14. எப்படி சொல்வேன் வெண்ணிலவே? - அன்னா ஸ்வீட்டி
சரனத்தான் அழைத்தது எதற்காக? என்ன விஷயமாக இருக்கும்? மோசமான விஷயமாக இருந்தால் இப்படி புல்டப் கொடுக்கும் குணம் அத்தானுக்கு கிடையாது. விஷயத்தையும் அதனோடே சேர்த்து அடுத்து செய்ய வேண்டியது என்னவென்றும் சேர்த்தே சொல்லி மனதை அடுத்து என்ன என்பதின் பக்கம் திருப்பிவிடுவதுதான் அவங்க ஸ்டைல். அப்டின்னா இது என்னதா இருக்கும்?
மீண்டுமாய் ரேயாவின் கண்கள் ஆதிக்கின் வாகனத்தின் பின்புறத்தில் பதிகின்றன. ஒருவேளை ஆதிக்கைப் பற்றியாக இருக்குமோ? குப் என்கிறது உள்ளுக்குள். இவளது இந்த முடிந்து போன காதல் கதையை பற்றி தெரிய நேர்ந்தால் சரனத்தான் ரியாக்க்ஷன் என்னதாய் இருக்கும்? சரித்ரனின் காதல் கதையைக் கேட்டு இவள் ரியாக்ட் செய்த விதம் ஞாபகம் வருகிறது.
அன்று ஆதிக் குடும்பம் பெண்பார்க்க வந்த நாள் மாலை. ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க அந்த தகவலை அவரது தம்பிகளுக்கு தெரிய படுத்தியது ரேயாவின் தாய் மாமாக்கள் போலும். விஷயம் கேள்விப்பட்டதும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்திருந்தார் ஆல்வின் சித்தப்பா, அவரோடு சரித்ரனும்தான். மருத்துவமனை வரும் வரை சித்தப்பாவுக்கும் சரித்ரனுக்கும் இந்த பெண்பார்க்கும் படலம் அதோடு நடந்த ஷாலு பாம் வெடி காண்டம் எதுவும் தெரியாது. ஆனால் அங்கு வந்து சேரவும் தனிமையில் ரேயாவின் மாமா நடந்த விஷயத்தை ஆல்வின் சித்தப்பாவுக்கு சொல்ல, சித்தப்பா சரித்ரனிடம் வந்து பேசினார். அது மருத்துவமனை வளாகம். பேசுவது பிறர் காதில் விழுந்து வைக்க வேண்டாம் என இருவரும் ஹிந்தியில் பேசிக் கொண்டனர்.
“அண்ணா ஏன் வேற மாப்ள பார்த்தார்னு புரியலை….எதுலயும் ஈசியா வாக்கு குடுக்க மாட்டான் அவன், ஆனா குடுத்த வாக்க கண்டிப்பா காப்பாத்துவான்…சின்ன விஷயமோ பெரிய விஷயமோ எல்லாத்துலயும் அவன் அப்டித்தான்….அப்டிங்கிறப்ப இத என்னால புரிஞ்ஜுக்க முடியலை…..எதாவது பிடிக்காமபோய் மனச மாத்திருந்தாம்னா கூட நிச்சயமா உன் வீட்டுக்கு சொல்ல சொல்லி என்ட்ட சொல்லிருப்பான்….பட் இது ஏன்னு புரியலை….ஆனா பெரியவ ஒரு சாது, அவ இப்டி பேசனும்னா உங்களுக்குள்ள கண்டிப்பா ஏதோ சரி இல்லைனு தெரியுது….” சித்தப்பா சரித்ரனிடம் விளக்கம் எதிர்பார்க்கிறார்.
அவருக்கு மனசெல்லாம் வலி. அண்ணா மாதிரி கல்யாணம் வரைக்கும் பையனையும் பொண்ணையும் பிரிச்சு வச்சிருந்தா இப்டி சண்டையும் சிக்கலும் இத்தன பெரிய வலியும் வந்திருக்காதுதானே……கல்யாணத்துக்குள்ள இருக்கிற புரிஞ்சுக்கிற சக்தியும், ஒத்துப் போக நினைக்கிற வேகமும் கல்யாணமில்லாத காதலுக்கு நிச்சயமா இல்ல…..இப்போ இவர் பிள்ளைகள பழக அனுமதிச்சு…..அதுவே கடைசில அண்ணன் உயிருக்கு உலையா போய்ட்டோ? அண்ணனுக்கு எதாவது ஆகிருச்சுன்னா?
விஷயம் புரியவும் சரனுமே ஆடித்தான் போனான். இவனோட ஒரு சின்ன அவசரம்….சிறு வரம்பு மீறல் கடைசியில் எங்கு கொண்டு வந்து விட்டிறுக்கிறது? அதோடு எப்படி ஒரு சூழலை ஷாலு தனியாக எதிர் கொள்ள வேண்டியதாகி இருக்கிறது? சும்மாவே அப்பாட்ட பேச பயப்படுறவ……இவனோடு சுமுக நிலை இருந்திருந்தால் உடனடியாக இவனை தொடர்பு கொண்டிருப்பாள் தானே….அடுத்து எதுவாயினும் இவன் சமாளித்திருப்பானே….. இப்படி இன்னொரு குடும்பம் பெண் கேட்டு வீடு வரை வரவிட்டிருக்க மாட்டானே….பாவம் ஷாலு ஏற்கனவே இவனைப் பத்தி ஒரு மார்க்கமா புரிஞ்சு உடஞ்சுபோய் இருப்பா….அதுல இது வேறயா….அதோட சுத்தி இருக்ற எல்லோரும் அவளத்தான் குறை சொல்வாங்க….எப்டி இருக்காளோ இப்ப….மருத்துவமனையிலும் அவளைக் காணவில்லையே….
ஷாலு தற்கொலை முயற்சி மருத்துவமனை வந்துவிட்ட யாருக்கும் தெரியாதாகையால் அது இன்னும் சரித்ரனை அடைந்திருக்கவில்லை. அதற்குள்ளாகவே அவன் வெந்து போனான்.ஏற்கனவே நொடி நொடியாய் அவளிற்காய் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு இது வன்கொடுமை. அவளைத் தேடிச் சென்று இப்பொழுதே பார்க்க வேண்டும் என்று இருக்கிறது….ஆனால் அவள் இன்னுமாய் கொதிப்பாளே அன்றி வேறு ஒரு பலனும் அதனால் இருக்கப்போவதில்லை. அவளிடம் தனிமையில் பேசும் சூழல் கிடைத்தால் அல்லவா எதையும் விளக்க முடியும்? இப்படி அவள் தந்தை உயிருக்குப் போரடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அப்படி அவைகளைப் பற்றி கலந்து பேசி புரிந்து கொள்ளும் மனநிலை அவளுக்கு இருக்குமா? அப்படி இவன் வார்த்தையால் விளக்கியேவிட்டாலும் அவள் அதை புரிந்து இவனை நம்புவாளா?
அவள் அடி வாங்கி இருப்பது அடிப்படை நம்பிக்கையில் அல்லவா? இருப்பதில் ஒரே ஆறுதல் அவர்கள் காதல் இன்னும் மரித்து விடவில்லை என்பதுதான். ஷாலு வேறு திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையே…முதலில் அவளது நம்பிக்கையை இவன் சம்பாதிக்க வேண்டும்…. அதோடு ஷாலுவின் அப்பா இப்படி ஏமாற்றி வேறு மாப்பிள்ளை பார்த்தது அவனுக்கு ஒரு வகையில் கோபமாக வருகிறது என்றாலும் இப்போதைய முதல் தேவை அவர் குணம் பெற்று எழும்புவதுதான்….
“மாமா ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் தான்…ஆனா ஷாலு அத மாத்தி புரிஞ்சுகிட்டா….விளக்கம் சொல்றதுக்கும் எனக்கு டைம்மே குடுக்கலை அவ…” இவனிடம் பதில் எதிர்பார்த்து நிற்கும் தன் மாமாவிடம் சொன்னான். வேறு என்ன சொல்ல முடியும்?
இவனது மாமா இவனை ஒரு பார்வைப் பார்த்தார். நான் பொறுப்புன்னு சொல்லி கூட்டிட்டுப் போய்ட்டு, இப்ப வந்து அவளயே குறை சொல்றியோ என்றது அப்பார்வை. மிகவும் குன்றலாக உணர்ந்தான் சரித்ரன்.
“அவட்ட பேசுனா சரியாயிடும் மாமா…”
‘எது எப்டியோ…எங்க அண்ணா ரொம்ப மான அவமானம் பார்க்றவன்….அதான் இப்டி படுத்துட்டான்….இப்ப அவன் மனசை எப்டி தேத்தன்னு தெரியலை…..”புலம்பினார் ராஜ்குமாரின் தம்பி.
மற்றவர்களுக்கு ஹிந்தி தெரியாதுதான். ஆனால் அங்கிருந்த டேவிட்டிற்கு தெரியுமே….இவர்கள் பேசியது அவர்கள் காதில் விழ மெல்ல இவர்களிடம் வந்தார்.
“உங்க குடும்ப விஷயத்துல தலையிடுறேன்னு நினைக்காதீங்க….” அவரும் ஹிந்தியில் தொடங்க சூழ்நிலையை மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்தனர் சரித்ரனும் சித்தப்பாவும்.
“ராஜா அதாவது ராஜ்குமார் என் ஃப்ரெண்டு….எனக்கு தெரிஞ்சவரை அவன் அவமானத்துலலாம் உடஞ்சு போயிருக்க மாட்டான்….ஆனா அவன் பொண்ணு வாழ்க்கைக்காக ரொம்ப பயந்துருப்பான்…காதலுக்கு ஏற்கனவே ரொம்ப பலி கொடுத்துருக்கான்...அந்த பயம் இன்னும் இருக்குது அவன் மனசுல….பிள்ளைங்க வாழ்க்கை என்னாகுமோன்னு தான் இப்பவும் அவனுக்கு கவலை….பயம் எல்லாம்…” இருவரையும் பார்த்து பொதுப்படையாக சொன்னவர்
சரித்ரனைப் பார்த்து “நீங்கதான் ராஜா முதல்ல பார்த்த மாப்ளைனு புரியுது…..உங்களுக்கு இன்னும் இந்த சம்பந்தத்துல விருப்பம் இருக்குன்னும் தெரியுது, பொண்ணுக்கும் விருப்பம் இருக்குது, ராஜா ஏமாத்தி நடிச்சுலாம் எதுவும் செய்துருக்க மாட்டான்…பிடிக்கலைனா பிடிக்கலைனு முகத்துக்கு நேர சொல்றவன் அவன்….அதனால அவன் பக்கம் இது எதோ மிஸண்டர்ஸ்டாண்டிங்ல வந்த குழப்பமாத்தான் இருக்கும்… அதானால அவன்ட்ட நீங்க இந்த கல்யாணத்துல இன்னும் உறுதியா இருக்கீங்கன்னு காமிக்ற மாதிரி நடந்துக்கோங்க……அவன் நிம்மதி ஆகிடுவான்….அவன் மனசுல பிள்ளைங்க எதிர்காலம் பத்தி வந்திருக்கிற பயம் போற மாதிரி குடும்பத்தை நீங்க நின்னு பார்த்துப்பீங்கன்ற மாதிரி நடந்து காமிங்க….தைரியமாகிடுவான்…இப்போ இருக்க நிலைமைல அத்தன மருந்த விட இதுதான் அவன் உயிரை காப்பாத்தும்…..”
சரித்ரன் இந்த கோணத்தில் இதுவரை யோசித்திருக்கவில்லை என்பது நிஜம். அவரை ஆராய்தலாய்ப் பார்த்தான்.
“ரெண்டு பொண்னுங்க தனியா நின்னு எப்டி சமாளிப்பாங்கன்னு அவனுக்கு பயம் இருக்கும்ல…கிவ் ஹிம் ஹோப்…பீ தேர் அஸ் அ சன்…”
“கண்டிப்பா அங்கிள்….கண்டிப்பா செய்றேன்….” சரித்ரன் தான் செய்ய வேண்டியதைப் புரிந்து கொண்டான். இதுவரை ஷாலு மட்டும் தான் அவனைப் பொறுத்தவரை அவன் குடும்பம்….ஆனால் இப்பொழுது அதன் கோணம் மாறிப் போனது நிஜம்.
ஐ சி யூவிலிருந்த ராஜ்குமாரைப் பார்க்கப் போனான் அவன்.