அப்பா கொடுத்த சுதந்திரத்தினால் விக்கிராந்தின் முகம் பளிச்சென்று மலர்ந்தது! பெரிய சிரிப்புடன் சரி என தலை அசைத்து அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டான் அவன்!
அவனின் முக மாற்றத்தை பார்த்து வர்ஷாவிற்கு மட்டுமல்லாமல் ராஜமிற்கும் சிரிப்பு வந்தது!
அனைத்தும் இயல்புக்கு திரும்புவதை உணர்ந்துக் கொண்ட கணபதி, பேச்சை வேறு தலைப்பிற்கு மாற்றும் முயற்சியாக, "சென்னையில் எங்கே தங்க போற விக்கி,” என மகனிடம் கேட்டார்.
“சரவணன் கூட தங்கலாம்னு இருக்கேன் அப்பா... அவன் கிட்ட இன்னும் பேசலை... பேசி டிசைட் செய்யனும்!”
“வேண்டாம் விக்கி... அப்படி பேச்சலர் ரூம்ல தங்கினா தேவை இல்லாத பழக்கம் எல்லாம் வரும்... நீ நம்ம கே கே நகர் ஃப்ளாட்டில் தங்கிக்கோ... அங்கே வாடகைக்கு இருந்த ஃபேமிலி போன மாசம் தான் காலி செய்தாங்க. அது இப்போ ஃப்ரீயா தான் இருக்கு...”
“சரி அப்பா...”
“அந்த ஃப்ளாட் பக்கத்திலேயே ஒரு மெஸ் இருக்கு, சாப்பாடு நல்லா இருக்கும் அங்கேயே வாங்கி சாப்பிடு, வீட்டு சாப்பாடு போலவே இருக்கும்...”
“சாப்பாடு பிரச்சனையே இல்லை அப்பா... நானே மேனேஜ் செய்துப்பேன்...”
"கே கே நகர்ல இருந்து உனக்கு ஆஃபீஸ் போறது ஓகே தானான்னும் யோசிச்சுக்கோ விக்கி," என ராஜமும் கேட்க, பேச்சு அப்படி அந்த திசையிலேயே தொடர்ந்தது!
அதற்கு பிறகு எல்லாமே எப்போதும் போல பேச்சும், கலாட்டாவுமாக சென்றது! ராஜமும் விக்கிராந்திடம் சாதாரணமாகவே தான் பேசினாள்! ஆனாலும் விக்கிராந்தின் மனதில் மெல்லிய சஞ்சலம் இருந்துக் கொண்டே இருந்தது!