01. நேசம் நிறம் மாறுமா - தேவி
தூண்டிற் புழுவினைப்போல் -- வெளியே
சுடர் விளக்கினைப்போல்,
நீண்ட பொழுதாக -- எனது
நெஞ்சந் துடித்த தடீ.
கூண்டுக் கிளியினைப்போல் -- தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளையெல்லாம் -- மனது
வெறுத்து விட்டதடீ.
- பாரதியார்
அதிகாலை 5.00 மணி. எப்போதும் போல் இன்றும் அலாரம் அடிக்கும் முன் கண் விழித்தாள் வெண்மதி. கட்டிலில் படுத்திருக்கும் தன் கணவன் ஆதித்யாவின் முகம் பார்த்து விட்டு எழுந்தாள். கண்கள் தூக்கத்திற்கு கெஞ்சினாலும் பொருட்படுத்தாமல் பாத்ரூமிற்குச் சென்றாள். இத்தனைக்கும் அன்று ஞாயிறு தான்.
ஒருமுறை அலாரம் அடித்தும் எழாமல் தாமதமாக எழுந்ததால் படுக்கையில் இருக்கும் மாமனாரை கவனிக்க லேட்டாகிவிட அன்று அவருக்கு வயிற்றுச் சங்கடம் ஏற்பட்டு படுக்கையிலேயே கழித்து விட, அவரின் சங்கடம் அவளை வாட்டியது. அன்றிலிருந்து அவள் அலாரம் அடிக்கும் முன் எழுந்து விடுவாள்.
குளித்து விட்டு கிச்சனிற்கு சென்று டிகாஷன் போட்டு விட்டு வாசல் தெளித்து கோலமிட்டாள். பிறகு காலை உணவிற்குத் தேவையானவற்றை செய்ய ஆரம்பித்தாள். ஆறு மணிக்கு எழுந்து வந்த மாமியார்க்கு காபி கொடுத்து விட்டு, இரவு ஒழித்த பாத்திரங்களை தேய்கக்ப் போட்டாள்.
மாமனாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், அவருக்கு பிஸயோதெரபி, மசாஜ் செய்யும் நேரங்களில் அவள் உதவிக்கு இருப்பதால் வேலைகளில் தேக்கம் ஏற்பட்டது. அவள் கணவன் அப்பாவின் தேவைகளை வெண்மதி பார்க்கட்டும் என்று கூறிவிட்டு மற்ற வேலைகளில் ஒத்தாசை செய்ய ஆளை நியமித்தான். மாமியாரும் சற்று உடல் நலம் சரியில்லாதவரே. அதனால் அந்த வீட்டுப் பொறுப்பு அனைத்தும் வெண்மதியே பார்;த்தாள்.
மணி ஏழு ஆனது. ஒவ்வொருவராக எழுந்து வர ஆரம்பித்தனர். எல்லோருக்கும் காபியைக் கொடுத்து விட்டு, மாமனாரிடம் சென்று அவருக்கும் காபி கொடுத்தாள். அவருக்கு உதவி செய்ய ஒரு ஆண் நர்ஸ் இருந்தாலும் உணவு கொடுப்பது போன்ற வேலைகளை வெண்மதியே செய்தாள்.
எட்டு மணி அடித்தவுடன் ஆதித்யாவிற்கு காபி எடுத்துச் சென்றாள். முதலில் எல்லாம் எதுவும் இவள் கையால் வாங்க மாட்டான். இப்போது ஒன்றும் சொல்வதில்லை. அவனிடம் காபியோடு பேப்பரை கொடுத்துவிட்டு படுக்கையை ஒதுங்க வைத்தாள். ஆதித்யா ஞாயிறன்று டென்னிஸ் கிளப்பிற்கு செல்வான் என்பதால் அவனுடைய ஸ்போர்ட்ஸ் டிரஸ். எல்லாம் எடுத்து வைத்துவிட்டுக் கீழே சென்றாள்.
ஞாயிறு காலை டிபனாக பூரி, பொங்கல் வடை செய்து விட்டு குருமா, சட்னி சாம்பார் எல்லாம் செய்தாள். இதுவரை அவள் காபி கூட அருந்தவில்லை. வேலைக்காரி வரவே அவளிடம் எல்லாம் ஒழித்து விட்டு, அவளுக்கும் தனக்குமாக காபியைக் கலந்தாள். வேலைக்காரியிடம் காபியை கொடுத்துவிட்டுத் தானும் பருகினாள்.
ஒன்பது மணிக்கு அனைவரும் டிபன் சாப்பிட வரவே அனைவருக்கும் பரிமாறினாள். பத்து மணிக்கு ஆதித்யா வந்தவுடன் அவனுக்கும் பரிமாறிவிட்டு அவன் சாப்பிட்டு எழுந்ததும் மீந்தததை வேலைக்காரிக்கு கொடுத்தாள். மதிய சமையல் வேலைகளைப் பார்த்தாள். ஞாயிறு ஆதலால் வழக்கத்தை விட இரண்டு வகைகள் அதிகமாக சமைத்தாள். அந்த இரண்டும் ஆதித்யாவிற்கு பிடித்ததே. அன்றைய பொழுது அவ்வாறு வெண்மதிக்கு போனது.
காலையில் ஆதித்யா எப்போதும் போல் எழுந்தவன் வெண்மதி காபி எடுத்து வரவும், எப்படி அவளுக்குத் தன் நேரங்கள் தெரிகிறது என்று ஆச்சரியப்பட்டான். இத்தனைக்கும் அவன் அவளிடம் ஒரு வார்த்தை பேசுவது கிடையாது.
வழக்கம்போல் டென்னிஸ் போய்விட்டு வந்து குளிக்கப் போனால், டவல், ஷாம்பூ எல்லாம் தயாராக இருந்தது. குளித்து விட்டு வந்தால் டிபனோடு தக்காளிச் சட்னியைப் பார்த்தான். அதே போல் மதிய சாப்பாட்டிலும் அவனுக்குப் பிடித்ததே. ஆனால் அவளிடம் அவன் எதுவும் சொல்வது கிடையாது. அவள் சாப்பிட்டாளா என்று கூட கேட்பது கிடையாது.
வீட்டிலும் எல்லோரிடமும் அதிகம் பேசுவதில்லை. தன் வேலையைப் பார்த்தபடி இருப்பான். மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்கம் தூங்கி எழுந்து வேலைகளைப் பார்த்தான். இரவு அவன் வெளியே போய் விட்டு அங்கேயே சாப்பிட்டு வந்தான். வந்தவுடன் அவனுக்குப் பாலைக் கொடுத்து விட்டுப் போனாள்.
இது எல்லாமே ஒரு இயந்திரத் தன்மையோடு நடந்தது. இரவு வரை இப்படியே போனது. இரவு படுத்த பொழுது இருவருமே உறங்கவில்லை. வெண்மதி அவ்வளவு அலுப்பிலும் உறங்க வில்லை. எத்தனையோ உறங்கா இரவுகளில் இதுவும் இருவருக்கும் ஒன்றானது.
ஆதித்யா வயது 29. அவன் M.B.A Finance முடித்து விட்டு அவர்கள் குடும்பத் தொழிலான கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை நடத்தி வருவதோடு அவனது தனி முயற்சியில் பங்கு வர்த்தக நிறுவனம் ஒன்றும் நடத்தி வருகிறான். ஐந்து வருடங்களுக்கு முன்பாக தொழிலில் நுழைந்தவன் வெகுவாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறன். இன்றைக்கு அவர்களின் வளர்ச்சிக்கு அவனின் திறமையே காரணம். அவன் அப்பா ராகவன், அம்மா ஜானகி. ஒரு தம்பி சூர்யா. வயது 26. தங்கை அதிதி வயது 23. சூர்யாவும் B.Arch முடித்து விட்டு அண்ணனோடு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் பொறுப்பேற்றுள்ளான். அவனுக்குத் தனியாக பர்னிச்சர் ஷோரூம் ஒன்று ஏற்படுத்திக் கொடுத்தான் ஆதித்யா. அதே போல் தங்கை அதிதியும் B.A Fine arts முடித்து விட்டு தனியாக இன்டிரீயர் டெக்கரேஷன் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறாள். அவள் இவர்கள் கம்பெனிக்கும் தனியாகவும் வேலை செய்கிறாள். இவர்கள் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் தனி வீட்டில் வசித்து வருகின்றனர்
வெண்மதி வயது 26. அவள் M.Com முடித்திருக்கிறாள். அவள் அப்பா சுந்தரம். அம்மா மீனாட்சி. இவர்கள் பெயர் பொருத்தத்தை வியக்காதவர்கள் கிடையாது. ஒரு தனியார் கம்பெனியில் ஜெனரல் மேனேஜர். அம்மா ஹவுஸ் வொய்ப். தங்கை வான்மதி B.E Civil Engg. முடித்து விட்டு வேலை பார்த்து வருகிறாள். இவர்கள் திருச்சியில் வசித்து வருகிறார்கள். வெண்மதிக்கும் ஆதித்யாவிற்கும் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது.
மறுநாள் சாதாரணமாக ஆரம்பித்தது ஒரு திங்கள் கிழமை. அன்றைக்கு காலையில் இருந்து ஏனோ வெண்மதிக்கு சற்று படப்படப்பாக இருந்தது. அவள் உள்ளுணர்வு ஏதோ நடக்கப் போகிறது என்று பயந்தாள். மதியம் ஒரு மணிவாக்கில் டிரைவர் வந்து ஆதித்யாவிற்கும் சூர்யாவிற்கும் சாப்பாடு வாங்கிப் போவான். அதிதி ஒன்றரை மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு மூன்று மணிக்குத் திரும்பப் போவாள். காலையிலேயே இன்று அவர்கள் கம்பெனிக்குப் போவதால் அவளுக்கும் சேர்த்துக் கொடுத்துவிடும்படி கூறியிருந்தாள். ஆனால் அன்று மணி இரண்டு ஆகியும் டிரைவர் வரவில்லை. என்ன செய்வது என்று தவித்தவள், முதலில் வீட்டு லைனிலிருந்து டிரைவர் செல் அடித்தாள் எடுக்கவில்லை. மூன்று பேர் எண்ணுக்கும் முயற்சித்து தோல்வியைத் தழுவியவள், தன் மொபைலை எடுத்து டிரைவருக்கு அடித்தாள்.
புது நம்பராக இருக்கவே எடுத்த டிரைவர் பேசியவர்; சொல்லியது ஆதித்யா சைட்டில் இருந்து கிளம்பும் போது வேகமாக வந்த லாரி கன்ட்ரோல் இல்லாமல், ரிவர்ஸ் செய்த காரை கவனிக்காமல் இடித்து விட, கடைசி நிமிடத்தில் கவனித்து கதவைத் திறந்து குதித்து விட்டான். ஆனாலும் அங்கே அடுக்கி வைத்திருந்த சிமெண்ட் மூட்டைகள் சரிந்து விழ அவன் கையிலும், காலிலும் அடிபட்டு விட்டது. நல்ல வேளை அனைத்தும் சைட்டிற்கு அருகிலேயே நடந்தது. உடனே சைட்டில் உள்ளவர்கள் சூர்யாவிற்கு போன் செய்ய, அவன் ஆம்புலன்ஸை சைட்டுக்கும், அதிதியை ஹாஸ்பிடலுக்கும் அனுப்பி விட்டு அவனும் சைட்டுக்குச் சென்றான். சூர்யா வீட்டில் யாருக்கும் தகவல் சொல்ல வேண்டாம் என்று கூறவே யாரும் வீட்டு நம்பரை எடுக்க வில்லை. இதையெல்லாம் டிரைவர் கூறினார்.