“அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று வந்ததிலிருந்து, இதேதான் என்மனதில் ஓடிக்கிட்டிருந்தது. இதை சொன்னா நீ எங்க சங்கடப்படுவாயோனு தயங்கினேன்”, என்றான்.உண்மையான காதலில்தான் ஒன்றுபட்ட உள்ளம் இருக்கும்.
ஒரு வழியாய் இருவர் மனதும் ஒன்று என்பது தெரிய, மறுநாளே குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றனர்.
குழந்தைகள் காப்பகத்தில் இருந்த அவன் நண்பன், அவர்கள் வந்ததின் நோக்கம் அறிந்து மகிழ்ந்தான். அவர்களுக்கு குழந்தைகளைக் காண ஏற்பாடும் செய்தான். ஆனால் செல்வம் ஒரு விஷயம் மட்டும் கண்டிப்புடன் கூறிவிட்டான்.
எக்காரணம் கொண்டும் குழந்தையை தத்து எடுக்க போகிறோம், என்பதை குழந்தைகளிடமோ! மற்றவர்களிடமோ! கூற வேண்டாம். இதனால் சில குழந்தைகள் அஞ்சும், சில குழந்தைகள் எதிர்பார்க்கும், அது நடக்காத பொழுது அனாதை என்ற துன்பத்தில் உழலும் இவர்கள் ஏமாற்றத்தையும் மனதில் சுமக்க நேரிடும். அதனால் சாதாரணமாக பார்ப்பது போல ஏற்பாடு செய் என்றான்.
செல்வத்தின் அணுகுமுறையும் குழந்தைகள் மனதை புண்படுத்தாமல் எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் தெளிவுபட, ரவியும் அதற்கு சம்மதித்து ஏற்பாடும் செய்தான்
எந்த வித ஆர்பரிப்பும் இன்றி குழந்தைகளை கவனித்தனர். செல்வம் எத்தனையோ குழந்தைகளை ஜானகியிடம் கண்ஜாடையாக காட்டினான். ஆனால் ஜானகிக்கு எதுவும் மனதில் ஒட்டவில்லை.
அவ்வாறு கவனித்து வந்தபொழுதுதான் ஜானகியின் கவனம் முழுவதும் ஒரிடத்தில் நின்றது. அவளுக்கு முன் சென்று கொண்டிருந்த செல்வம் ஜானகி உடன் வராததை உணர்ந்து, திரும்பினான். ஜானகியின் பார்வை சென்ற திசையில் இவனும் பார்வையை செலுத்தினான். அவனுக்கு புரிந்து விட்டது. அருகே வந்து,
அவள் பார்வை சென்ற இடத்தைக் காட்டி, “உனக்கு சம்மதம்னா, எனக்கும் முழுசம்மதம்” என்றான்.
அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டானே! என்ற ஆனந்தம் ஒருபக்கம் என்றால் தனக்கு ஒரு குழந்தை கிடைத்துள்ளதே என்ற மகிழ்ச்சி என அவள் திளைக்க, கண்களில் கண்ணீர் பொங்கி மறைத்தது. வார்த்தை வரவில்லை. இதை கவனித்த செல்வம், ஆறுதலாக அவள் தோளை தட்டினான்.
நிர்வாகியும்,அவன் நண்பனும் தேர்ந்தெடுத்த குழந்தையை அறிந்ததும் முதலில் அதிர்ந்தனர்.
“என்னடா செல்வம், இந்த குழந்தையா”... மேற்கொண்டு ரவியால் பேச முடியவில்லை.
ஒரு நிமிடம் அமைதி காத்த செல்வம், நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “இதுல என்னடா இருக்கு எங்களுக்கு ஒரு குழந்தை வேணும்னு முடிவு செய்தோம். அதனால இந்த குழந்தையை தேர்ந்தெடுத்தோம். இதுவும் குழந்தை தானே! கை, கால்கள் இருக்கும் குழந்தையைவிட இது மாதிரி குழதைக்குதான் அன்பும், ஆதரவும் அதிகமா வேணும். தத்து எடுக்கலாம்னும் என்று நான் முடிவு செய்திருந்தேன். ஆனால் இதை என் மனiவியிடம் சொல்லலை. எங்களுடைய மனம் ஒன்று என்பதை என் மனைவி தேர்ந்தெடுத்த பொழுதே அறிந்து மகிழ்ந்தேன். இந்த மாதிரி குழந்தையை எடுத்து வளர்த்து ஆளக்கறதை நான் கஷ்டமா நினைக்கவில்லை. எல்லோருமே கை, கால் நல்லா இருக்கும் குழந்தையே தத்து எடுத்தா, இவர்கள் கதி என்னவாகும். சுருங்கி, வதங்கி போய் இருக்கும் இவர்கள் மனம் இன்னும் வதங்கி வாடத் தொடங்கி விடும். இதுவும் குழந்தைதான் என்பதை ஏன் எல்லோரும் உணர மறுக்கின்றீர்கள்”, என்றவன் சிறிது அமைதியானான்.
செல்வத்தை பார்த்த ஜானகி, நிர்வாகியும், ரவியும் இருந்த பக்கமாக திரும்பினாள்.
“கை, கால் நல்லா இருக்கம் குழந்தைக்காவது அனாதை என்ற ஒரு வருத்தம் மட்டும் தான் இருக்கும். ஆனா இந்த மாதிரி இருக்கும் குழந்தைகளுக்கு இது கூடுதல் வேதனை! நல்லா இருக்கும் குழந்தைகள் மட்டும் குழந்தைகள்னா? இவர்கள் குழந்தைகள் இல்லையா? இவர்களுக்கும் உயிரும், உணர்ச்சியும் உண்டு தானே! அதனால் அந்த மாதிரி உள்ள இந்த ஒரு குழந்தைக்காவது அன்பும், ஆதரவும் தந்து நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறது தான் எங்க வாழ்க்கை இலட்சியமாகும்”; என்றாள்.
அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. இந்த மண்ணில் பிறக்கும் எல்லா குழந்தையுமே ஒன்று தானே! ஏன் ஊனத்தை காரணம் காட்டி குழந்தையை பேதமைப்படுத்துகின்றனர் என்ற எண்ணம் நெஞ்சை அரிக்க கண்கள் கலங்கியது.
தன் எண்ணப் பிரதிபலிப்பாக இருந்த ஜானகியை செல்வம் பார்த்தாலும் கண்கள் கலங்கி பார்வையை மறைத்தது.
எடுத்தேன் , கவிழ்த்தேன் என்பதல்ல காதல் . ஐந்து நாட்களானாலும் சரி , ஐம்பது வருடமானாலும் சரி ஒருவர் மனதில் உள்ளதை ஒருவர் கண்ணாடியாய் பிரதிபலிப்பதுதான் காதல் . அன்பும் பாசமும் மட்டும் காதலுக்கு முக்கியமில்லை . கணவனின் முகமறிந்து மனைவியும், மனைவியின் செயல் புரிந்து கணவனும் நடந்து கொண்டால் அங்கே பிரச்சனைக்கே இடமில்லை . அந்தளவிற்கு புரிதல் இருந்தால்தான் சாத்தியம் .