உள்ளத்தால் மட்டுமே நான் பவித்திரம்
உண்மை அறிந்தும் ஏற்கும் பக்குவம்
உமக்கு உண்டென்றாலும் எனக்கில்லை தைரியம் (48)
ஏனோ உன் மனமே உனக்கு புரியவில்லை
என்னை பிடிக்கவில்லை என்று நீ சொல்லவில்லை
ஏற்க விருப்பம் இல்லை என்றும் எதிர்த்தாயில்லை(49)
அறியாப் பருவத்திலேயே
அசையவில்லை உன் திடம்
இன்றோ உன் இடம் சிகரம்
எனினும் ஏனிந்த தயக்கம்(50)
ஊர் சொல்லும் என் சரித்திரம்
உனக்கு அதனால் தானோ ஐயம்(51)
என்றால் கேள் இன்று
நான் எடுக்கும் சத்திய பிரமாணம்
சொல் தவறாத என் குணம் பிரசித்தம்(52)
காற்றும் திசை மாறும்
கடலும் அலைபாயும் (53)
சூரியனும் மாலை மறையும்
சந்திரனும் தேய்ந்து போகும் (54)
நிலமும் நீரும் தடம் பிறழும்
நெருப்பும் தன்னிலை இழக்கும்(55)
என் ஒவ்வொரு அணுவும்
உன் பெயரையே உச்சரிக்கும்
என் ஜீவன் போன பின்பும்
உன்னையே என் ஆன்மா சுற்றி வரும்(56)
எப்படி சொல்வேன் அவனிடம்
அவனிருக்கும் உலகம்
அவல் போல் வம்பு மென்றிட
அலைபாயும் கூட்டம் (57)
சிக்கியது விண்மீன் என்றாலே
சந்தையில் ஏலமிடும் ஊடகங்கள் இங்கே(58)
கருணா
கிரிக்கெட் வானில் கதிரவன்
கண்கவர் வசீகரன் (59)
மந்தி கீறிய பலாக்கனி
மறைத்தாலும் மணம் வீசும் (60)
முன் பின் காதலித்திருந்தால்
மாறன் வயப்பட்டவனுக்குத் தெரிந்திருக்கும்
காட்டுத் தீயென வதந்திகள் அவன்
காதலியை நாலாபுறமும் சூழ்ந்து கொல்லும்(61)
அந்நிலை எங்கனம் தாங்குவான்
அத்தணலில் வெந்து போவது நானே
ஆனால் துடித்திடுவான் அவன் அன்றோ(62)