“அன்னைக்கு தான் அப்படின்னா, மறுவீட்டுக்கு வந்த புருஷனை நல்லபடியா பார்த்துக்கனும்னு தோனலை....ஒரு வார்த்தை பேசியிருப்பாளா இல்லை சிரிச்சாளா...இல்லையே”
“இந்த புத்தி கெட்ட பொண்ணு வாழ்க்கை என்னாகுமோனு வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்க” என்றவரின் குரலில் வேதனை வழிந்தது.
காலை என்ன சமைப்பது என்று கேட்க வந்த மைத்ரீயின் காதில் சாரதாவின் கடைசி வரி புலம்பல் விழவும், வந்த சுவடின்றி திரும்பிவிட்டாள்.
மாமியாரின் வார்த்தைகளே செவிகளில் ரீங்காரமிட, துணிகளை மடித்து அடுக்கி கொண்டிருந்தவளின் மனமோ கோபத்தில் எரிமலையாய் வெடித்து சிதறியது.
அப்போது தான் அறைக்குள் நுழைந்த ராகுல், காதலாய் மனைவியை அணைத்துக்கொண்டான்.
பின்னிருந்து அணைத்த கணவனை உதறியவள் தனது வேலையை தொடர்ந்தாள்.
“மையூ?!” அதிர்ச்சியாக வந்த கணவனின் குரல் கூட அவளை கலைக்கவில்லை.
காதல் நிறைந்த தங்கள் திருமண வாழ்க்கையில் முதன்முறையாக மனைவியின் புறகணிப்பு அவனை பெரிதும் பாதித்தது. சிவந்திருந்த அவளின் முகம், கோபத்தின் அவளை எடுத்து சொல்ல...
“மையூ என்னாச்சு?” கவலையும் தவிப்புமாக அவன் கேட்டிட
“வீட்ல என்ன நடக்குதுனு தெரியாம, என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு? அத்தனை முறை சொன்ன சரயூக்கு இந்த கல்யாணம் வேணாம்னு... ஒரு முறை, ஒரே ஒரு முறை நான் சொன்னத கேட்டீங்களா? இப்போ என்னாச்சு? அத்தைதா மகளோட வாழ்க்கைய நினைச்சு வருத்த படுறாங்க. அண்ணனா சரயூக்கு என்ன செஞ்சிருக்கீங்க?”
மைத்ரீயின் கோபத்திற்கான காரணம் புரிந்ததும் தான் அவனுடைய நெஞ்சில் நிம்மதி திரும்பியது.
மனைவியை நெருங்கியவன், “சரயூக்கு ஜெய்கும்தா கல்யாணம் செய்தாச்சே... இப்போ எதுக்கு அவங்களை பத்தின கவலை? ஒழுங்கு மரியாதியா உன்னோட புருஷனை கவனிக்குற வழியை பாரு” என்று குழைந்தவன் மறுபடியும் அவளை அணைத்து கழுத்து வளைவில் கவிபாட தொடங்கினான்.
சரயூவின் வாழ்க்கையை குறித்து மனதிலிருந்த பாரத்தில், கணவனின் பேச்சும் செயலும் எரிச்சலை தர, “ராகுல்! எனக்கு பிடிக்கலை” என்றவளின் ஒதுக்கத்தில் அவன் காதல் மனது அடி வாங்கியது. சட்டென மைதியிடமிருந்து விலகியவன் படுக்கையில் அமர்ந்துவிட்டான்.
அவளுக்கிருந்த கோபத்தில் அதை கவனிக்காதவளாய், “என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா, இப்படி ஜெய்க்கு சப்போர்ட் பண்ணமாட்டீங்க”
மனைவியை உறுத்து பார்த்தவன், நிதானமாக அதே சமயம் அழுத்தமாக, “தெரியும்!”
அமர்த்தலாக வந்த பதிலில் எரிச்சலுற்றவள், “என்ன தெரியும்?” என்று அவனை முறைக்க...
“அன்னைக்கு நீயும் ஜெய்யும் பேசினத கேட்டேன்”
அதிர்ச்சியில் தன்னையும் அறியாது, “என்னது?!” என்றவளுக்கோ ‘எப்படி இது சாத்தியம்?’ குழம்பிபோனாள்.
என்னதான் ஜெய்யின் செயலில், கோபம் கொண்டு அவனிடம் பேசாமலிருந்தாலும்..... ராகுலிடம் அதை பற்றி பகிர்ந்து கொள்ளவில்லை. தானே உயிர்த் தோழனை அறைந்திருக்க, சரயூவின் அண்ணனாக ராகுலின் நிலையை எண்ணிப் பார்த்தவளுக்கு அச்சமாக இருந்தது. அதனாலேயே எக்காரணத்திற்காகவும் இது கணவனுக்கு தெரியக்கூடாது என்று முடிவு செய்திருந்தாள். அப்படியிருந்தும் கோபத்தில் அவள் எதையோ உளறிவிட அவனும் தெரியும் என்கிறானே என்று குழம்பினாள்.
மனைவியின் முகத்தில் வந்த மாறுதல்களை படித்தவன், “ரொம்ப யோசிக்காத! அன்னைக்கு எங்கிட்ட பேசனும்னு தானே மாடிக்கு போன....அப்போ எதுக்கு என்னோட ஃபோன் காலை இக்னோர் பண்ணிட்டு ஜெய்ட்ட பேசின?”
அவன் கேள்வியில் ஏதோ புரிந்தவளாக, “அப்போ...அப்போ...நான் ஃபோன் இக்னோர் பண்ணலையா?” என்று தவிப்பாக ஏறிட....
“இல்லை! நீங்க பேசின எல்லாத்தையும் கேட்டேன். கடைசியா ஜெய்யை அறைஞ்சதையும் கேட்டேன். அந்த நிமிஷம்தா உன் மேலிருந்த காதல், அதோட உச்சிய தொட்டதுனு கூட சொல்லலாம்” அமைதியாக் பேசிக்கொண்டிருந்தவனிடம் இப்போது பெருமிதம் பொங்கியது. அதைக் கூட உணராது இவளோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
“அன்னைக்கு நான் செய்ய வேண்டியத நீ செய்த. ஆனாலும் கூட ஜெய் மேல இருந்த கோபம் குறையல. சிங்கப்பூர் போன வேலைய அவசரமா முடிச்சிட்டு திரும்ப வந்தேன்”
உறைந்து நின்றிருந்தவளுக்கு அவன் தன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான் என்பது புரிய, சிறு கோபம் எட்டிப்பார்த்தது....
“வேலை சீக்கிரம் முடிஞ்சதால வந்ததா சொன்னீங்களே”