" கண்டிப்பா இல்லன்னு நான் சொல்ல மாட்டேன் அண்ணா .. என் நிலையில் இருக்கிற யாரா இருந்தாலும் நிச்சயம் இப்படித்தான் இருப்பாங்க "
" உண்மைதான் காவியா .. ஆனா அதுக்காக கடைசிவரை இப்படிதான் ஜீவனே இல்லாத வாழ்கையை வாழனுமா ?"
" பிடிப்பு இல்லாத இடத்தில் ஜீவன் எப்படி இருக்கும் அண்ணா ? "
" பிடிப்பும் பிணைப்பும் நம்ம மனசுக்கு சம்பந்தபட்டது கண்ணா "
" என் மனசே என்னிடம் இல்லை அண்ணா "
" தெரியும் .. பாதி அப்பாகிட்ட இருக்கு மீதி கதிர் கிட்ட இருக்கு " என்றபடி தான் கண்டுகொண்டதை அவளிடம் கூறியே விட்டான் மதியழகன் .. ஆச்சர்யமாய் பார்க்க வேண்டிய அவளது விழிகளில் சிரிப்புதான் இருந்தது ..
" சக்தியும் மித்ராவும் சொன்னது சரி தான். காற்று கூட மதி அண்ணாவை ஏமாற்ற முடியாது "
" ஆனா , என் நிலா செல்லம் அலேக்கா ஏமாத்திடுவா தெரியுமா ?" என்று சொல்லி சிரித்தான் அவன் .. மெல்ல காவியாவின் முகத்தில் மென்மை படர்ந்தது .. பொறுப்பான , அதே நேரம் தன்மையான குரலில் தனக்கு தோன்றியதை எடுத்து கூறினான் மதியழகன் ..
" வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒரு விஷயம் தான் மரணம் காவியா .. வேறு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கொரு முடிவை கண்டுபிடிச்சு வெளில வந்திடலாம் .. ஆனா மரணத்திற்கு மட்டும் நாம ஒரு முடிவை கொண்டு வர முடியாது "
" ..."
" ஆனா, கடந்த காலத்தை முன்னிறுத்தி நிகழ்காலத்தை ஸ்தம்பிக்க வைக்கிறது இறந்துபோன அந்த ஆத்மாவிற்கு நாம கொடுக்குற வலி ... உனக்கு பேய் மேல நம்பிக்கை இருக்கா கவி ? பேய் படம் பார்பியா ?"
சம்பந்தமே இல்லாமல் ஏன் இப்படி கேட்கிறான் என்று கேள்வியாய் பார்த்தபடி
" ம்ம் பார்ப்பேனே , ஏன் ?" என்றாள் அவள் ..
" ஹ்ம்ம் .... பொதுவா எல்லா பேய் படத்திலும் ஒரு ப்ளாஷ் பேக் இருக்கும் .. அதில் பேய் எல்லாம் மனுஷங்களா இருக்கும் " என்று பெரிதாய் எதையோ சொல்லி முடித்தவன் போல அவன் பீடிகை போட அவளோ அவனை செல்லமாய் முறைத்தாள் ..
" ரிலாக்ஸ் தங்கச்சி .. அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா .... உலகத்துல பேய் இருக்குனு நம்புற நாம் , ஏன் நமக்கு சொந்தமானவங்க இறந்து போகும்போது இனி அவங்க ஆத்மா நம்ம கூடத்தான் இருக்குன்னு நம்ப மறுக்கிறாங்க ? அவங்க இல்லைன்னு ஏன் நினைக்கணும் ? அழிவு என்பது உடலுக்கு தான் , உயிருக்கு இல்லை .. அந்த உயிரை நாம மதிக்கணும் காவியா .. ஒரு நிமிஷம் அப்பா , உன் பக்கத்தில் இருக்கிறதா நினைச்சு பாரேன் ! நீ தனியா இருக்கிறது , இப்படி உனக்கு பிடிச்ச இசையை விட்டுட்டு , பத்து வார்த்தை உதிர்த்தா அதில் ரெண்டு வார்த்தையாவது விரக்தியின் சாயலில் வெளி படுறது இதையெல்லாம் பார்த்து அவர் மனசு உடைஞ்சிர மாட்டாரா ?"
"..."
" நீ இப்படி துவண்டு போகணும்னு நினைச்சுதான் அப்பா உன் கூட இருந்தாரா ? உன் எதிர்காலம் அவருடைய மரணம் என்ற பெயரில் முற்றுபுள்ளியாகிடனும்னு அவர் நினைசுருப்பாரா ?"
"இல்லைதான் "
" அப்பறம் ஏன் அப்படி இருக்க காவியா ? அப்பாவுடைய கனவுகளை நினைவாக்குறது உன் கடமை,. அவர் போயிட்டா அவர் ஆசை பட்ட எல்லாமே மறைஞ்சு போயிடணும்னு இல்லை .. அவர் பொண்ணு மனசார சந்தோஷமா இருக்கணும் .. அதை அவர் தூரத்தில் இருந்து பார்ப்பார்... உனக்குள்ள நீயே போட்டிருக்கும் சிறையை உடைச்சிட்டு வா ..சுதந்திரமா இரு "
"..."
" எப்பவும் சந்தோஷமா இருக்குறதுக்கு நான் ஒரு டிப்ஸ் வைச்சிருக்கேன் " என்று கன்னடித்தவன்
" எது நமக்கு கிடைக்கலையோ , எது நம்மகிட்ட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுதோ அதை நாம மத்தவங்களுக்கு கொடுக்க கத்துக்கணும் .. நீ அப்பாவின் அன்பு இல்லைன்னு நினைச்சா , ஒரு அப்பா மகளுக்கு தர வேண்டிய அன்பை நீ இன்னொருத்தருக்கு கொடு .. அதுவே உனக்கு உண்மையான சந்தோஷத்தை தரும் .. என்னடா அண்ணா , இப்படி பேசுறேன்னு நினைக்காமல் உன் நிலையை யோசிச்சு பார் ... இங்க உனக்குன்னு உறவுகள் இருக்குற இதே நிமிடத்துல உலகத்துல ஏதோ ஒரு இடத்தில் அம்மா அப்பா இல்லாமல் பச்சிளம் குழந்தை அழுதுகிட்டு இருக்கலாம் .. உனக்காவது உன் அப்பாவோடு சில வருடங்கள் வாழ வாய்ப்பு கிடைச்சது ,, எவ்வளவு குழந்தைங்க அப்பா யாருன்னு தெரியாமல் இருக்காங்க .. எத்தனை குழந்தைகள் பிறக்கும்போதே தந்தை இல்லாமல் பிறக்குது ? இதில் சிலர் தந்தை இருந்தும் இல்லாத வாழ்க்கை வாழுறாங்க .. என்னை மாதிரி " என்று வருத்தமாய் கூறினான் அவன் .
"..."
" இதெல்லாம் இரு கோடுகள் தியரி தங்கச்சி .. நம்மளை விட கஷ்டம் படுறவங்க நிறைய பேரு இருக்காங்கன்னு நினைச்சாலே நம்ம பிரச்சனை சின்னதா ஆகிடும் .. புரியுதா ?" என்று தனது தெளிவான உரையை முடித்து அவள் முகத்தை பார்த்தான் மதி ..
அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் அவளது இதய வாசலை தட்டி சென்றன .. தன் தந்தை அருகிலேயே இருப்பது போல உணர்ந்தாள் அவள் .. மதியழகனை பார்த்தாள் அவள் .. ஒருவேளை அவள் தந்தை அவளிடம் சொல்ல வேண்டிய வார்த்தைகள்தான் இவன் மூலமாக தன்னை அடைந்ததோ ? அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது ..
கண்களை இறுக மூடி " அ ....ப் ....பா " என்று மிக பொறுமையாய் உணர்ந்து அழைத்தாள் அவள் ... சரியாய் அந்த நேரம் சுகந்தமான தென்றல் அவளது கூந்தலை வருடி சென்றது .. அவள் தந்தையே அவளது தலையை செல்லமாய் வருடியது போல உணர்ந்தாள் காவியதர்ஷினி .. முதல் முறையாய் தந்தையை பற்றி சிறிதும் கண்ணீர் விடாமல் புன்னகையுடன் நினைத்து பார்த்தாள் அவள் ..
" தேங்க்ஸ் அண்ணா ..எல்லாத்துக்கும் தேங்க்ஸ் " என்றாள் அவள் ஆத்மார்த்தமாய்...
" அண்ணான்னு சொல்லிட்டு அப்பறம் எதுக்குடா தேங்க்ஸ் ?" என்று செல்லமாய் கடிந்தவன் அவள் தலையில் ஆதரவாய் கரங்கள் வைத்து அழுத்தவும் மிகவும் பாதுகாப்பாய் உணர்ந்தாள் காவியா .. அதன்பிறகு அண்ணனும் தங்கையுமாய் சேர்ந்தே சாப்பிட வரவும் அனைவரும் கொஞ்சம் ஆச்சர்யமாய் தான் அவர்களை பார்த்தனர் .. நிலா மட்டும் " கள்ளன், எல்லாரையும் மயக்கிடுறான் "என்று கூறிக்கொண்டு அவனை பார்வையினாலேயே மயக்கினாள் ...
பிறகு அதன்பிறகு அனைவரும் ஆட்டம் பாட்டமென , நேரத்தை கழிக்க மித்ரா மட்டும் ஷக்தியின் நினைவுகளிலே தத்தளித்தாள். எத்தனை இயல்பாய் இருந்தாலும் கூட அவளது நினைவுகள் அவனையே சுற்றி வந்தது .. இது அவளது இயல்பான குணம்தான் .. இந்த நான்கு வருடங்களில் அவன் விடுமுறைக்கு வந்துவிட்டு போகும்போதெல்லாம் அடுத்து சில தினங்கள் ஜீவனே இல்லாமல் உலா வருவாள் அவள்.. அதுவும் இந்தமுறை தங்களது திருமணம் நடந்துவிட்ட களிப்பில் இருந்தவள் அவன் திரும்பி செல்கிறேன் என்றவுடன் பதறித்தான் போனாள் .. எனினும் அதை அவனிடம் கூறி தடுக்க விரும்பவில்லை .. ஏதேனும் காரணம் கூறி அவனை இங்கு வர வைத்து விடலாம் என்று தான் நினைத்திருந்தாள் .. ஆனால் இது சாத்தியாமா ? ஒருவேளை அவன் முடியாது என்று கூறிவிட்டால் , இவளால் வற்புறுத்த முடியுமா ?
என்றோ ஒரு நாள் பார்த்த திரைப்படத்தின் வசனம் தான் அவளுக்கு நியாபகம் வந்தது ..