2017 போட்டி சிறுகதை 117 - ‘நலம், நலமறிய ஆவல்’! - ஜெயா பத்மநாபன்
This is entry #117 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம், நலமறிய ஆவல்
எழுத்தாளர் - ஜெயா பத்மநாபன்
வறுமையில் வாழ்ந்தபோதும் பொன்னுத்தாயி தன் மகன் முத்துவேலை அரசுப்பள்ளியில் 8 - ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தாள். அதற்கு மேல் படிப்பில் நாட்டம் குறைந்து போய் பள்ளிக்குப் போவதை நிறுத்தி விட்டான்.
கணவனை இழந்த பொன்னுத்தாயி இரண்டு மூன்று வீடுகளில் சமையல் செய்வது, மாவு அரைத்து குடுப்பது போன்ற வேலைகள் செய்து காலத்தை ஓட்டினாள்.
என்றாவது தன் பையானால் கஷ்டமெல்லாம் தீர்ந்து நல்ல நிலைமைக்கு வருவோம் என்ற நம்பிக்கையோடு தினமும் அடுப்படியில் வெந்து கொண்டு இருந்தாள்.
ஆனால் அவள் எதிர்பார்ப்புக்கு மாறாக முத்துவேல் தினமும் சீட்டு , குடி, நண்பர்களுடன் சினிமா என்று ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். அதனால் மனமுடைந்து போகிறாள் பொன்னுத்தாயி.
அலைகளால் கரைந்து போகும் மணல் வீட்டைப் போல், தன் பிள்ளையால் தான் கண்ட கனவுகள் கலைந்து போவதை எண்ணி கண்ணீர் வடிக்கிறாள்.
பொன்னுத்தாயி எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அவன் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. தன் விதியை நொந்தவாறு தொடர்ந்து சமையல் வேலையை செய்து வருகிறாள்.
ஒரு நாள் வழக்கம் போல் நண்பர்களோடு பீடி குடித்தபடியே சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான் முத்துவேல் அப்போது
"டேய் முத்துவேல் ! உனக்கு விஷயம் தெரியுமா? உங்க அம்மாவுக்கு சொந்தமா நிலம் இருக்காம். என் பிள்ளைக்குத் தான் இத்தனை நாள் பாதுகாத்து வெச்சிருக்கேன். ஆனா இப்படி பொறுப்பில்லாம திரியறானே ! அவன்கிட்ட எப்படி இந்த நிலப் பத்திரத்தை ஒப்படைப்பேன் என்று கவலையாய் இருக்கு ன்னு எங்கம்மாவிடம் உங்கம்மா சொன்னாங்களாம். "
"சுதாகர், நிஜமாவா சொல்ற? "
"ஆமாடா! அது மட்டும் கிடைச்சுட்டா நீ ராஜா தான். எங்களையும் கொஞ்சம் கவனிச்சுக்கோப்பா"
"சொல்லிட்டேல்ல. அதை எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும்" என்றான் முத்துவேல்....
பிறகு தன் வீட்டிற்குப் போகிறான். வீடு பூட்டி இருந்ததால் திண்ணையில் உட்கார்ந்தான். சமையல் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பொன்னுத்தாயி திண்ணையில் உட்கார்ந்திருந்த தன் மகனைக் கண்டு வியப்பு அடைகிறாள்.
"என்ன ராசா! வழக்கமா ராத்திரி தான வீட்டுக்கு வருவ" என்று கூறியவாறே கதவைத் திறந்து அசதியுடன் அமர்ந்தாள்.
அம்மாவின் அருகில் வந்து அமர்ந்த முத்துவேல், "அம்மா ! நீ எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பே! அதையெல்லாம் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்காம இத்தனை காலம் இருந்துட்டேன்னு இப்ப
வருத்தப்படறேம்மா. ஏதாவது தொழில் செய்து இனிமேல் உன்னை நல்லபடியா பாத்துக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, அத தொடங்கக்கூட நம்மகிட்ட மூலதனம் இல்லையே" என்று வருத்தத்துடன் கூறினான்.
மகன் வருத்தத்தோடு கூறியதைக் கேட்டு அவள் உள்ளம் இளகியது.
" மனசு தளராதப்பா. எனக்கு சொந்தமா நிலப்பத்திரம் இருக்கு. உனக்கில்லாம அத யாருக்கு வெச்சிருக்கேன்? அதை வித்து நீ எதையாவது தொழில் பண்ணுய்யா " என்று கூறியவள் பத்திரத்தில் கையெழுத்து போட்டு அதை முத்துவேலிடம் தருகிறாள்.
பத்து நாட்கள் வரை மகனின் போக்கில் வந்த நல்ல மாற்றத்தை எண்ணி மகிழ்வோடு இருந்தாள் பொன்னுத்தாயி.
ஒரு நாள், "அம்மா எப்பவும் வேலை, அதை விட்டால் வீடுன்னு தானே இருக்க, வாயேன் காத்தாட கொஞ்ச தூரம் நடக்கலாம்".
மிகவும் மகிழ்ச்சியுடன் முத்துவேலுடன் நடக்கிறாள் பொன்னுத்தாயி.
"அம்மா! ரொம்ப தூரம் நடக்க வெச்சுட்டேன் போல, இந்த திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு. நான் இப்ப வந்துடறேன். இந்த நூறு ரூபாயை வெச்சுக்கோ" என்று கூறிய முத்துவேல் அங்கிருந்து கிளம்பினான்.
நேரம் போய்க் கொண்டிருந்தது. "இன்னும் பிள்ளை வரலையே! இருட்டி விட்டதே" என்று கவலையோடு காத்திருந்த பொன்னுத்தாயி திண்ணையிலே படுத்து தூங்கிவிட்டாள். உள்ளே இருந்து வந்த நடுத்தர வயது பெண் "அம்மா, எழுதிருங்க" என்கிறாள்.
குரல் கேட்டு கண் விழித்த பொன்னுத்தாயி, "என் பிள்ளை வருவான்மா. வந்ததும் போயிடுறேன்" என்றாள் பரிதாபமாக.
"இது ஒரு அனாதை விடுதிம்மா. அது தெரிஞ்சு தான் இப்படி சிலர் பெத்தவங்களை இங்க விட்டுட்டு போயிடுறாங்க. இங்கே உங்களை மாதிரி வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க" என்றாள் அந்த பெண்.
"என் பிள்ளை வரேன்னு தானேம்மா சொல்லிட்டுப் போயிருக்கான். அது வரை இங்கேயே இருக்கேன்" என்று மன்றாடினாள் பொன்னுத்தாயி.
"மணி ஒன்பது ஆகப் போகுது. இன்னுமா உங்க பிள்ளை வருவான்னு நம்பறீங்க? வாங்கம்மா உள்ள".
இருட்டிவிட்டதால் வேறு வழியின்றி உள்ளே போகிறாள் பொன்னுத்தாயி.
இன்று வருவான் நாளை வருவான் என்ற நம்பிக்கையோடு, தினமும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்த பொன்னுத்தாயிக்கு ஏமாற்றத்தால் இதயம் வலிக்கிறது.
அம்மாவை விட்டுவிட்டு வந்த முத்துவேல் தறிகெட்டு ஓடும் கடிவாளம் இல்லா குதிரை போல் தினமும் சீட்டு, குடி , சினிமா என்று நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தான்.
இதற்கிடையே சுந்தரி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துக் கொள்கிறான். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அந்தக் குழந்தையும் வளர்ந்து வருகிறான்.
இதுவரை பொறுப்பில்லாமல் சுற்றிக்கொண்டிருந்த முத்துவேலின் போக்கில் லேசான மாற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவாக தன் மகன் பிரேமை நன்றாக வளர்த்து படிக்க வைக்க வேண்டுமென்ற ஆர்வம் எழுந்தது.