“ஐ லவ் யூ ராகுல்!” என்ற மந்திரத்தை சொன்னபடி அவன் முகமெங்கும் முத்தக்கோலம் போட...அவளுக்கு இசைந்து கொடுத்து தன்னவளின் காதலில் விரும்பியே தொலைத்து போனான் ராகுல்.
ஒருவர் மற்றோருவரின் காதலில் தொலைந்து களைத்து போயிருக்க... அவன் மார்பில் சாய்ந்திருந்த மனைவியின் முடியை வருடிக் கொண்டிருந்தது ராகுலின் கை.
“மையூ!” என்று அவன் அழைக்க, “ம்...” என்றளின் மனமோ அவன் மார்பில் சாய்ந்திருக்கும் சுகமும், அவன் காதலை பெற்ற இதமுமாக நிரம்பியிருந்தது.
“ஜெய்யை மன்னிக்க கூடாதா? இன்னும் எத்தனை நாளைக்குதா அவனுக்கு இந்த தண்டனை? சரயூ அவனை மன்னிச்சு கல்யாணம் செய்துக்கிட்டா... ஆனா நீ இன்னமும் அவனை உன்னோட பழைய ஃப்ரெண்டா ஏத்துக்கலையே... நாலு வருஷம் கழிச்சு நம்ம வீட்டுக்கு வந்தவகிட்ட வா-னு கூட சொல்லாம உள்ளே போயிட்ட... அவன் மனசு என்ன பாடு பட்டிருக்கும்? நான் அவனுக்கு சப்போர்ட்டா இருந்தா கூட அவனோட ஃப்ரெண்டா உன்னை தேடுறா. சின்ன வயசிலிருந்து உங்கிட்ட இருந்த அந்த அழகான நட்பு இப்போ எங்க போச்சு? எது எப்படியானாலும் அவன் உன் ஃப்ரெண்டுங்கிறத நீ மறக்க கூடாது மையூ. அவனுக்காக இல்லைனாலும் எனக்காக அவங்கிட்ட நீ பேசனும்”
நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்து, “உங்களுக்காக எதையும் செய்வ ராகுல். கண்டிப்பா ஜெய்ட்ட பேசுற. ஜெய் என்னோட ஃப்ரெண்ட்ங்கிறதுல எப்பவும் எந்த மாற்றமும் இருந்ததில்லை. ஆனாலும் அவன் செஞ்சதை ஒரு பொண்ணா என்னால ஒத்துக்க முடியல. அவங்க கூர்க் போயிட்டு வந்த பிறகு, சரயூவை பார்த்த எனக்கு பெரிய அதிர்ச்சி. அன்னைக்கு அவள் கண்ணுல தெரிஞ்ச பயத்தை என்னால மறக்க முடியல. ஜெய்யை பார்க்கும்போதெல்லாம் அதே ஞாபகமாயிருக்கு. எனக்கே இப்படியிருந்தா சரயூவோட நிலைமை என்னனு, தோனவும்தா இந்த கல்யாணமே வேணாம்னு சொன்ன. ஆனா சரயூவே கல்யாணத்துக்கு சம்மதிக்கும் போது என்னால ஒன்னும் செய்ய முடியலை. கல்யாணம்தா ஆச்சே தவிர, சரயூ அவங்கிட்ட பேசுறது கூட இல்லை. என்னோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரோட வாழ்க்கையும் கேள்வியாக்குறியா நிக்குது இப்போ. இதனாலதா இவங்க சேரக் கூடாதுனே நினைச்ச, ராகுல்! அந்த சம்பவத்துக்கு பிறகு சரயூ என்னை ஒதுக்கிட்டா. இதுல நான் அவங்கிட்ட பேசி, அதுவே அவளை இன்னும் ஹர்ட் பண்ணிட்டானு பயமாயிருக்கு” கவலையாக சொன்ன மனைவியை தேற்றும் விதமாக...
“நீ முதல்ல ஜெய்கிட்ட பேசு... அப்றம் சரயூவை எப்படி சரி செய்லாம்னு யோசிக்கலாம். இப்போ அவள் ஜெய்யோட பொண்டாட்டி... அவளை எப்படி மாத்தனும்னு அவனுக்கு தெரியும், மையூ. அப்படியே அவனுக்கு தெரியலைனாலும் நாம ஹெல்ப் பண்ணலாம்”
ராகுலின் வார்த்தை அவளுள் நம்பிக்கையை விதைத்தது. ஜெய் மற்றும் சரயூவின் வாழ்க்கையில் எல்லாம் சீராகிவிடும் என்று தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டவள் தூங்கி போனாள்.
எல்லா பொருட்களையும் சரி பார்த்துவிட்டு கடைசியாக வீட்டிலிருந்து வெளிவந்த மைத்ரீயோடு சேர்ந்து நடந்தாள் சரயூ. முன்பு போல் இல்லாவிடினும் ஏதோ கொஞ்சம் என்று மைத்ரீயிடம் பேசுபவள், ஜெய்யோடு உட்கார்வதை தவிர்ப்பதற்கு இந்த சந்தர்பத்தை பயன்படுத்திடும் எண்ணத்தோடு அவளிடம் பேச்சு கொடுத்தபடி அவர்கள் செல்வதற்காக தயாராக நின்றிருந்த டெம்போ ட்ராவ்லெரை அடைந்தனர்.
முதலே வண்டியில் ஏறியிருந்த ஆதர்ஷும் ப்ரியாவும் ஒரு சீட்டில் அமர, சாரதாவும் வடிவும் முன் வரிசையில் உட்கார்ந்திட, சந்திரசேகரும் ரவிகுமாரும் கடைசி வரிசையை பிடித்திருந்தனர்.
முதலில் வந்த மைத்ரீ, கணவனும் ஜெய்யும் ஒரே சீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை கவனித்தவள், காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்து கொள்ள, சரயூ அவளை தொடர்ந்து செல்ல... ராகுலிடம் எதையோ பேசிக்கொண்டிருந்தாலும் அவளையே ஏக்கமாக பார்த்த ஜெய்யை கவனித்த சாரதா....
“ராகுல் வந்து உன் இடத்துல உட்காரு... நேரத்தோடு கிளம்பனுமில்லை” என்றதும், “எங்க உட்கார்ந்த என்னம்மா? வண்டி எப்ப....” பேச்சு சுவாரசியத்தில் தடை ஏற்படவும் அம்மாவின் மேலெழுந்த கோபத்தோடு ஜெய்யை பார்த்தவனின் பேச்சு அப்படியே நின்று போனது.
சாரதா சொன்னதின் பொருள் அறிந்தவன், எழுந்த மைத்ரீயின் சீட்டினருகே வரவும், தவிப்போடு நின்றிருந்த தங்கையை கண்டும் காணாமல் உட்கார, “மைதியோட கொஞ்ச பேசனும்....நான் இங்க உட்கார்ந்துக்குறனே, ராகுல்” அவள் கெஞ்சவும், ஜெய்யின் முகம் சிறுத்துவிட்டது.
‘என் பக்கத்துல உட்காருவது கூட பிடிக்கலையா சரூ? அந்தளவுக்கு நான் என்ன செய்தேன்?’