“நீ சும்மா கேட்டாளே எனக்கு ஏதோ மாதிரி இருக்கும். இப்படி தலை ஆட்டி, என்னை பார்த்து கண் அடிச்சி வேற கேட்கறியா அதான் என்னென்னவோ பண்ணுது, இது வேற ஹாஸ்பிடல், அப்புறம் எக்கு தப்பா எதாச்சும் நடந்துட்டா, அதான் தள்ளியே இருக்கலாம்னு” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.
“கண் அடிச்சேனா”
“இல்லையா பின்ன”
“அதுக்கு பேரு கண் சிமிட்டறது”
“எங்க ஊருல அதுக்கு பேரு கண் அடிக்கறது”
“ஓஹோ” என்று திரும்ப சிரித்தாள்.
“போதும்மா. நீ வேற இப்படி சிரிச்சி வைக்காத. டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணு சரியா. மனுஷன் கஷ்டம் உனக்கு எங்க தெரியுது.” என்று சிடுசிடுத்தான்.
இனியாவிற்கு புரிந்தது. அவன் தன்னை நார்மலாக்க ஏதேதோ பேசுகிறான் என்று. அந்த நினைவே அவள் முகத்தில் மென்மையான புன்னகையை கொடுத்தது.
அதற்குள் ஜோதியும், பவித்ராவும் அங்கு வந்து சேர்ந்தார்கள்..
இருவரும் உள்ளே வரும் போது இனியாவும், இளவரசனும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
“என்ன இது. நீங்க என்னென்னவோ சொன்னீங்க. அப்பா வேற போன் பண்ணி பயமுறுத்தினார். இங்க வந்து பார்த்தா ரெண்டு பேரும் இப்படி சிரிச்சிட்டு இருக்கீங்க” என்றாள்.
“ஏங்க நீங்க கஷ்டப்பட்டு இங்க வந்ததுக்காக என் பொண்டாட்டி இன்னும் பேஷண்ட்டாவே இருக்கணுமா” என்றான்.
“அது சரி” என்றாள் ஜோதி.
“பின்ன என்னங்க. வந்தீங்க சரி. நீங்க வரும் போது அவ நல்லா இருந்தா அது நல்லது தானே. அதுக்காக இப்படி கேட்கறீங்க”
“தெரியாம கேட்டுட்டேன். விட்டுடுங்க” என்றவள் இனியாவிடம் “நீயாவது சொல்லேன் டீ” என்றாள்.
“இளா விடுங்க. ஏன் அக்காவை வறுத்து எடுக்கறீங்க”
“ம்ம்ம். நீ சொல்றதுனால விடுறேன்” என்றான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜோதி சிறிது கோபம் கொண்டவளாக “எல்லாம் என் நேரம். ஒவ்வொருத்தவங்க நேத்து சண்டை போட்டுக்கறாங்க. இன்னைக்கு சேர்ந்துக்கறாங்க” என்றாள்.
“யாரு. யார் அப்படி எல்லாம் சண்டை போட்டாங்க. இனியா உனக்கு தெரிஞ்சி யாருனா சண்டை போட்டாங்களா என்ன” என்றான்.
“இல்லையே” என்றாள் அவளும்.
ஜோதி அவளை அடிக்க கை ஒங்க “என்னங்க. அடிச்சிடாதீங்க. அவளுக்கே உடம்பு சரி இல்லை” என்றான்.
“அடடா. ரொம்ப தான் சப்போர்ட்டா இருக்கே. போங்க. இவ என் தங்கச்சி. நான் பார்த்துக்குவேன்” என்றாள்.
“சரி விடுங்க. எதுக்கு இப்ப கோச்சிக்கறீங்க. வாங்க. டாக்டர் போய் பார்த்துட்டு வந்துடலாம்”
“நான் எதுக்கு” என்றவள் பிறகு “சரி வரேன்” என்றவாறு பவித்ராவை இனியாவுடன் விட்டுவிட்டு அவனுடன் சென்றாள்..
வெளியே சென்ற பின் “என்ன” என்று கேட்டாள் ஜோதி.
அவளிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டு “அதைப் பத்தி நியாபகப் படுத்தற மாதிரி ஏதும் பேசிடாதீங்க” என்றான்.
“ஐயோ. அவ என் தங்கச்சி. எங்களுக்கும் அவ மேல அக்கறை இருக்கும். நாங்களும் அவளை நல்லா தான் பார்த்துப்போம். சரியா” என்றாள்.
“இல்ல. அதுக்கில்லை. உங்க எல்லாருக்கும் அக்கறை இருக்கும் தான். ஏதாச்சும் பேச்சு வாக்குல ஏதாச்சும் சொல்லிட போறீங்கன்னு தான்” என்றான்.
ஜோதி சிரித்துக் கொண்டே “சரி சரி. நான் அவ கூடவே இருக்கேன். நான் பார்த்துக்கறேன். போதுமா” என்றாள்.
“ம்ம்ம்”
பின்பு ஹாஸ்பிடலில் இருந்து இனியாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு போனவுடன் ராஜகோபால் வெளியே ஓடி வந்து “என்னடாம்மா. காலைலயே சொன்னேன்ல அதையே நினைச்சி ரொம்ப அலட்டிக்காதன்னு, சரி சரி, உள்ளே வா” என்றார்.
லக்ஷ்மிக்கோ ஒன்றும் புரியவில்லை.
இனியாவின் முகத்தை பார்த்தால் களைப்பாக இருந்தது.
இனியாவிற்கு இன்னமும் உடல் சோர்வு போகவில்லை.
உள்ளே வரும் போது கால் தடுக்கி விழ போனவளை ஜோதி பிடிப்பதற்குள், இளவரசன் ஓடி சென்று தாங்கினான்.
உடனே அவன் பார்வை லக்ஷ்மியிடம் தான் சென்றது. உடனே விலகி நின்றான்.
உள்ளே வந்தவர்களிடத்தில் விளக்கம் கேட்க வாயெடுத்த லக்ஷ்மியிடம் “அத்தை எதாச்சும் குடிக்க எடுத்துட்டு வரீங்களா. ப்ளீஸ்” என்றான்.
லக்ஷ்மிக்கோ ஒரே கடுப்பு. இனியாவிற்கு என்னவென்று தெரியவில்லை. என்னவென்று கேட்கலாம் என்று எண்ணினால், இப்படி பேச விடாமல் செய்கிறானே (செய்கிறாரே, என்ன தான் இருந்தாலும் வருங்கால மாப்பிள்ளை இல்ல) என்று.
மனதிற்குள் இதை எல்லாம் புலம்பிக் கொண்டே உள்ளே சென்றார்.
அதற்குள் இளவரசன் ஜோதியிடம் “இவளை முதல்ல அவ ரூம்க்கு கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க. டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொன்னார் இல்ல.” என்றான்.
ஜோதியும் அதை ஆமோதித்து இனியாவை அவள் அறைக்கு அழைத்து சென்றாள்.
போகும் முன் இனியா இளவரசனை பார்த்து “தேங்க்ஸ்” என்று கூறி அவனுக்கான பிரத்யேக கண் சிமிட்டலை செய்து விட்டு போனாள்.
இளவரசனால் ஒரு நிமிடம் அவனை கண்ட்ரோல் செய்யவே இயலவில்லை.
திரும்பி அவன் மாமாவையும், பவித்ராவையும் பார்த்து தன்னை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
அதற்குள் வெளியே வந்த லக்ஷ்மி இனியாவை காணவில்லையே என்று கண்ணால் தேடினார்.
“அத்தை சாரி, இனியாக்கு என்னன்னு நீங்க பதறிட்டு இருக்கும் போது உங்களை வேலை சொல்லி உள்ளே அனுப்பனது தப்பு தான். ஆனா அவ எதிர்ல அதை பத்தி திரும்ப பேச வேண்டாம்ன்னு தான்” என்று காரணம் சொல்லி பின்பு நடந்தவற்றை கூறினான்.
திரும்ப “சாரி அத்தை” என்றான்.
“இல்லப்பா உன் மேல தப்பு இல்ல” என்று அவனிடம் நெடுநாட்களுக்கு பிறகு சமாதானமாக பேசினார் லக்ஷ்மி.
உடனே கணவரிடம் திரும்பியவர் “எல்லாம் உங்களை சொல்லணும். அவ தான் காலைல இருந்து அதையே நினைச்சிட்டு பீல் பண்ணிட்டு இருந்தாலே, அதை பத்தி முதல்லயே இவர் கிட்ட சொல்லி இருக்கலாம்ல” என்றார்.