தொடர்கதை - சின்ன மருமகள் - 03 - சசிரேகா
வேணியோ கதைகேட்கும் ஆர்வத்தில் சட்டமாக அமர்ந்து ம் கொட்ட குபேரனும் தொடர்ந்து நடந்த கதையை சொன்னார்
”நல்லவேளை வேணி, அந்நேரம் வேங்கையனோட நிலத்தில வேலை முடிஞ்சி ஆளுங்க எல்லாம் போயிருந்தாங்க, மஹதியும் ஒரு பனைமரத்துக்கு பின்னாடி நின்னுக்கிட்டு பார்த்தா வழக்கம் போல நான் வேங்கையன்கிட்ட போய் நின்னேன். என்னைப் பார்த்ததும் பவ்யமா பேசினான், என்னதான் ஜானகியால அவமானப்பட்டிருந்தாலும் வேங்கையன் மாறவேயில்லை, எப்பவும் போலவே மரியாதையா பேசினான் தெரியுமா”
”வேங்கையன் குணமே அதுதானேங்க”
”அது அவளுக்கு புரியலையே”
“புரியும்ங்க புரிய வைக்கதான், மஹதி வந்திருக்காளே”
”வேங்கையன் என்னைப் பார்த்ததும் டீ தண்ணி கொடுத்து உபசரிச்சான், அப்புறம் பனங்கிழங்கு கொடுத்தான், ஜானகி நல்லாயிருக்கா ஒரு பிரச்சனையும் இல்லைன்னு சொன்னான், அதைக்கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது நான் சிரிக்கவும் அவன் அசடு வழிஞ்சான், மருமகனே எதுக்கு பொய் சொல்ற, என் பொண்ணை பத்தி எனக்குத் தெரியாதா, ஊர் முன்னாடி வீட்டு மானத்தை வாங்கினாளே, அதை நான் மறக்கலைன்னு சொன்னேன், அதுக்கு அவன் சொல்றான் அறியா பொண்ணு தெரியாம செய்த விசயத்தை நானும் சரி என் குடும்பமும் சரி என்னிக்கோ மறந்துட்டோம், அதே போல நீங்களும் மறந்துடுங்கன்னு சொன்னான், எப்படிப்பா மறக்கறது இன்னும் 6 மாசம்தான் அவளுக்கும் உனக்கும் விவாகரத்து ஆயிட்டா அப்புறம் உன் நிலைமை என்னாகிறதுன்னு கேட்டா, அதுக்கு அவன் சொல்றான் ஜானகியை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவளுக்கு பிடிச்ச மாதிரி எனக்கு பாசம் காட்ட தெரியலைன்னாலும் அவள் இல்லாம என்னால வாழமுடியாது ஆனா, அவளுக்கு என்னைப் பிடிக்கலை, மூர்த்தியைதான் பிடிச்சிருக்கு பேசாம அவளை மூர்த்தியோட சேர்த்து வைச்சிடுங்க, அவளாவது சந்தோஷமா இருக்கட்டும், அவள் சந்தோஷமா இருக்கறதை பார்த்து நான் என்னோட மீதிவாழ்க்கையை கழிச்சிக்கிறேன்னு சொன்னான்”