தொடர்கதை - திருமதி அகத்தியன் - 02 - சசிரேகா
அகத்தியன் கார்மெண்ட்ஸில் அன்று பார்த்து ரெய்டு நடக்கப் போவதாக தகவல் வந்ததும் அகத்தியன் சுறுசுறுப்பானான். இவ்விசயம் கேட்டதும் தாத்தா சங்கமேஸ்வரனோ
”அகத்தியா பதட்டப்படாத, இது மாதிரி நடக்கறது சகஜம், ரெய்ட் நடக்கறப்ப ஏதாவது தப்பை கண்டறிஞ்சாலும் நீ தைரியமா எதிர்த்து நிக்கனும், ஒரு போதும் பயத்தை வெளிகாட்டிடாத சரியா” என அறிவுரை சொல்ல அதைக்கேட்ட அகத்தியனுக்கு வேடிக்கையாக இருந்தது
”எப்படி தாத்தா இது போல உங்களால பேச முடியுது, நீங்க சொல்றதை பார்த்தா நான் ஏதோ கார்மெண்ட்ஸ்ல தப்பான கணக்குவழக்குகளை வைச்சிருக்கற மாதிரியில்ல பேசறீங்க, என்கிட்ட நேர்மை இருக்கு, கணக்குகளும் சரியா இருக்கு தாத்தா, பணம் சம்பாதிக்க நான் கார்மெண்ட்ஸ் திறக்கலை, என்னால முடிஞ்சளவு மக்களுக்கு வேலை வாய்ப்பு தரலாம்னுதான் திறந்தேன்”
”எனக்கு உன்னைப் பத்தி தெரியாதா நீ நேர்மையானவன்தான் ஆனா, உன் கார்மெண்ட்ஸ்ல வேலை செய்ற சில ஆளுங்களால நீ எங்கயும் மாட்டிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்“
”யாரைச் சொல்றீங்க“
”அதான் நாங்க வேணாம் வேணாம்னு எத்தனை முறைச் சொன்னாலும் கேட்காம வேலைக்கு வைச்சியே அந்த கீழவீதியாட்களைதான் சொல்றேன், அவங்க நேர்மையா இருக்க மாட்டாங்க, அவங்க செய்ற தில்லுமுல்லால நீ மாட்டிக்க கூடாது, உனக்கு அவப்பெயர் வரக்கூடாதுன்னு நான் பார்க்கிறேன்”
”தாத்தா கார்மெண்ட்ஸ்ல மொத்தம் 100 பேர் வேலை செய்றாங்க, அவங்களுக்குள்ள பிரிவினை வந்துடக்கூடாதுன்னு சரிக்கு சரியா 50 பேர் மேலவீதியாட்களும் 50 பேர் கீழவீதியாட்களும் வேலை செய்றாங்க, எந்தளவுக்கு மேலவீதியாட்களுக்கு பதவி அதிகாரம் கொடுத்திருக்கேனோ அதே அளவுக்கு பதவி அதிகாரம் எல்லாம் கீழவீதியாட்களுக்கும் கொடுத்திருக்கேன், என்கிட்ட இருக்கற எல்லாருமே விசுவாசமானவங்கதான், கீழவீதியாட்கள் மட்டும்தான் நேர்மையில்லாதவங்கன்னு நினைக்காதீங்க ஏன் மேலவீதியாட்கள்கூட சுயநலத்துக்காக என்னை மாட்டிவிடலாம்லயா”