அவள் சொன்னதை செய்யாது போனதும் இல்லாமல், அவள் சொன்ன விளக்கம் சுபஸ்ரீக்கு கோபத்தையே வர வைத்தது. பக்கத்தில் மலர் கோபத்துடன் ஏதோ சொல்ல வந்தது அவள் கவனத்தில் படிந்தது.
அவளும் கோபமாக ஏதோ சொல்ல வர, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஜமுனா, வேறு எதையோ சொல்லி அழைத்து சென்று விட்டாள்.
பின்பு கிளம்பும் போது, மலர் சுபஸ்ரீயின் பக்கத்தில் இருந்த கீர்த்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பினாள்.
கீர்த்தியும் சிறிது நிறம் குறைவு தான். அதை தான் அவள் அப்படி பார்த்து விட்டு செல்கிறாள் என்று அவளுக்கு கோபம் அடக்க இயலாமல் வந்தது.
மனதில் பொறுமிக் கொண்டாள் ‘நேரம் வராமலா போய் விடும். இவள் தம்பியிடம் தானே வேலை செய்கிறாள். பார்த்துக் கொள்கிறேன்’
அந்த வாரம் முழுவதுமே தேன்மொழியின் மனது சரியில்லை. அடுத்த திங்கள் நிலாவின் முதல் பிறந்த நாள். அன்று அவளுடன் இருக்க முடியாதோ என்று அவளின் மனதில் கவலை அரித்துக் கொண்டே இருந்தது.
எப்படி என்ன சொல்லி விட்டு செல்வது, எப்படியும் அப்பா சென்னை என்றாலே அனுப்ப போவதில்லை என்று மட்டும் தெளிவாக தெரிந்தது.
அந்த வார வெள்ளி, சனி இரு நாட்களுமே இன்ஸ்டியூட் லீவ் சொல்லியிருந்தார்கள்.
அவ்வப்போது சில இலவச பயிற்சி மையங்களுக்கு சென்று இவர்கள் கெஸ்ட் லெக்சர் கொடுப்பார்களாம். அது போல இந்த வெள்ளி, சனி, ஞாயிறு பெங்களுர் செல்கிறார்களாம். அதற்காக இவளையும் வர முடியுமா என்று கேட்டிருந்தார்கள். இவள் இப்போது சூழ்நிலை சரியில்லை என்று எண்ணி, நான் அடுத்த முறையில இருந்து வறேன் சார். இந்த முறை வரலை என்று சொல்லிவிட்டிருந்தாள். அதனால் இவளுக்கு விடுமுறை.
திடீரென்று வியாழக் கிழமை வந்து, யாரோ வரேன் என்று சொன்னவர்கள் வரவில்லையாம். இவளை வர முடியுமா என்று கேட்டார்கள். தேன்மொழிக்கு வீட்டில் என்ன சொல்வார்களோ என்று இருந்தாலும், அவள் மனதும் சரியில்லாததால் அவ்வளவாக விருப்பம் இல்லை.
ஆனால் பேச்சுவாக்கில் தான் அவர்கள் இரண்டு குரூப்பாக ஒரு குரூப் பெங்களுருக்கும், இன்னொரு குரூப் சென்னைக்கும் செல்வது தெரிந்தது. எனவே, அடுத்த நிமிடம் யோசிக்காமல் ஓகே என்று சொல்லி விட்டாள்.
தெளிவாக சென்னைக்கு என்றால் வருகிறேன் என்று சொல்லி விட்டாள்.
அவள் வருகிறாள் என்று தெரிந்தவுடனே ஸ்ரீராமிற்கு ஒரே உற்சாகம் தான். தான் பெங்களுருக்கு செல்வதாக இருந்ததை உடனே சென்னைக்கு செல்ல இருந்த ஆளை பெங்களுருக்கு மாற்றி விட்டு தான் சென்னைக்கு செல்ல முடிவெடுத்து விட்டான்.
ஜமுனா, கௌதம், சுந்தர், பிரகாஷ், இன்னும் சிலர் எல்லாம் பெங்களுருக்கு செல்ல, ஸ்ரீராம், தேன்மொழி, தௌலத், பிரதாப், இன்னும் இரு பெண்கள் என்று சென்னைக்கு சென்றார்கள்.
தேன்மொழி ஏதேதோ சொல்லி வீட்டில் பெர்மிஷன் வாங்கி இருந்தாள். அதுவும் தான் பெங்களுருக்கு செல்வதாக சொல்லி.
ஸ்ரீராம் காரிலேயே சென்றனர்.
தேன்மொழி காரில் ஏறிய நொடியிலிருந்து ஸ்ரீராமிற்கு ஏனோ மிதமிஞ்சிய உற்சாகம் தான்.
அன்று ஒரு முறை கிருஷ்ணாவிற்காக அவள் வந்து பேசியது தான். அதன் பின்பு அவ்வளவாக இருவரும் தனிமையில் பேசிக் கொள்ளவில்லை. இந்த சென்னை பயணத்தில் ஒரு மாற்றம் நிகழும் என்று அவனுக்குத் தோன்றியது.
இன்னும் கொஞ்சம் அவள் பேசினால் போதும் என்று எண்ணிக் கொண்டான்.
தௌலத்துடன் அவர் மகள் பர்கத்தையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.
தேன்மொழி அவளுடன் பேசியவாறே வந்துக் கொண்டிருந்தாள்.
ட்ரைவ் செய்து கொண்டிருந்த ஸ்ரீராமின் கண்கள் அவ்வப்போது கண்ணாடியின் வழியே அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
அவன் மனதிலிருந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை எனலாம். முதலில் இப்படி அவளுடன் செல்லும் பயணத்தை நினைத்து கனவுக் கண்டு கொண்டிருந்த வேளையில் அவள் வரவில்லை என்று கூறவும் அவனுக்கு கொஞ்சம் அல்ல நிறையவே கஷ்டமாக தான் இருந்தது.
இப்போது எதிர் பாராத விதமாக அவள் வரவும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.
ஸ்ரீராம் எண்ணியதை போல அங்கு கொஞ்சம் அவளுடன் நெருக்கம் அதிகரித்தது என்னவோ உண்மை தான்.
ஆனால் மனம் முழுக்க சந்தோஷத்துடன் சென்றவன், ரத்தம் சொட்ட சொட்ட தேன்மொழியை பைத்தியக்காரன் போல தன் கையில் தூக்கிக் கொண்டு போகப் போகிறோம் என்று தெரியாமல் சந்தோஷத்துடன் ட்ரைவ் செய்து கொண்டிருந்தான்.
தொடரும்!
This series is on hold temporarily. Will resume sometime in 2015. Thanks for your patience.
{kunena_discuss:727}