“ம்ம்ம் கூப்பிடு கூப்பிடு” என்று ஆர்வமாக கூறினான் அஸ்வத்.
லேசாக தலையை தட்டி “என்ன எப்பவும் இருக்குறதை விட இப்போ 100 வால்ட்ஸ் அதிகமா முகம் பிரகசிக்குது என்ன விஷயம்???” என்று விஷயத்தை நறுக்கென்று புரிந்துக்கொண்டாள் அஹல்யா.
“அதெல்லாம் secret உனக்கு புரியாது நீ கால் மட்டும் பண்ணு” என்று எப்போதும் போல் ஒரு புரியாத சிரிப்பினை உதிர்த்து மிடுக்காக பதில் அளித்தான் அஸ்வத்.
கிண்டல் சிரிப்போடு அனுவை அழைத்தாள். அவள் அழைக்க அழைக்க அனு அழைப்பை துண்டித்துக்கொண்டிருந்தாள். “ஹே என்னடா இவள் பண்ண பண்ண கட் பண்ணுறா?” என்று பொறுமை இழந்து அஹல்யா கூற, அஸ்வத் வக்காலத்திர்க்கு வந்தான். “ஏதாவது வேலையா இருக்கும் அதுக்கு போய் ஏன் டென்ஷன் ஆகுற??”
“ம்ம்ம்ம் நீ இப்பவே நல்லா ஜால்ரா அடிக்குறடா” என்று கிண்டல் செய்து கொண்டிருந்தவள் அப்போதுதான் அர்ஜுன் அங்கில்லாததை உணர்ந்தாள். “இவர் எங்க சொல்லாம கொல்லாம போனார்?” என்று தேடியவள் நுழைவாயிலை ஒட்டிய அறையில் மீண்டும் அஸ்வத்தோடு அமர்ந்துக்கொண்டு பேசிக்கொண்டே அர்ஜுனுடைய கைபேசிக்கு அழைத்தாள். அது வீட்டிலேயே அலற, “இதை எடுத்துட்டு போகணும்னு கூட அவருக்கு நினைப்பில்லை பாரேன்” என்று பேச்சை தொடர்ந்தாள்.
“நீ ஏன் அக்கா ஃபீல் பண்ணுற ஒருவேளை மாமா அவரோட சைட்டை பார்க்க போயிருப்பார் நீ அடிக்கடி போன் பண்ணுவனுதான் வச்சிட்டுபோயிடாறு போல” என்று கிண்டல் செய்தான். அதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அஹல்யா நறுக்கென அஸ்வத்தின் மண்டையில் ஒரு குட்டுவைக்க, “அம்மா வலிக்குதுடி பிசாசு” என்று கத்திக்கொண்டே தலையை தடவினான்.
“இப்பதான் புரியுது பாவம் ஏன் மாமா பேசவே மாட்டிங்குராருனு” என்று அப்போதும் கிண்டல் செய்தான் அவன்.
அவன் பேசியதை பொருட்படுத்தாமல் கடைசியாக அனுவின் எண்ணுக்கு அழைத்தாள் இம்முறை அழைப்பை எடுத்தவள் “என்ன அண்ணி? எப்படி இருக்கீங்க?” என்று குசலம் விசாரிக்க அவள் இருந்த கோவத்திற்கு “அதெல்லாம் இருக்கட்டும் நாங்க படத்துக்கு போக பிளான் போட்டுருக்கோம் நீ சீக்ரம் ரெடி ஆகு உங்க அண்ணாவை கூட்டிட்டு வர சொல்லுறேன்” என்றாள்.
“எங்க அண்ணாவை பத்தி என்ன நினைச்சிங்க அதெல்லாம் அவர் எப்பவோ என்னை கூட்டிட்டு வந்திட்டார்” என்று surprise ஆக அவள் முன்னே போய் நின்றாள். அஹல்யா ஆச்சர்யபட்டு “ஹே... இதுக்குதான் உங்க அண்ணா போன இங்கயே வச்சிட்டு போயிட்டாரா!!!” என்று உற்சாகமாக எழுந்து அவள் அருகில் வர, “அனு எப்புடி....” என்று கூறி இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டாள். பேசிக்கொண்டே திரும்பியவள் அஸ்வத் அங்கே அமர்ந்திருப்பதை கண்டதும் தான் இவனை எப்படி கவனிக்க மறந்தோம் என்று தோன்றியது.. அவனை அங்கு கண்டதும் சந்தோஷத்தில் மனம் துள்ளிக்குதிக்க, மறுபுறம் இன்றும் இவன் பார்வையில் தடுமாற தயாராகிக்கொண்டிருந்தாள். அவளது ஒரு நிமிட மௌனத்திற்கு அர்த்தம் புரிந்துவிட, “அஸ்வத்..... கொஞ்சம் கண்ண மூடிகோயேன்டா....” என்று அனுவை பார்த்துக்கொண்டே கூற, எப்போதும் போல் வசீகர சிரிப்போடு குனிந்துக்கொண்டான் அஸ்வத். அங்கே மனநிலை ரம்யமாக மாற, அறையை விட்டு வெளியே வந்தனர். அதே நேரம் கையில் அனைவருக்கும் காபியுடன் வெளியே வந்தான் அர்ஜுன்.
சொல்லாமலே செய்யும் தன் கணவனை கண்ணாலேயே கொஞ்சியவள் அவன் கன்னத்தை கில்லி “சுவீட் புருஷா...” என்று கொஞ்சினாள்... அதை பார்த்து சிரித்த அனு.. “ம்ம்ம் க்கும் நாங்களும் இங்க தான் இருக்கோம்...” என்று கிண்டல் செய்தாள். அதன்பின் நேரம் விரைந்திட, சென்னை வாசிகள் போல் வெளியே உணவை முடித்துக்கொண்டு படத்திற்கு கிளம்பிவிட்டனர்.
ஊரிலேயே பெயர்பெற்ற மாலில் சுத்திக்கொண்டிருந்தனர். அர்ஜுனும் அஸ்வத்தும் பெண்களுக்கு பின்னே பேசிக்கொண்டே வந்தனர். அனுவும் அஹல்யாவும் கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு (window ஷாப்பிங் செய்தனர்). டிக்கெட் வாங்கிக்கொண்டு அஸ்வத் முன்னே செல்ல, அர்ஜுன் பின்னடைதான், அதை கண்டுகொள்ளாமல் அனுவும் அஹல்யாவோடு வர, இவ்வளவு நேரம் தள்ளியே வந்தவள் இப்போது தன்னோடு ஒட்டிக்கொண்டு நிற்பதை பார்த்ததும் சிரிப்பாக இருந்தது அஹல்யாவிற்கு... நான்கு இருக்கைகளில் இரு கடைசிகளில் ஆண்கள் உட்காந்துக்கொள்ள திருதிருவென முழித்தாள் அனு, இப்போது அர்ஜுனுக்கு அருகேவும் உட்கார முடியாது அஸ்வத் அருகே அமருவதை தான் தவிர்த்தது அதுவும் போச்சே என்று தோன்றிவிட அர்ஜுனை கெஞ்சுதலாக பார்த்தால்... அர்ஜுன் இவள் முகத்தை பார்த்தால்தானே வேண்டும் என்றே முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டது போலவே தோன்றியது அனுவுக்கு. அஹல்யாவும் சிரித்துக்கொண்டு அவன் அருகில் சென்று அமர்ந்துகொள்ள, அஸ்வத்தோ அங்கு என்ன நடக்கிறதென்றே தெரியாதவன்போல் அமர்ந்திருந்தான்.
அனு அருகில் அமரவும் “ஹே வாவ் என்ன ஒரு coincidence” என்று கிண்டலாக சிரித்தான் அஸ்வத். “ஓஹோ உனக்கு ஒண்ணுமே தெரியாதில்லை.....” என்று அவள் கிண்டலாக கேட்கவும்... “நோ நோ நான் ரொம்ப innocent பா” என்று பாவமாக முகத்தை வைத்துகொண்டு கூறவும் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. மெலிதாக சிரித்தபடி படத்தை பார்க்க திரும்பிக்கொண்டான்.
அந்த மெல்லிய ஒளியில் அவள் இதழ்கள் விரிந்திருப்பதை சில நொடிகள் பார்த்தவன் எதுவும் கூறாமல் ஒரு பெருமூச்சோடு திரும்பிக்கொண்டான். படம் துவங்கிவிட, டிக்கெட் வாங்கும் பொழுது பெரிதாக பேசிவிட்டு பேய் படத்திற்கு வந்திருப்பதை இப்போது நினைத்து கடுப்பாக இருந்தது அனுவிற்கு. அஹல்யாவிற்கு பிரச்சினையே இல்லை இப்போதே அவள் அர்ஜுனின் கைகளை இறுக பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டாள். தன் நிலையை நினைத்து தானே நொந்துக்கொண்டு காதையும் கண்ணையும் மாற்றி மாற்றி மூடிக்கொண்டு படத்தை நகர்த்தினாள்.
முன் பாதியே பயத்தை கொடுக்க பின் பாதி நெஞ்சை நடுங்க செய்யும் அளவிற்கு இருந்தது. பொருத்து பொருத்து பார்த்தவள் அடுத்து சீனில் அஸ்வத்தின் தோளில் முகத்தை மறைத்துக்கொண்டாள்.. சிறிது நேரத்திலேயே சட்டை ஈரமாவதை உணர்ந்தவன் அவளது கைகளை இறுக பற்றிக்கொள்ள, அவள் எவ்வளவு பயந்து போயிருக்கிறாள் என்று அவள் கைகள் சில்லிட்டு போயிருப்பதிலேயே புரிந்தது. அவள் தன் மீது சாய்ந்திருப்பதை நினைத்து மகிழ்வதா இல்லை இப்படி பயந்து நடுங்குரவளை தேற்றுவதா என்று புரியாத நிலையில் அவன் இருக்க.... தன் மயக்கத்தை தவிர்த்து அவளது கையை தட்டிகுடுத்து தேற்றினான்.ஒருவழியாக படம் முடிய, மெதுவாக அவளை அழைத்தான்.
“அனு படம் முடிஞ்சுருச்சுடா” என்று மெதுவாக கூறினான்.
விழி உயர்த்தி பார்த்து நகர்ந்து அமர்ந்தவளின் கண்கள் அழுததின் தடயம் தெரிய சிறுபிள்ளை போல் இருந்தாள் அவள்.
மெலிதாக சிரித்தவன், “பெருசா பேசின இப்போ இவ்வளவு பயந்திருக்க??” என்று அவன் கிண்டல் செய்தான்.
“நான் எங்க பயந்தேன் கண்ணு வேர்த்துருச்சு சரி ஃப்ரீயா kerchief கிடைக்குதேன்னு உன் சட்டையில துடச்சுகிட்டேன் அவ்வளவு தான்.”
“அடேங்கப்பா இப்படி சமாளிக்குரதில ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று வழக்கமான பேச்சு தோரணையில் எழுந்து வந்தனர். அஹல்யாவின் கை இன்னும் அர்ஜுனின் கையோடு இணைந்திருக்க அஸ்வத் கிண்டல் செய்தான். “அக்கா போதும்கா படமே முடிஞ்சிருச்சு இன்னும் பயப்புடுரியா?”
“அட போடா நான் எங்க பயந்தேன் இவர்தான் பயத்துல இன்னும் என் கையை விடாமல் புடிச்சிட்டு இருக்காரு” என்று அர்ஜுனை கிண்டல் செய்தாள் அஹல்யா...
அஸ்வத் சத்தமாக சிரித்துவிட்டு “மாமா நான் உங்களை என்னவோனு நினைச்சேன் இப்படி பயந்தாங்குலியா இருக்கீங்களே” என்று சிரித்துக்கொண்டிருந்தான்.
ஹே போதும் போதும் ரொம்ப ஓட்டாத அங்க மட்டும் என்னவாம்? என்று பதிலுக்கு அவள் அனுவை கைகாட்டி கேட்டாள். அவளது கேள்விக்கு பதில் தர முடியாமல் போக பேச்சை வேறு திசை மாற்றிவிட்டான் அஸ்வத்.
அரட்டை அடித்ததில் நேரம் வேகமாக சென்றுவிட, மாலை மயங்கும் நேரம் வீடு திரும்பி இருந்தனர். இரவு உணவை வீட்டிலேயே தயார் செய்தாள் அஹல்யா. அனு முதல் முறையாக அவள் சமையலை ருசிபார்த்து பாராட்ட ஆரம்பித்தவள் நிறுத்தவே மறந்து போனாள். உணவு முடிந்து அஹல்யாவிற்கும் அர்ஜுனுக்கும் தனிமை கொடுத்து வெளியில் சிட்டௌட் வந்தமர்ந்துகொண்டாள் அனு...