சமாளிக்கும் எண்ணத்தோடு வாயை திறந்த விக்கிராந்த், அப்பாவின் பார்வையை சந்தித்து விட்டு, மனதை மாற்றிக் கொண்டு,
“அப்படி எல்லாம் இல்லைப்பா... கொஞ்ச நேரம் சும்மா ரிலாக்ஸாக போறது தான்...” என்றான்.
கணபதி பதில் சொல்லாமல் மகனையே பார்த்தப்படி இருந்தார். ஆனால் ராஜமினால் அமைதியாக இருக்க இயலவில்லை.
“நீயாடா இப்படி பேசுறது? உன்னை நல்லபடியா வளர்த்ததா தானே நான் இதுவரை நினைச்சுட்டு இருக்கேன்...”
“அம்மா! சும்மா ஃப்ரென்ட்ஸ் கூப்பிடும் போது போறது தான்... பெரிசா எதுவும் இல்லை...”
“ஃப்ரென்ட்ஸ் கூப்பிட்டா...”
“ராஜம், போதும் விடு! விக்ராந்த் நீ போ, போய் ரெஸ்ட் எடு...”
வர்ஷாவை பார்த்து முறைத்து விட்டு உள்ளே சென்றான் விக்ராந்த்.
🌼🌸❀✿🌷
மதிய உணவிற்கு பின், ஏதோ யோசனையோடு அமர்ந்திருந்த கணபதியின் அருகில் சென்ற ராஜம்,
“என்னங்க எனக்கு நம்ம விக்கியை நினைச்சா பயமா இருக்கு! தண்ணி அடிக்குற கெட்டப் பழக்கம் எல்லாம் இவனுக்கு எப்படி வந்தது?” என்றாள் கவலையுடன்!
“ராஜி, நீ தேவை இல்லாம ரொம்ப யோசிக்குற! விக்கி கெட்டுப் போயிருந்தா நம்ம கிட்ட அப்படி பணிவா பேசி இருக்க மாட்டான்... யோசிச்சுப் பார்... அவனுக்கு முப்பது வயசாச்சு, கை நிறைய சம்பாதிக்குறான், ஆனாலும் நமக்கு இன்னும் மரியாதை கொடுக்குறான்...”