09. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா
'எனக்கு......... உன்னை...... பிடிக்கலை' அந்த வார்த்தைகளின் தாக்கத்திலிருந்து வெளி வர முடியாதவனாகவே காரை செலுத்திக்கொண்டிருந்தான் வசந்த்.
உடலும் மனமும் செயலிழந்துவிட்டதைப்போலே தோன்றியது.
'எப்படி இப்படி பேச முடிந்தது என் அர்ச்சனாவால்?' உணர்வுகள் பொங்க சுவாசம் அழுந்தியது அவனுக்கு.
மனம் பழைய நினைவுகளில் சுழன்றது. இதே போன்றதொரு இரவில் தானே அந்த வார்த்தைகளை சொன்னாள் அவள்.
திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டுதான் இருந்தான் வசந்த்.
'நீ என் முகத்தை பார்த்து என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ற வரைக்கும் நான் உனக்கு தாலிக்கட்ட மாட்டேன்'.
மனோ திருமணதிற்கு நான்கு நாட்கள் இருந்தன.
டெல்லியின் அக்டோபர் மாத குளிர் லேசாக வருடிக்கொண்டிருந்த இரவு பொழுது அது.
அவன் வீட்டு போர்டிகோவில் வந்து நின்றது அவன் கார். மருத்துவமனைக்கு சென்று விட்டு இருவரும் திரும்பியிருந்தனர்.
அவன் அவளுக்காக கார் கதவை திறந்த போது, காரிலிருந்து இறங்கியவள் நகரப்போனவனை கை பிடித்து நிறுத்தினாள்.
சில நொடிகள் அவன் முகத்தை பார்த்தபடியே அப்படியே நின்றிருந்தாள்.
அவள் டெல்லியில் இருந்த நாட்களில் அவன் அவளை தாங்கிக்கொண்ட விதத்தில் சற்று நெகிழ்ந்துதான் போயிருந்தாள் அர்ச்சனா.
'என்ன அர்ச்சனா அப்படி பார்க்கிறே? என்றான் வசந்த்.
அவன் கண்களுக்குள் நேராக பார்த்து கண்களில் நீர் கோடுகள் சேர நிதானமாய் சொன்னாள் அர்ச்சனா 'எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு வசந்த்.'
அவன் இதழ்களில் மெல்ல மெல்ல புன்னகை ஓட துவங்கியது.
என்னது? என்னது? மறுபடியும் சொல்லு என்றான் வசந்த்.
'எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு வசந்த்' என்றாள் அவன் கண்களுக்குள் பார்த்தப்படியே.
சில நொடிகள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் எதிர்பார்க்காத நொடியில் அவளை அப்படியே தூக்கி சுழற்ற, வீட்டின் உள்ளிருந்து அழைத்த தங்கை அனுராதாவின் குரலில் இருவரும் தடுமாறிப்போய், விழாமல் சமாளித்து சிரித்த நிமிடம்...........
க்ரீ..............ச். அவனே அறியாமல் அவன் கால் பிரேக்கை அழுத்தி, கார் க்ரீச்சிட்டு நின்ற நொடியில் நிகழ் காலத்துக்கு வந்தான் வசந்த்.
விலகிச்சென்ற மற்றொரு கார் ஓட்டுனரின் திட்டுகளை மௌனமாய் வாங்கிக்கொண்டே காரை நகர்த்தினான். 'தவறு அவன் மீது தானே?
'புத்தியை எங்கோ வைத்துக்கொண்டு வாகனத்தை செலுத்தாதே' என்று ஏதோ ஒன்று அவனை எச்சரித்தது புரியவில்லை அவனுக்கு'
ஆட்டோ நகர்ந்து கொண்டிருந்தது. விவேக்கின் அருகே சிலையாய் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. அவன் பார்வை அவள் மீதே இருந்தது. அவள் பார்வை ரோட்டை வெறித்துக்கொண்டிருந்தது.
அவள் உதடுகள் தாண்டி அந்த வார்த்தைகள் எப்படி வெடித்தன என்று அவளுக்கே புரியவில்லை.
'எப்படி தாங்கிக்கொள்வான் வசந்த்.? ரொம்பவும் காயப்படுத்திவிட்டேனே? என்று அவள் மனதின் ஒரு பக்கம் தவித்த வேளையில்,
'நடந்தது நன்மைக்கே' என்றது இன்னொரு பக்கம்
அப்பாவை மீறி நான் அவனை நெருங்கி விட போவதில்லை என்ற நிலையில், அவன் என்னை நினைத்து உருகியது போதும் .இதோடு என்னை வெறுத்து ஒதுக்கி விட்டு, வேறொரு நிம்மதியான வாழ்க்கையை தேடிக்கொள்ளட்டும்.'
'அர்ச்சனா' கலைத்தது விவேக்கின் குரல் 'உன் பக்கத்துலே ஒருத்தன் உட்கார்ந்திருக்கேன் தெரியுமா?
சட்டென்று தன்னை இயல்புக்கு தள்ளிக்கொண்டவளாய் அவனை பார்த்து புன்னகைத்தாள் அர்ச்சனா.
அந்த திடீர் புன்னகையில் சற்று வியந்து போனான். ஏனோ அவள் கண்களில் கண்ணீரையே எதிர்பார்த்திருந்தான் விவேக்.
'எப்போதும் இந்த புன்னகையுடனே இருந்துவிடு என் தேவதையே எனக்கு அது போதும்'
'ஏன் அப்படி பார்க்கறீங்க?' என்றாள் அர்ச்சனா
ஒண்ணுமில்லை என்றான் விவேக் 'சும்மா ஏதாவது பேசலாமே.
சட்டென்று கேட்டாள் 'அப்பா இப்போ நல்லாயிருக்காருல்லே. உடம்புக்கு ஒண்ணும் இல்லையே'
சிரித்தே விட்டிருந்தான் விவேக். 'இதை தவிர உனக்கு வேற எதுவுமே கேட்க தெரியாதா உனக்கு?
இ...ல்லை அப்படி இல்லை. நீ.. நீங்க சாப்பிட்டீங்களா?
பதில் சொல்லாமல் புன்னகையுடன் சில நொடிகள் அவள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டே இருந்தான் விவேக் பின்னர் செல்லமாய் அவள் மூக்கை கிள்ளிய படியே சொன்னான் 'சரியான அப்பா பைத்தியம்'
மனோ வீட்டு வாசலில் ஆட்டோ சென்று அதிலிருந்து அவள் இறங்கிய நொடியில் அவளேயறியாமல் அவள் கண்கள் வசந்த் வீட்டின் மீதுதான் சென்று நின்றன.
அவனது கார் வாசலில் நின்றிருந்தது.
'என்ன செய்துக்கொண்டிருப்பான் உள்ளே?' அவள் உள்ளம் தவிப்பதை தடுக்க முடியவில்லை அவளால்.