச்சாத்தான் எனக்குக் கவலையாயிருக்கு. என் காலத்துக்கப்புறம் உனக்கு ‘பேமிலி பென்ஷன்’ உண்டு. சங்கருக்குத்தான் இதெல்லாம் புரியும். அவனை எழுப்பு”
‘வீணா மனசை அலட்டிக்காதீங்க. அவன் நேத்திக்கி ஆபீஸிலேயிருந்து வரும் போதே ராத்திரி பத்து மணி. அவனை எழுப்பினா கைக்குழந்தை எளுந்திடுவான்”. வெளியே ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது.
சியாமளா முன் வாயிற் கதவைத் திறந்து படியிறங்கிக் கீழே சென்றார். ஐந்து நிமிடங்கள் கழித்து இரண்டு ஆறடி நீள மரக்கழிகள் இடையே கித்தான் துணியுடன் இரண்டு வெள்ளை நிற உடையணிந்த இளைஞர்கள் வந்தார்கள். முதலில் அவரை ஒருக்களித்துப் படுக்க வைத்து “ஸ்டிரெட்சரை ” மீதி இடத்தில் கட்டிலின் ஒரு ஓரத்தில் வைத்தார்கள். பிறகு அவரை இருவரும் தலை கால் இரண்டு பக்கமாக் நின்று தூக்கியதும் சியாமளா “ஸ்டிரெட்சரை “அவருக்குக் கீழே கட்டிலின் ஓரத்திலிருந்து நகர்த்தி மையமாக வைத்தார்..
வீட்டை விட்டு “ஸ்டிரெட்சரில்” படுத்த படி இறங்கியதும் ஒரு முறை திரும்பிப் பார்த்தார். சியாமளா மரக் கதவில் பெரிய சாவியைப் போட்டுப் பூட்டினார். உள்ளே தூங்குபவர்களை எழுப்ப விரும்பவில்லை போலும். ஆம்புலன்ஸில் சற்று அகலமாக இருந்த நீண்ட இருக்கையில் அவர் “ஸ்டிரெட்சரோடு” படுக்க வைக்கப் பட்டார். அவர் அருகே பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்த சியாமளா “சாமி படத்தை எடுக்க மறந்து போச்சு” என்றபடி இறங்கியதும் பின் பக்கக் கதவை மூட வந்தவன் ஒதுங்கி வழி விட்டான். சியாமளா வீட்டுக்குள் போகாமல் உடனே திரும்பி விட்டார். “என்ன சியாமி உடனே திரும்பி வந்துட்ட?”
“சாவி போட்டுப் பாத்தேன். உள் பக்கமாத் தாப்பாப் போட்டிருக்கு
{kunena_discuss:785}