கனவுக்கதைகள் - கிருஷ்ண பாபு
'சார்!கொஞ்சம் எழுந்திருக்கிறீர்களா? இது என் சீட்'
கண் விழித்தேன்.
வினித் சாயலில் ஒருவன்.
கம்பார்ட்மெண்டில் எங்கள் இருவரைத் தவிர யாருமில்லை.
'இவ்வளவு இடம் கிடக்கு! ஏன் சார் இப்படி படுத்தறீங்க?' எரிச்சலானேன்.
'என் இடத்தில் நீங்கள் இருந்தால் ஒருவேளை எனக்குப் பதில் நீங்கள் சாக கடுகளவு சான்ஸ் இருக்கு சார்! Probablity science!'
வாயடைத்து ஜன்னலோரம் ஒட்டிக்கொண்டேன்.
பக்கத்தில் அமர்ந்தான்.
'சிகரெட்?'நீட்டினான்.
மறுத்து கைகூப்பினேன்.
'ஓடும் ரயிலில் சிகரெட் எவ்வளவு சுகம் தெரியுமா?'
புகையை ஆழமாய் இழுத்தபடி தொடர்ந்தான்.
'அடுத்த பிறவியில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?'
உதட்டை பிதுக்கினேன்.
ஜீவாத்மா,பரமாத்மா,ஜென்மம், கர்மா என LIC பாலிசிகள் போல அவன் உளறிய அனைத்தும் என் கண்களை தாலாட்டின.
அடுத்த ஸ்டேஷன் எதுவாக இருந்தாலும் தப்பித்து ஓடத் தயாராக இருந்தேன்.
'ரொம்ப போரடிச்சுட்டேனோ? நீங்க தூங்குங்க!நான் கிளம்புறேன்!' அரைமணி நேர அறுவைக்குப் பின் சொன்னான்.
கடைசி பீரியட் முடிந்த பெல்சத்தம் கேட்டது போல் சந்தோசமாக எழுந்தேன்.
ஆனால் மறுபடி தொடர்ந்தான்.
'இவ்வளவு பேசுறேன்ல? ஆனா எனக்கே என் பிறவி மேல நம்பிக்கை வரல!'
'ஓ' விரக்தியாக சொன்னேன்.
திடீரென கத்தினான்.
''நான்' என்று நம்பிக்கிட்டு இருக்கிற 'நான்' உண்மையில் வேற யாரோட கனவிலோ வர்ற காரெக்டர்னு நினைக்கிறேன்..'
பதறிப்போய் ரயில் சங்கிலியை இழுக்கும் யோசனை கூட எனக்கு வந்தது.
கண்கலங்கி என்னை பார்த்து சொன்னான்.
'இப்ப பாருங்களேன்!'
வேகமாக நடந்து, ஓடி படாரென கதவைத்திறந்து ஓடும் ரயிலில் இருந்து…
கு…
…தி…
……த்…
………தான்.
மிரண்டு போய் எட்டிப் பார்த்தேன்.
ஏழெட்டு உருளல்களுக்குப் பின் அவன் உடல் உதறத் தொடங்கியது. அதன் பின்…
இருள்…இருள்…இருள்…
திகைப்புடன் அமர்ந்தேன்.
நடந்தவை அனைத்தையும் நம்பமுடியாமல் பிரமித்தேன்.
கனவா?
நேற்றைய சரக்கோட எஃபெக்டா?
மூளை குழம்பிடுச்சா எனக்கு?
அனாதையாக கிடந்த அவனது சிகரெட் பாக்கெட் என்னை ஈர்த்தது.
ரிலாக்ஸ் ஆக உடனே தம்மடிக்க உத்தரவிட்டது எனக்குள் என்றோ மரித்த நிகோடின் பூதம்.
பற்றவைத்து ஆழமாய் இழுத்தேன்..உடலில் எடையும் மனதின் பாரமும் புகையாக வெளியேறி மிதக்கத் தொடங்கினேன்.
புகையை ஜன்னலோரம் ஓடும் மரங்களிலும் வானத்திலும் ஊதிவிட்டு நகர ஆரம்பித்தேன்.
'டொக் டொக்'
ரயில் கதவை யாரோ தட்டியது கேட்டது.
ஓடும் ரயிலில் யார்?
திறந்தேன்.
அவனேதான்!
அடக்கமுடியா ஆச்சர்யத்துடன் கேட்டேன்.
'நீ…நீ…நீங்களா?இப்பதானே இறந்தீங்க? அதற்குள் மறுபிறவியா?'
என் குழப்பத்தை வார்த்தைகளும் கொண்டாடிக் கும்மியடித்தன.
முகத்தை இறுக்கமாக்கி இருபது வினாடிகள் என்னை பார்த்தவன் பட்டென சிரித்தபடி சொன்னான்.