வெங்கட் வெங்கட். . ம். . ம். . எனக்கு நெஞ்சை வலிக்கிறது. . சீக்கிரம் சீக்கிரம் ஹேமாவின் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி அவளை மனைவியாக்கிக்கொள். . மூச்சுத் திணறியது தாத்தாவுக்கு.
அவரின் மூச்சு இன்னும் சில நிமிடங்களில் அடங்கிவிடும் என்பது மருத்துவரான அவனுக்குப் புரிந்தது.
தன்னை வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கிய தன் மீது உயிரையே வைத்திருக்கும் தாத்தாவின் கடைசி வேண்டுகோளை நிறைவேற்றுவது தனது கடமை என நினைத்தானோ என்னவோ பூஜை அலமாரியில் அம்பாள் படத்திற்கு மாட்டியிருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து ஹேமாவின் கழுத்தில் கட்ட முனைந்தவன்
மிஸ். ஹேமா உங்களுக்கு இதில் சம்மதமா எனக் கேட்க மறக்கவில்லை.
அவளும் லேசாய் சம்மதமென தலையாட்ட மஞ்சள் கயிற்றைக் கட்டி ஹேமாவை மனைவியாக்கிக்கொண்டான். இது நிஜக் கல்யாணமா? அல்லது பொம்மைக் கல்யாணமா? எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும். மன நிறைவோடு உயிரைவிட்டார் தாத்தா. பரிகாரம் செய்துவிட்ட திருப்தி அவருக்கு.
பவி. . பவி. . என்னை மன்னித்துவிடு பவி. . உனக்கு துரோகம் செய்துவிட்டேன் பவி. . சூழ்னிலை என்னைக் கைதியாக்கிவிட்டது பவி. . நான் உன்னை ஏமாற்றவில்லை. . என் தந்தை செய்த தவறுக்குப் பியாயச்சித்தமாய் நான் ஹேமாவைத் திருமணம் செய்துகொள்ள தாத்தா வற்புறுத்தியபோது உனக்கும் எனக்குமான காதலை தாத்தாவிடம் எடுத்துச் சொல்ல நினைத்தேன். . ஆனால் தாத்தாவின் உயிர் பிரியும் நேரத்தில் அவர் வேண்டுகோளை நிறிவேற்றதான் முடிந்ததே தவிற நம் காதலைச் சொல்ல முடியவில்லை பவி. என்னை மன்னித்துவிடு பவி. . என்னை மன்னித்து விடு. . . மனதினுள் கதறி அழுதபடி டைரியில் அனைத்தயும் பதிவு செய்தான் வெங்கட். தினம் தினம் அன்றாட நிகழ்வுகளை டைரியில் குறிப்பது அவன் வழக்கம்.
டைரியின் நடுப்பக்கத்தில் வைத்திருந்த புகைப்படத்தை எடுத்தான். அழகாய்ப் புன்னகைத்தபடி இருக்கும் பவித்ராவின் புகைப்படம் அது. பவீ. . . அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
இங்கு நடந்த எந்த ஒன்றையும் பவிக்கு தெரிவிக்க அவனுக்கு மனமில்லை. அவளை மறக்கவும் முடியவில்லை. மறுபடியும் பம்பாய்க்குச் சென்றால் பவியின் முகத்தில் எப்படி முழிப்பது எனக் கருதி பம்பாயைத் தவிர்த்து ஹேமாவை அழைத்துக் கொண்டு கோவைக்குச் சென்று க்ளினிக் ஆரம்பித்தான்.
வெங்கட்டிடமிருந்து எந்தத் தகவலும் வராமல் தவித்தாள் பவி. கடிதம் மூலம் தெரிந்து கொள்ள முகவரியும் தெரியவில்லை. வெங்கட்டின் தாத்தா பெயரையும் கேட்டுக்கொள்ள தவறிவிட்டதை எண்ணி வருத்தப்பட்டாள் . மாயவரம் சென்று ஜட்ஜ் வீடு பற்றி விசாரித்தபோது யாருக்கும் தெரியவில்லை.
வெங்கட் தனது ஊர் மாயவரம் என்று சொன்னானே தவிற மாயவரம் பக்கத்தில் மங்கைநல்லூர் என்ற கிராமம் என்று சொல்லவில்லை. இல்லாத ஊரில் ஆளைத் தேடினால் எப்படிக் கிடைப்பார்கள்? ஏமாற்றத்தோடு பம்பாய் திரும்பினாள் பவித்ரா. மெத்தப் படித்தவர்களும் இப்படி சிலசமயம் முக்கியமானவற்றில் கோட்டை விடுவார்களோ? . .
ஆனாலும் வெங்கட்டின் மீது அவளுக்கு அளவற்ற நம்பிக்கை இருந்தது. அவன் மௌனத்திற்கு காரணம் இருக்கும் என நம்பினாள்.
வருடம் இரண்டு உருண்டோடியது. விரும்பியோ விரும்பாமலோ கட்டயத்தாலோ எப்படித் திருமணம் நடந்திருந்தாலும் தாலி கட்டிய மனைவிக்கு உண்மையானவனாக நல்ல கணவனாக இருக்கவேண்டுமென வெங்கட் எண்ணியதாலோ என்னவோ ஹேமா உண்டானாள். நல்ல கணவன் தனக்குக் கிடைத்தான் என்றும்
தான் தாயாகப் போவதையும் தன் தோழி பவியிடம் தெரிவிக்க முடியாத ஏக்கம் ஹேமாவுக்கு. அவளுக்குத் தெரியுமா தன் தோழியின் காதலன் தன் கணவன் என்று. இல்லை வெங்கட்டுக்குத்தான் தெரியுமா தன் மனைவியின் தோழிதான் தான் காதலித்த பவியின் தோழி என்று. இது இறைவன் விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டமோ?
மதியம் பொழுது போகவில்லை ஹேமாவுக்கு. வெங்கட்டும் இன்னும் க்ளினிக்கிலிருந்து வரவில்லை.
வர லேட்டாகும் என காலையிலேயே சொல்லிவிட்டதால் இப்போதைக்கு வரமாட்டார் என எண்ணி கப்போர்டில் சாய்த்த்சாய்த்து வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலிருந்து ஒன்றை படிக்கலாமே என உருவி எடுத்தாள் ஹேமா. அப்போது தொப்பென்று கீழே விழுந்தது அந்த டைரி. வெங்கட் அன்றாட நிகழ்வுகளை எழுதி வைக்கும் டைரி அது. எப்போதும் ஹேமாவின் கண்ணில் படக்கூடாது என ஜாக்கிரதையாக வைப்பவன் ஏனோ அனறு மறந்து வைத்துவிட இப்போது அது கீழே விழுந்து ஹேமாவின் பார்வையில் பட்டது. சாதாரணமாக இருந்தால் அது கணவனின் டைரி கணவனுடையதேயானாலும் பிரித்துப் படிப்பது தவறாகும் என எண்ணி படிக்காமல் இருக்கும் நாகரிகம் அறிந்தவள்தான் அவள். ஆனால் அந்த டைரிக்குள்லிருந்து வெளியே வந்து விழுந்த புகைப்படம்தான் அவள் கவனத்தை ஈர்த்தது. குப்புற விழுந்து கிடந்த அந்த புகைப்படத்தை மனித மனங்களுக்கே உள்ள இயல்போடு திருப்பிப் பார்த்தாள். புகைப்படத்தில் அழகாய் சிரித்தபடி இருக்கும் பவியைப் பார்த்தவள் தன்னை அறியாமல் பவீ என்று கத்தினாள்.