தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 16 - சாகம்பரி குமார்
க்ருபாவின் மனதில் பண்பாளனாக பள்ளித் தோழன் சுந்தரம் நிற்க.. அவனையே துளசிக்கு மணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணமும் உறுதியானது.
அதே சமயத்தில் துளசியின் மனதை புரிந்து கொள்ள கற்பகம் முயற்சித்தாள்.
"துளசி.. காதல் திருமணம் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?"
"ஏன்ப்பா இப்படி கேட்கற. நீ யாரையாச்சும் லவ் பண்றியா?"
"ஏன் பண்ணக் கூடாதா?" சிரித்துக் கொண்டே பதில் கேள்வி கேட்டாள். அவள் யாரையும் காதலிக்கவில்லை. அவளுக்குதான் அத்தை மகன் கங்காதரன் இருக்கிறானே.. துளசியை சீண்ட அப்படி சொன்னாள்.
"அச்சோ அப்படி செய்யாதேப்பா. அப்புறம் விசாக்கா கதைபோல ஆயிடும்" கலக்கததுடன் சொன்னாள்.
"அது யார் விசாக்கா… பேய் கதைபோல சொல்ற"
"பேய் கதையில்லை. காதலிச்சு தோத்துபோய் செத்துபோன பெண்ணோட கதை. அதை கேட்டால் காதலிக்கற ஆசையே போயிடும்"
"அப்படியா சொல்லு கேட்கறேன்"
துளசி சொல்ல ஆரம்பித்தாள்.
"அது என் சின்ன வயசுல நடந்தது…. அப்போ நாங்க மலையூரில் இருநதோம். அப்புறம்தான் நாங்க இந்த ஊருக்கு வந்தோம்."
மலையூரின் தேவதை விசாக்கா.... பால்ராஜண்ணாவின் தங்கை. துளசியைவிட பத்து வயது பெரியவள். கிராமத்தின் அழகு தேவதை! பட்டுப்பாவாடை தாவணி, தலை நிறைய மல்லிகை வைத்து, மஞ்சள் முகம் பளபளக்க இருப்பாள். அவர்கள் அனைவரும் அவளை தலைவியாக அங்கீகரித்து இருந்தனர். அவளுக்கு விசாக்கா ஒரு ரோல் மாடல்தான். சிரிக்க… விளையாட… கதை பேச என்று விசாக்கா உடனேயே திரிவாள்.
அந்த கிராமத்திலேயே விசாக்காவிடமிருந்துதான் தேவலோக வாசனை வீசுவதாககூட அவளுக்கு தோன்றும். அவளுடைய ஆளுமை அப்படி. எல்லாமே கட்டளையாகத்தான் பேசுவாள். பால்ராஜண்ணா ஊர் தலைவர் என்பதால் யாரும் விசாக்காவை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
ஒரு சமயம் ஊர் திருவிழாவின்போது ஒரே கொண்டாட்டம்தான். துளசியை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள். பாவாடை தாவணி அணிந்து பதினாறு வயதினிலே ஸ்ரீதேவிபோல் சத்தம்போட்டு சிரித்துக் கொண்டு… காதில் ஒற்றை ரோஜாவை அணிந்து கொண்டு…. சினிமா கதாநாயகிபோல இருந்தாள்.