“ஆதிக் அப்பா பத்தி எனக்குத் தெரியும்…அவர் எந்த தப்பும் கண்டிப்பா செய்திருக்க மாட்டார்…..அதனால நீங்க அவர நம்புறேன்னு சொல்றது எனக்கு ஒன்னும் பெருசா தெரியலை….ஆனா வசியால உன் சித்தப்பாவுக்கு எதோ ப்ரச்சனை ஆச்சுதுன்னு அந்த லேடி சொன்னாங்களாமே….யாருக்குத் தெரியும்…ஒரு வேளை உன் சித்தப்பாவால என் தம்பிக்கு ப்ரச்சனை ஆகி இருக்கலாமில்லையா? என் தம்பி சாவுக்கு காரணமே உன் சித்தப்பாவா கூட இருந்திருக்கலாமில்லையா? நான் ஏன் உன் சித்தப்பாவ நம்பனும்…அப்டிபட்டவங்க வீட்ல இருந்து நான் எப்டி பொண்ணெடுக்க? …”
“ஆண்டிஈ…….” அதிர்ச்சியில் உறைந்து போனாள் ரேயா.
“ஆமா அத சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்….இந்த கல்யாண விஷயத்துல ஆதிக் முடிவா இருக்கான். அவன் முடிவை மறுக்கவோ தடுக்கவோ மாட்டேன்…ஏன்னா அவன் மனசுல இப்டி ஒரு விதைய போட்டதே நான்தான்….இத்தனை வருஷத்துக்குப் பிறகு அவன் இப்பதான் முழுசா சந்தோஷமா இருக்கான். அவன் சந்தோஷம் எனக்கு ரொம்பவே முக்கியம். ஆனால் எனக்கு உன்னை பிடிக்கலை….இந்த கல்யாணத்தை தடுக்கல்லாம் நான் நினைக்க மாட்டேன்….ஆனா உனக்கு என் வீட்ல இடம் கிடையாது….”
இவள் பதிலைக் கூட கவனிக்காமல் அவர் திரும்பிச் சென்றேவிட்டார்.
அடுத்த அரை மணி நேரத்தில் ஆதிக் அங்கிருந்தான் அவள் முன்னால். இவள் மொபைலில் விஷயத்தைச் சொல்லவும் ஓடி வந்திருந்தான்.
“சாரி அம்மா இப்டி செய்வாங்கன்னு நான் எதிர்பார்க்கலை ரேயுமா….இதப் பத்தி கேட்டதுக்கு அம்மா இப்ப கூட என்ட்ட எதுவுமே எதிரா பேசலை…ஆனா உன்ட்ட ஏன் அப்டி சொன்னாங்கன்னு காரணமும் சொல்லலை”
“ஆனா அத அவங்க மறுக்கவும் இல்லதானே…நாம இப்ப என்ன செய்ய ஆதிக்..?” வருத்தமும் அடுத்த என்ன செய்ய என தெரியாத குழப்பமும் தவிப்பும் அவளுள்.
“25 இயர்ஸ் முன்னால நடந்த கேஸ் இது…அத இப்ப ரீ ஓபன் செய்தாலும் எப்ப முடியுமோ..? முடிவும் என்னதா வருமோ…? அப்டி இருக்க அதுக்கான முடிவு வர்றவரை நாம கல்யாணம் செய்யாம வெயிட் செய்றதெல்லாம் எனக்கு புத்திசாலித்தனமான முடிவா தெரியலை….” ஆதிக் பதில் சொல்ல தொடங்க
“அப்ப நேத்து நீங்க என்னை யோசிக்க சொன்னீங்க…?” ரேயா இடையிட்டாள்.
“யோசிச்சு முடிவெடுக்க சொன்னேன்…ஏன்னா நீ எடுக்ற முடிவு வெறும் எமோஷனலா இல்லாம லாஜிக்கலா இருக்கனும்னு நினச்சேன்…நீ ஸ்பிரிச்சுவலா டிசைட் செய்த…அன்ட் இட் வாஸ் பெஸ்ட்…பட் இப்பவும் நீ மேரேஜை போஸ்ட்போன் செய்ய சொன்னா செய்றேன்……..உன்னை நான் கம்பல் செய்ய மாட்டேன்….ஆனா என் சஜசன் என்னன்னா கல்யாணம் நடக்கட்டும்…அம்மா உன்னை கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்க அது சூழ்நிலைய உருவாக்கிக் கொடுக்கும்…..…”
அவர்கள் பேச்சு வார்த்தையின் பலனாக அன்று மாலை அவர்கள் எங்கேஜ்மென்ட் என குறித்திருந்த நேரத்தில் எளிமையாக திருமணமே நடந்து முடிந்துவிட்டது. அடுத்த காரணம் ஆதிக்கிற்கு உடனடியாக சென்று சேரும்படி தஞ்சாவூருக்கு மாற்றலாகி வந்திருந்தது.
வசீகரன் ஆன்ட்ரூ சார்ந்த கேஸை இவன் டிஸ்டர்ப் செய்ய கூடாது என்பதற்காகவே இந்த திடீர் ட்ரான்ஸ்ஃபர் என நினைத்தான் ஆதிக். அந்த சூழ்நிலையில் ரேயாவை தனியாக சென்னையில் விட்டுவிட்டு செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அப்படி அவனை தனியாக அனுப்ப ரேயாவும் தயாராயில்லை. ஆக இன்ஸ்டண்ட் திருமணம்.
ஆதிக்கின் அம்மா சொன்ன வார்த்தைகள் மறந்து போகுமளவிற்கு திகட்ட தித்திக்க படு அமர்களமும் ஆர்பாட்டமும் மகிழ்ச்சியின் மாநாடுமாக நடந்தேறியது திருமணம். ஆதிக்கின் அம்மா ஜெயாவுமே மற்றவர்களிடம் குறிப்பாக ஆதிக்கிடம் நன்றாகவே நடந்து கொண்ட போதும் இவளை மட்டும் கிடைத்த வாய்ப்பிலெல்லாம் வார்த்தையால் வதைத்துவிட்டார். அதுவும் திருமண ஹாலிற்குள் நுழையும் வரைதான். அடுத்து திருமண முறைகளில் மணமகனது பெற்றோர் மேடைக்கு வரும் தேவை எதுவும் இல்லை என்பதால் ஜெயாவிடம் இவள் மாட்டிக் கொள்ளும் சூழல் எதுவும் தோன்றவில்லை. அப்புறமும் கவனித்ததில் ஆதிக் அருகிலிருக்கும்போது அவளை அவர் நேரடியாக எதுவுமே குறை சொல்லவில்லையோ என்றும் தோன்றியது..
விழா முடிந்து அன்று இரவு அவனது வீட்டிற்குத்தான் செல்லவேண்டும். மறுநாள் தஞ்சாவூர் கிளம்பிவிடுவார்கள் எனினும் இன்று இரவு அவள் அங்கு தங்கித்தான் ஆக வேண்டும். என் வீட்ல உனக்கு இடமில்லைனு சொன்ன மாமியார் எப்படி இவளை உள்ளே அனுமதிக்கப் போகிறாராம்? திருமணம் அதோடான ரிஷ்ப்ஷன் முடிந்து உணவு மேஜைக்கு வந்தனர் புது மணமக்கள். இவர்களுக்கு உணவு பரிமாறவென தயாராக நின்றது ஆல்வி சித்தப்பா. அவர் தான் பரிமாறுவார் என நினைத்துக் கொண்டே இவள் ஆதிக் அருகில் அமரும்போது அங்கு வந்தார் அப்பா.
மிக்க மகிழ்ச்சி அவர் முகத்தில். அப்படி ஒரு பெருமிதம், பூரிப்பு. தன் கைகளால் இவளுக்கும் ஆதிக்கிற்கும் இலையை எடுத்து வைத்தார். அவர் கையில் இருக்கிற மெல்லிய நடுக்கம் மகளின் கண்ணில் படுகிறது. அப்பா உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் என புரிகிறது.
ஓ இனி தினமும் நான் அப்பா கூட சாப்ட முடியாது…
அவ்வளவுதான் தந்தையைப் பிரியப் போகும் நினைவில் மனம் மிகவும் தத்தளித்துப் போனது ரேயாவுக்கு. அப்பா பிடிவாதமாக எந்த மகளுடனும் தங்குவதை மறுத்துவிட்டிருந்தார்.
“நிக்கமுடியாம விழுற வரைக்கும் நான் யார் வீட்லயும் வந்து இருக்கமாட்டேன்… அப்றம் கூட வேலைக்கு ஆள் வச்சுகிட்டு என்னை என்னால சமாளிக்க முடியும்…ஆனா நீங்க நொடிக்கு ஒரு தடவை கவலப் படுவீங்கன்றதால அப்டி ஒரு நிலை வந்தா உங்கள்ள யார் கூடனாலும் வந்து இருக்கேன்….இப்போ என்ன கம்பல் செய்ய கூடாது” சேர்ந்து வசிக்க அப்பா ஆணித்தரமாக மறுத்தாலும் பிஸினஸில் இவளது உதவி தொடர வேண்டும் என்றார்.
“பாம்பேல எம் டி இருந்துட்டு சென்னைல பேங்க் நடத்தலையா…எவ்ளவே டெக்னாலஜீஸ்… கம்யூனிகேஷன்ஸ்… அப்பா ஆஃபீஸ் போறேன்… நீ அங்க இருந்தே கவனி…ட்ரெய்ன்ட் எம்ளாயீஸ் இருக்காங்க நாட் அ ப்ராப்ளம்…” ஆக ப்ராக்டிகல் டிஃபிகல்டீஸ் என எதுவும் இல்லை எனினும் பிரிவின் நினைவில் மனம் கணத்து அழுகையாய் கரைய தயாராகியது.
அப்பா இனி தனியாதான் சாப்டுவாங்க….
“ஆல்வி அந்த பால்கோவா எடுப்பா…அன்றில்க்கு அது ரொம்ப இஷ்டம்…..” அப்பா எடுத்து இவள் இலையில் வைக்க ரேயா கண்களிலிருந்து உருவி விழுகிறது கண்ணீர்த் துளி. அவசரமாக ஆறுதலாக இவள் கையைப் பற்றுகிறான் கணவனானவன். “ ரேயு..” என்றபடி.
அப்பாவின் கண்ணிலும் நீரேற்றம். ஆனால் அவர் அதை சட்டை செய்யாமல் இவள் தலை மீது ஒரு நொடி ஆறுதலாக கை வைத்து எடுத்தவர் “சாப்டு….நேராமாகுது பார்…” என்கிறார்.
எதுக்கு…அப்பாவவிட்டுட்டுப் போறதுக்கா? அப்படியே எழுந்து அப்பாவைக் கட்டிக்கொண்டு கதற வேண்டும் போல் வருகிறது ஒரு எண்ணம். ஆதிக்!!! அவனைப் பிரியவும் இருநொடி கூட முடியாதே…என்னதிது…??? இரண்டாய் பிளந்து வலிக்கிறது இதயம்…
இப்பொழுது இவளது அடுத்த இருக்கையில் வந்து அமர்கிறார் ஜெயா. ‘தெய்வமே இப்ப நான் இருக்ற நிலையில இன்னொரு வலிய தாங்க கண்டிப்பா என்னால முடியாது…’ ஆனால் அவரோ “அன்றில் சாப்பாட பார்த்து சாப்டுமா நீ…சாப்டாமலே கிளம்பினாலும் அப்பாவுக்கு கஷ்டமாத்தான இருக்கும்…? ஆதிக்….. என்னல்லாம் மெனுல இருகுதுன்னு பார்த்து வச்சுக்கோ…எல்லாம் அன்றில்க்கு பிடிச்சதா உன் மாமா ஏற்பாடு செய்துருக்காங்க…..இனி நீதான் அவளுக்கு என்ன பிடிக்கும்னு பார்த்துகிடனும்…” அவர் இயலே அதுதான் என அவளிடம் அக்கறையாக தொடங்கியவர் அதன் பின்னும் அப்படியே தொடர்ந்தார்.
ஆனாலும் காரில் ஆதிக்குடன் அவனது வீட்டிற்கு செல்லும் போது இவளுக்கு படபடப்பாகத்தான் இருந்தது. இவளது சில்லிட்டிருந்த கையை அவள் கணவன் விடவே இல்லை. “ போறது நம்ம வீட்டுக்குத்தான்னு யோசி…உனக்கு இவ்ளவு டென்ஷனா இருக்காது ரேயுமா…அதோட எப்பவும் உன்கூட நானிருப்பேன்…” ஆதிக் தான் இவளை ஆறுதல் படுத்த முயன்றான்.