குழம்பிய முகத்துடன் இருந்த மனைவியை பார்த்து விட்டு நன்றாக யோசிக்கட்டும் என்று எண்ணி அங்கிருந்து சென்றார் ராஜகோபால்.
லக்ஷ்மி இனியாவின் அறைக்கு சென்றார். இனியா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளையே பார்த்தவாறு நெடு நேரம் அமர்ந்துக் கொண்டிருந்தார்.
வீட்டிற்கு சென்ற இளவரசனை பார்த்த ராஜி அவன் முகத்தை பார்த்து “சாப்பாடு எடுத்து வைக்கறேன் வா” என்றார்.
அவனும் ரிப்ரெஸ் செய்துக் கொண்டு வருவதாக கூறி சென்றான்.
மோகனின் வரவுக்கு பின்பு இருவரும் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தனர்.
சாப்பிட வந்தமர்ந்த இளவரசன் “சந்துரு எங்கம்மா” என்று கேட்கும் போதே சந்துரு வந்தான்.
“நீயும் வந்து சாப்பிடு வா” என்றார் ராஜி.
அவனும் வந்தமர்ந்தான்.
“ஏன் இவ்வளவு லேட்” என்றார் ராஜி பொதுவாக இருவரையும் பார்த்து.
சந்துரு “கம்பனி விசயமாக அண்ணன் ஒருத்தரை பார்க்க சொன்னாரு. அவரை பார்த்துட்டு வர லேட் ஆகிடுச்சி, ஹோட்டல்ல சாப்பிடறதுக்கு வீட்டுக்கே வரலாம்ன்னு வந்துட்டேன்” என்றான்.
“நீ ஏன் அண்ணா லேட்” என்றான் சந்துரு.
இளவரசன் சுருக்கமாக எல்லாவற்றையும் கூறினான்.
ராஜியும் வருத்தப் பட்டார்.
“என்னன்னா இவ்வளவு லேட்டா சொல்ற” என்று கூறிக் கொண்டே இனியாவின் மொபைலிற்கு போன் போட்டான்.
அவள் எடுக்கவில்லை.
“ஹேய் அவ ரெஸ்ட் எடுத்துட்டிருப்பா டா. டிஸ்டர்ப் பண்ணாத”
“சரி” என்றவன் வீட்டு எண்ணிற்கு அழைத்தான்.
போனை எடுத்த லக்ஷ்மி இனியா உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்றார். பிறகு ராஜியும் போனை வாங்கி பேசி விட்டு வைத்தார்.
சாப்பிட்டுக் கொண்டே இருந்தவன் “நீங்க(பெண்கள்) எல்லாம் எவ்வளவு உயர்ந்தவங்கம்மா. உங்களுக்குள்ள அவ்வளவு கருணையும், அன்பையும் வச்சிருக்கீங்க. எனக்கும் கூட கஷ்டமா தான் இருக்கு, ஆனா நாங்க வேற ஒரு விசயம் நடக்கும் போது அதை மறந்துட்டு போயிட்டே இருப்போம், அந்த ஒரு உண்மையான வருத்தம் தெரிவிக்கறது கூட நீங்க தான். அந்த தாய் மனசு தாய் மனசு தான் இல்லையா. என்ன தான் இருந்தாலும், நாங்க எல்லாம் உங்க அளவுக்கு வர முடியாதும்மா.” என்றான்.
“யூ ஆர் ஆல் சிம்ப்லி கிரேட்” என்றவன் “ஒரு நிமிஷம் அந்த பொண்ணை திட்டுறா, அடுத்த நிமிஷம் அவளுக்கும் என்ன சூழ்நிலையோன்னு சொல்லுறா.”
“ரொம்ப கஷ்டப்பட்டுட்டாம்மா”
தன் நினைவே இல்லாமல் உணர்ச்சி வசப் பட்டு தானாக பேசிக் கொண்டிருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு.
அவன் முகத்தில் அவன் இனியாவின் மேல் வைத்திருக்கும் அன்பு தெரிந்தது.
பேசிக் கொண்டே சென்றவன் சாப்பாட்டின் நினைவே இல்லாமல் எழுந்து சென்று விட்டான்.
சந்துரு, ராஜி இருவருக்குமே அதிர்ச்சி தான்.
எத்தனை மீட்டிங்கில் அத்தனை பேரை போடு போட்டு கலங்கடிப்பவன், தன் நினைவில்லாமல் எழுந்து செல்கிறான் என்றால் என்ன சொல்வது.
காதல் ஒரு மனுசனை இத்தனை மாற்றுமா என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு.
இரவு எட்டு மணியாகி விட்டது. இளவரசனுக்கு வேலையே ஓடவில்லை. அவனுக்கு ஏனோ இனியாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் அங்கு செல்லவும் தயக்கமாக இருந்தது. எனவே அவளுக்கு போன் செய்தான். ஆனால் அவளோ எடுக்கவில்லை.
எத்தனையோ முறைகள் முயற்சி செய்தும் அவள் எடுக்கவில்லை.
திடீரென்று முடிவு செய்து அவள் வீட்டிற்கு கிளம்பி விட்டான்.
அவள் வீட்டிற்கு அருகில் வந்து விட்டானே தவிர, அவனுக்குள் தயக்கம் தான். ஆனாலும் அவளை பார்த்து விட வேண்டும் என்று தீவிரமான எண்ணம் மட்டும் தோன்றவே வந்து விட்டான்.
காரை விட்டு இறங்கி எப்படி வீட்டிற்குள் செல்வது என்று என்றும் இல்லாத தயக்கம் இன்று வந்து ஓட்டிக் கொண்டது.
கடவுளே மாமா வந்து கதவை திறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டே சென்று காலிங் பெல் அடித்தால், அவன் வேண்டுதல் நிறைவேறாமல் அவன் அத்தையே வந்து கதவை திறந்தார்.
கடவுளை மனதிற்குள் திட்டிக் கொண்டே, என்ன சொல்வதென்று தெரியாமல் அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான்.
அவனை கண்டு சிறிது வியப்படைந்த லக்ஷ்மிக்கு, அவனின் அசட்டு சிரிப்பை பார்த்து அவருக்கும் சிரிப்பு தான் வந்தது.
“வாங்க” என்று அவனை வரவேற்றார்.
ஹாலிற்கு சென்று அமர்ந்தவன், “மாமா இல்லையா அத்தை” என்றான்.
“இல்லை ஜோதியை வீட்டுல விட்டுட்டு வர போயிருக்கார். இப்ப தான் கிளம்பனாங்க” என்றார்.
“அப்படியா. மாமாவை தான் ஒரு விஷயமா பார்க்க வந்தேன்” என்றான்.
(உங்க மாமா கேசவனுக்கு போன் பண்ண மாதிரியா என்று நினைத்துக் கொண்டார் லக்ஷ்மி)
“ஓஹோ”
“இனியாக்கு பரவால்லையா”
“ம்ம்ம். நல்லா தான் இருக்கா. இப்ப தான் டேபிலேட் கொடுத்தேன். தூங்கறா”
“ஓ சரி சரி”
பவித்ரா “காபி சாப்படறீங்களா மாமா” என்றாள்.
லக்ஷ்மியோ “சாப்பிடற டைம் ஆச்சி. காபி எல்லாம் வேண்டாம். சாப்பிட்டுட்டே போப்பா” என்றார்.
“இல்ல அத்தை. வேண்டாம்” என்றவன் எழுந்துக் கொண்டான்.
“சரி. நான் கிளம்பறேன் அத்தை” என்று கூறிவிட்டு கதவு வரை சென்றவன் திரும்பி “அத்தை. ப்ளீஸ். நான் இனியாவை ஒரே ஒரு முறை பார்த்துட்டு வரவா” என்றான்.
லக்ஷ்மிக்கே சிறு அதிர்ச்சி தான். தன்னிடமே இப்படி கேட்பான் என்று அவர் எண்ணவில்லை.
என்ன கூறுவதென்று தெரியாமல் “ம்ம்ம். பார்த்துட்டு வா” என்றார்.
பவித்ராவிற்கோ பேரதிர்ச்சி.
அவன் இவ்வாறு நேராக அத்தையிடம் கேட்பான் என்று அவளும் நினைக்கவில்லை.
“தேங்க்ஸ் அத்தை” என்று விட்டு அவன் இரண்டிரண்டு படிகளாக தாவ, அவர்கள் மெதுவாக பின் சென்றார்கள்.
அவன் இனியாவின் அறைக்குள் சென்று இரண்டு நிமிடம் அமைதியாக பார்த்து விட்டு கடைசியாக அவள் தலையைக் கோதிவிட்டு வெளியே வந்தான்.
பவித்ராவும், லக்ஷ்மியும் வெளியில் தான் நின்றிருந்தார்கள். அவனின் செய்கையையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.
“ரொம்ப தேங்க்ஸ் அத்தை” என்று கூறிவிட்டு வேக நடை நடந்து சென்று விட்டான் இளவரசன்.
பவித்ரா “பெரியம்மா. மாமாக்கு அக்கா மேல எவ்வளவு பிரியம் இருந்தா, உங்க கிட்டவே தைரியமா பெர்மிஷன் கேட்டிருப்பாரு இல்ல” என்றாள்.
லக்ஷ்மியும் ஆமோதிப்பாக தலையசைத்தார்.
அடுத்த நாள் காலையிலேயே ஜோதி இளவரசனுக்கு போன் செய்தாள்.
“சொல்லுங்க”
“உங்க கிட்ட நேர்ல பேசலாம்ன்னு பார்த்தா பேச முடியலை. அதனால போன்லயே பேசிடலாம்ன்னு தான் போன் பண்ணேன்”
“அதுவும் சரி தான். சொல்லுங்க”
ஜோதி சொல்வதை கேட்க கேட்க இளவரசனுக்கு அதிர்ச்சி. அவள் பேசி முடித்தவுடன் இளவரசன் பேச பேச ஜோதிக்கு அதிர்ச்சி.
தொடரும்
{kunena_discuss:679}