04. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி
வித்யா மாமியார் ..அவர் மாமியார் என்ற பதவி அவருக்கு மகுடம் சூடினது போல் நினைப்பு.. வித்யா திருமணத்தின் போதும் ஏதாவது குற்றம் குறை கண்டுபிடித்து படுத்தி எடுத்தார்..
சரவணனும் அவன் அப்பாவும் தான் அவ்வப்போது வந்து அவரை டைவேர்ட் பண்ணி விடுவார்கள்.
சமயத்தில் வித்யா மேலும் பாய்வார் .. ஆனால் அந்த சமயம் சரவணன் வந்து விட்டால் அவரை அடக்கி விடுவான்.
ஆனால் தன் சம்பந்தியை பார்த்தல் கொஞ்சம் கெத்து காமிப்பார். அன்றும் அதே போல் ஏதோ என்று எண்ணியிருந்தவர்கள் , வீட்டில் எல்லோர் முகத்திலும் சஞ்சலத்தை கண்ட பிரத்யுஷாவும், அவள் மாமியாரும் எப்படி கேட்பது என்று யோசித்து கொண்டே இருக்க, வித்யாவின் மாமியார் ஜெயா, வித்யா கணவர் சரவணனிடம்
“ஏம்பா சரவணா ..? நீ என்ன முடிவெடுத்துருக்க ? “ என்று வினவினார்...
அவள் மாமனாரோ “விடேன் .. ஜெயா... அவங்களே முடிவு செய்யட்டும்.. நமக்கு என்ன பிரச்சினை ?” என்றார்.
வித்யாவின் அம்மா கமலா “என்ன விஷயம் சம்பந்தி ?”
“ஒன்னும் இல்ல.. சம்பந்தி.. எங்க பேரனோ ... பேத்தியோ வரும் நேரம் உங்க மாப்பிள்ளைக்கு பதவி உயர்வோடு வெளிநாட்டுக்கு போற வாய்ப்பு கிடைச்சிருக்கு.. ஆனால் உங்க பொண்ணும், மாப்பிள்ளையும் வேண்டாம்னு சொல்றாங்க...”
“ஏன் மாப்பிள்ளை ?”
“இல்ல அத்தை... வித்யா எப்படியும் இன்னும் மூன்று மாசத்துக்கு அதிகமா ட்ராவல் பண்ணக் கூடாது... நான் போகணும் னா அடுத்த மாசம் போய் சேரனும்... போனால் எப்படியும் ஒரு வருஷத்துக்கு முன்னாடி வர முடியாது... அதனால் நானும், வித்யாவும் வேண்டாம்னு நினைக்கிறோம்.. அம்மாவிற்கு அதுக்கு கோபம்..”
“ஒரு வருஷம் தானடா... திரும்பி பார்க்கறதுக்குள்ள ஓடி போய்டும் ... எனக்கு மட்டும் என் பையன் வெளி நாட்டுலே இருக்கானு சொல்ல பெருமையா இருக்காதா?”
“ஏன் அம்மா , கொஞ்சமாவது யோசிச்சு பேசறியா? இந்த நேரம் நான் வித்யாவ கூட்டிட்டு போக முடியாது..”
“ஏன் .. உன் மச்சான் ... கல்யாணம் ஆகி பத்து நாள்லே விட்டுட்டு போகலியா?”
“அவர் போனார் னா அதுக்கு நானும் போகணுமா...எனக்கு என் குழந்தையோட வளர்ச்சி முக்கியம்.. வித்யா ஏங்கினா, அது குழந்தைய பாதிக்கும்.. அதுக்கு நான் விட மாட்டேன்... வித்யாவும் என்னோட வர்றதா இருந்தாதான் நான் வெளிநாடு போவேன்.. குடும்பத்தை விட்டு போய் சம்பாதிச்சு சாப்பிடனும்நு அவசியம் எனக்கு இல்லை... இப்போ இல்லைனா... என்ன ... இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு இந்த ஆபர் வரும்.. அப்படியே வரலைனாலும் பரவாயில்லை.. நான் போக மாட்டேன்..” என்று முடித்தான்
வித்யாவின் மாமியார் முனகி கொண்டே நகர, கமலாவும் பிரத்யுஷவும் செய்வதறியாது முழித்தனர்...
சரவணன் பேசும்போது இவர்கள் இருவர் இருப்பதையும் மறந்து விட்டான்... அவன் அம்மா போகவும், இவனும் எழுந்து விட்டான்.
வித்யா தன் அம்மாவிடம் “இதுதான் அம்மா ஒரு வாரமா, என் மாமியார் போட்டு பேசியே கொல்றாங்க... என்னாலே சந்தோஷமாவே இருக்க முடியல..“ என்றாள்..
“சரி விடு.. அவங்க ஆதங்கம் .. ஏதோ சொல்லிட்டு போகட்டும்.. இப்போ உடனே வேண்டாம்.. ஒரு பத்து நாள் கழிச்சு நீ நம்ம வீட்டுக்கு வந்து ஒரு மாசம் இரு.. உங்க மாமியார் சமாதானம் ஆயிடுவாங்க.. “ என்றாள்..
பிரத்யாவும்.. “ஆமாம்... வித்யா. அத்தை சொல்ற மாதிரி செய்.. அவங்களும் சீக்கிரம் சரி ஆகிடுவாங்க.. “
“ஹ்ம்ம்..” என்றாள் வித்யா..
அவர்கள் இருவரும் கிளம்பி வீடு வந்தனர்... பிரத்யாவிற்கு ஏனோ மனம் சரியில்லை.. சரவணன் கூறியது போல் பணத்திற்கோ , ஆடம்பரதிற்கோ, இல்லை.. பெருமைக்கோ ஆதர்ஷ் குடும்பத்தை விட்டு செல்லவில்லை. ஆனால் ஊரில் இப்படி எத்தனை பேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ ? என்று கவலையாக இருந்தது..
மற்றவர்களை பற்றி இவளுக்கு அக்கறையில்லை.. ஆனால் நெருங்கிய உறவினர்களே இப்படி எண்ணினால் என்று கோபமாக வந்தது..
அன்று இரவு அவன் வழக்கம் போல் சாட் .. செய்ய வரவும்,
“என்ன .. பிரயும்மா.. வித்யாவை பார்த்து விட்டு வந்தீர்களா? எப்படி இருக்கிறாள்? சந்தோஷமாக இருக்கிறாளா? ஹெல்த் எப்படி இருக்கிறது? “
“அவள் நன்றாக இருக்கிறாள்.. என்று தொடங்கி அங்கே நடந்ததை சொன்னாள். அவனுக்கும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.. ஆனால் காட்டிக் கொள்ளாமல்,
“விடு டா.. அந்த அத்தை சீக்கிரம் சரி ஆகி விடுவார்.. முடிந்தால் நான் நாளைக்கு மாப்பிள்ளையிடம் பேசுகிறேன்.”
“அது இல்லை ஆதிப்பா.. எனக்கு என்னவோ அத்தையும், வித்யாவும் இதில் பயங்கர மூட் அவுட்டில் இருப்பதாக தெரிகிறது... எனக்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை..”
பேச்சு வாக்கில் .. அவள் ஆதிப்பா என்று அழைத்ததை இருவருமே உணரவில்லை.
“நீ ஒன்றும் செய்ய முடியாது.. ப்ரத்யு.. பார்க்கலாம் .. “ என்றவன்.. மேலும் சில நிமிடங்கள் சாதாரணமாக பேசி விட்டு .. வைத்தான்..